பதிவு செய்த நாள்
18
மே
2024
10:05
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம், கிராமசாந்தி பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை 6:00 மணிக்கு, மேள தாள வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றத்துடன், தேர்த் திருவிழா துவங்கியது.
தினமும் காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்; மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் காலை மற்றும் மாலை என, இருவேளைகளிலும் தேர் வீதிகளில், திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரரும், மாலையில் சோமாஸ்கந்தரும் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முதல்நாளில் கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம், இன்று பூத வாகனம், அன்ன வாகனம், 19ம் தேதி, ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு வாகனம், சேஷ வாகனம், 20ம் தேதி கற்பக விருட்ச வாகனம், அதிகார நந்தி, யாழி வாகன காட்சி. 21ம் தேதி பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி, ஆறாவது நாள் விழாவில், திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகன உலா நடைபெறுகிறது. 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு, விழாவின் முக்கிய நிகழ்வான விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஒன்பதாவது நாளான 25ம் தேதி, குதிரை வாகன காட்சி, மாலையில் பரிவேட்டை; 26ம்தேதி வீரராகவ பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா. 27ம் தேதி மகா தரிசனம்; 28ம் தேதி, மஞ்சள் நீராட்டு; 29ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்திலுள்ள கலையரங்கில் தினமும் மாலை, 6:00 மணிக்கு, இசை, ஆன்மிக சொற்பொழிவு, நாட்டியம், பட்டிமன்றம், பக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.