மாசிமக விழாவின் கதாநாயகர் எமதர்மன். ஒரு காலத்தில் சிவபெருமான் இவருக்கு நிறைய வேலை கொடுத்து விட்டார். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் உயிரையும் பறித்து விட்டு, எமனும் இறக்க வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி உலகம் தண்ணீரால் அழிந்தது. எல்லா உயிர்களையும் அழித்த எமன் தானும் இறந்தான். பின் புதிய உலகத்தைப் படைத்தார். யார் என்று பாராமல் உயிரைப் பறிக்கும் எமனும் அப்போது பிறந்தார். உலகம் அழிந்த அந்த நாளே மாசி மகம். எமன் என்ற வார்த்தையை ‘இயமன்’ என சொல்வதே சரியானது. இதற்கு ‘எல்லாவற்றையும் அடக்குபவன்’ என்று பொருள்.
வாழும்காலத்தில் மனிதன் யாருக்கும் அடங்காமல், மமதையுடன் ஆட்டம் போடுவான். எமன் அவன் மீது பாசக்கயிறை வீசினால், ஆட்டபாட்டம் அடங்கிவிடும். எமனைக் ‘கூற்றுவன்’ என்றும் சொல்வர். உயிரையும், உடலையும் பிரித்து கூறு போடுபவன் என்பது பொருள். ‘சமன்’ என்றும் பெயருண்டு. ஏழை, பணக்காரர், மனிதன், மிருகம், பூச்சி என்ற வேறுபாடெல்லாம் இவருக்கு கிடையாது. யாருடைய உயிரையும் முன்னறிவிப்பு இன்றி பறிப்பார். இவரை ‘மறலி’ என்றும் சொல்வர். இதற்கு ‘வலிமை மிக்கவர்’ என பொருள். வாழ்க்கையை அந்தத்துக்கு (முடிவு) கொண்டு வருபவர் என்பதால் ‘அந்தகன்’ என்றும் சொல்வர்.