மகாசுவாமிகளை தரிசிக்க வந்த பக்தருக்கு மனதில் ஒரு சந்தேகம். ‘சுவாமி! மனிதன் ஆயுள் முடிந்த பின் என்னவாகிறான்?’ எனக் கேட்டார். பதிலளிக்கும் முன் அவரது நெற்றியை பார்த்தார் சுவாமிகள். திருநீறு இல்லாமல் பாழ்நெற்றியாக இருந்தது. அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் பேசத் தொடங்கினார் சுவாமிகள். ‘உடம்பு போனதோடு மனிதனும் போய் விடுவதில்லை. பாரத தேசம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தோன்றிய மகான்களும் இந்த உண்மையைக் கண்டனர். மனிதன் வாழ்நாளில் தேடிய பணமும், பொருளும் உயிர் போன பின்னர் சிறிதும் பயன்படாது என்பதை உணர்ந்த அவர்கள், உடம்பு போன பின்பு நற்கதி அடைய உயிர் செய்ய வேண்டியதை ஆராய்ந்து அறிந்தனர். பலரும் பலவழிகளில் உண்மையைக் கண்டனர். உலகிலுள்ள எல்லா மதங்களும் இப்படி வந்தவையே. மரத்தில் இருக்கும் இலை பச்சையாக இருக்கிறது. பழுத்த இலை மஞ்சளாக இருக்கிறது. இப்படி பச்சை, மஞ்சள், சிவப்பு என்றெல்லாம் பொருட்கள் பல நிறங்களில் இருக்கின்றன. அவை எதுவாக இருந்தாலும், நெருப்பில் இட்டால் அது கரியாகி விடும். ஆக கருப்பு மட்டுமே எல்லாப் பொருட்களுக்கும் இயல்பான நிறமோ? மற்ற நிறம் எல்லாம் அவை பூசிக்கொண்ட சாயமோ என நமக்குத் தோன்றும். ஆனால் பேச்சுவழக்கில் ‘ஒரு பொருளின் சாயம் வெளுத்துப் போச்சு’ என்றல்லவா சொல்கிறோம்? கருப்பான பொருட்களை மீண்டும் ஒரு முறை நெருப்பில் இட்டால் அவை நீற்றுப் போகும். இப்படி நீறாக்கினால் வெளுப்பாகி விடும். இந்த உலகம் பலவித சாயங்களைப் பூசிக் கொண்டிருக்கிறது. அவை யாவும் மறைந்த பின் எஞ்சியிருப்பது உண்மைப் பொருளான ஒன்று மட்டுமே. அதையே ‘கடவுள்’ எனச் சொல்கிறோம். வெள்ளை ஒன்று மட்டுமே நிலையானது. நம்மிடம் உள்ள பொருள்கள் எல்லாம் சாயம் என்பதால் மறைந்து விடும். எனவே, உண்மையை நம்மிடம் நிலைநிறுத்த வெண்மையான திருநீற்றை நெற்றியில் பூசும்படி கூறினார்கள். ‘நீறில்லா நெற்றி பாழ்’ என அவ்வையார் சொன்னதும் இதைத்தான்! சுவாமிகள் மீண்டும் பக்தரின் நெற்றியைக் கூர்ந்து பார்த்தார். அறியப்படாத ரகசியமான திருநீற்றினை பூசிக் கொள்ள சுவாமிகளிடம் பெற்று மகிழ்ந்தார்.