பிரான்ஸ் நாட்டில் சாப்பல் என்னும் புகழ்மிக்க கவிஞர் இருந்தார். அவரைத் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனக்கும் பெருமையில் பங்கு சேரும் என ‘பிரஸ்ஸாக் பிரபு’ என்னும் மன்னர் விரும்பினார். அதற்காக தன் அரண்மனைக்கு வந்து நிரந்தரமாக தங்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பினார். கடிதம் கண்ட சாப்பல் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். ஆனால் போகும் வழியில் ‘புளூடார்க்’ என்னும் கிரேக்க அறிஞர் எழுதிய நுாலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பக்கத்தில், ‘பிரபுக்களுடன் சேர்ந்து வாழ நினைப்பவன் நாளாக நாளாக பிரபுக்களுக்கு அடிமையாக மாறுவான்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதைப் படித்த சாப்பலுக்கு புத்தி விழித்துக் கொண்டது. அடிமையாக வாழ்வது அறிஞருக்கு அழகல்ல என தன் ஊருக்கே திரும்பினார். தன்னிடம் உள்ள பொருளாதாரத்திற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொண்டார்.