மாவீரர் அலெக்சாண்டரின் முன்னர் கடல் கொள்ளைக்காரனான டியோண்டஸ் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான். அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, ‘‘இப்படி நாசவேலைகளைச் செய்ய எங்கிருந்து துணிச்சல் வந்தது?’’ எனக் கேட்டார் அலெக்சாண்டர். ‘‘பிரபு! உலகத்தையே அடக்கியாள வேண்டும் என்ற துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்து தான் எனக்கும் துணிச்சல் வந்தது’’ என்றான் கொள்ளைக்காரன். ‘‘அதென்ன இப்படி பேசுகிறாய்?’’ என மறுத்தார் அலெக்சாண்டர். ‘‘உண்மையைத் தான் சொல்கிறேன். என்னிடம் ஒரு கப்பல் இருப்பதால் கடல் கொள்ளைக்காரன் என இகழ்ச்சியாக கருதுகின்றனர். தங்களிடம் கடல் படையே இருப்பதால் மாவீரன் எனக் கொண்டாடுகின்றனர். இது தான் உலகத்தின் இயல்பு! இருவரும் செய்யும் செயல் ஒன்றே. ஆனால் அதன் அளவில் நாம் வேறுபடுகிறோம்’’ என விளக்கம் அளித்தான். இதைக் கேட்ட அலெக்சாண்டர் வாயடைத்துப் போனார். உடனே அவனை விடுவிக்க உத்தரவிட்டார்.