உத்தரகாண்ட் கார்த்திக் சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்; தமிழக ஆதீனங்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 10:05
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் இரண்டாவது முறையாக 108 சங்காபிஷேகம் தமிழக ஆதீனங்கள் தலைமையில் நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்று பக்தர்கள் கரகோஷம் எழுப்பினர்.
உத்தரகாண்ட் மாநிலம் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆன்மீக பகுதிகளை அனைத்து மாநில மக்கள் கண்டு தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ருத்ர பிரியக் மாவட்டத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி மலையில் உள்ள கார்த்திக் சுவாமி ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் இரண்டாவது முறையாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ஏராளமான முருக பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டனர். அனைவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.5 கி.மீ உயரத்தில் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலுக்கு அனைவரையும் நடைபாதை மூலம் கிராம மக்கள் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் இளைப்பாருவதற்கு மண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுற்றுளா துறை சார்பில் செல்லும் வழியில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு தண்ணீர், பழங்கள் வழங்கப்பட்டு மலை மீது அழைத்துச்சென்றனர்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் விமான போக்குவரத்து துறை மற்றும் நிதித்துறை கூடுதல் செயலாளர் ரவிசங்கர் ஐஏஎஸ் தலைமையில் அவிநாசி ஆரூர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 10க்கும் மேற்பட்ட வேத மந்திரம் முழங்க 108சங்கு அபிஷேகம் தமிழக ஆதீனங்கள் மயிலம் ஆதீனம். கௌமாரம் மடாலயம் குமரகுரு சுவாமிகள் கூனம்பட்டி ஆதீனங்கள் முன்னிலையில் கார்த்திக் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அபிஷேக ஊர்வலமாக கோயிலை சுற்றி சிவாச்சாரியார்களின் தலைமையில், செயலர் ரவிசங்கர் உடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் மடாதிபதிகளும் வலம் வந்து சிறப்பித்தனர். இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்று பக்தி பரவசம் எழுப்பினர். விழாவினை மேலும் சிறப்பிக்க அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையில் கோயிலுக்கு மேள தாளங்கள் முழங்க வருகை தந்தனர். தமிழகத்திலுள்ள அறுபடை முருகன் கோயிலில் இருந்து அங்கவஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டு கார்த்திக் சுவாமி மீது சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த முருகன் கோயில் சிவாச்சாரியருக்கு சுற்றுலா துறைசார்பில் நிதித்துறை செயலர் ரவிசங்கர் மரியாதை செய்தார். விழாவில் பிரதமர் ஆலோசகர் பாஸ்கர்குல்பே, ஜோதிடர் ராஜகோபால், சுற்றுலாத்துறை இயக்குனர் ஸ்மித் பன்ச், ஆன்மிகம் மற்றும் சமூக ஆர்வலர் செல்ல பாண்டியன் சுற்றுலா வழிகாட்டி முரளி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அறுபடைவீடு முருகன் ஆலயங்களில் சிவாச்சாரியார் சிருங்கேர்மடம் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் வீணை ராஜேஸ் வைத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.