சிறுவனாக இருந்தபோது, காந்திஜி, இரவில் திருடன் வந்துவிடுவானோ, பாம்பு வந்து விடுமோ என்று பயப்படுவார். இருட்டு வேளையில் பேய் வந்து தன்னைத் தின்றுவிடும் என்று நடுங்குவார். ஒருநாள் இரவு, இருட்டு அறை ஒன்றுக்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. ‘பயப்படாமல் போ’ என்று மற்றவர்கள் சொல்லியும் தைரியம் வரவில்லை. அவரது வீட்டில் ரம்பா என்ற வேலைக்காரப்பெண் இருந்தார். அவர் காந்திஜியின் வளர்ப்புத்தாயும் கூட! அவரை ‘சின்னம்மா’ என அழைப்பார் காந்திஜி. அவர், “மோகன்தாஸ்! உனக்கு பயம் தோன்றும்போதெல்லாம் ‘ராம்’ என்ற மந்திரத்தைச் சொல். பயம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போய்விடும்,” என்றார். பிஞ்சுமனத்தில் அந்த மந்திரம் ஆழப்பதிந்தது. நம்பிக்கையுடன் ‘ராம் ராம்’ என்று சொன்னபடியே அறைக்குள் சென்று திரும்பினார். எப்போதும் ராமநாமத்தை ஜெபிக்கத் தொடங்கினார். பயம் அறவே நீங்கியதை உணர்ந்தார். கோட்சே துப்பாக்கியால் சுட்டபோதும் கூட அவர் ‘ஹே! ராம்!’ என்று சொல்லி உயிர் நீத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி,‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற ராமனின் பாடலைப் பாடத் தவறியதில்லை.