பதிவு செய்த நாள்
01
பிப்
2020
12:02
சென்னிமலை: சென்னிமலை அருகே, ஸ்ரீஞானசாயி உலக சமாதான ஆலயம், சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சென்னிமலை அருகே, முகாசிபிடாரியூர், பிடாரியூர் ஈஸ்வரன் கோவில் அருகே, ஸ்ரீஷீர்டி சாய்பாபா ரியான் அறக்கட்டளை சார்பில், சீரடி சாய்பாபா கோவில், ஸ்ரீஞானசாயி உலக சமாதான ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. முன்னதாக சீரடி சாய்பாபா மார்பளவு சிலை மற்றும் தத்தாத்ரேயர் மற்றும் விநாயகர் சிலைகள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சீரடி சாய்பாபா கோவிலில் இருந்து வந்த குருக்கள், சென்னிமலை முருகன் கோவில் நடராஜ சிவாச்சாரியார் தலைமையில், 22 சிவாச்சாரியார்கள் யாக பூஜை செய்து கும்பாபிஷேகத்தை செய்வித்தனர். இதையடுத்து பாபாவுக்கு ராஜஅலங்காரம் செய்து ஆரத்தி எடுக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் நடந்து, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றும்போது, கருடன் வட்டமிட்டது. இதைப் பார்த்த பக்தர்கள், சாய்பாபா மகராஜ்க்கு ஜெய் என, கோஷமிட்டனர்.