பதிவு செய்த நாள்
22
ஜூன்
2020
11:06
திருப்பதி: திருமலையில், நேற்று சூரியகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பக்கவாட்டில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் தேவஸ்தானம் தபயக்ஞத்தை நடத்தியது. நேற்று காலை, 10.38 மணிமுதல் மதியம், 1.38 வரை கங்கண சூரியகிரகணம் நிகழ்ந்தது. இதை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் சனிக்கிழமை இரவு ஏகாந்த சேவைக்கு பின் மூடப்பட்டது.
காலை சூரியகிரகணம் நடந்த சமயத்தில் உலக நன்மைக்காக, திருக்குளக்கரையில் தேவஸ்தான ஊழியர்கள், ஆகம ஆலோசகர்கள், வேத பண்டிதர்கள், ஜீயர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கூடி தபயக்ஞம் நடத்தினர். அதில் பல மந்திர உச்சாடனங்கள், ஸ்லோகங்கள் உள்ளிட்டவை பாராயணம் செய்யப்பட்டது. சூரியகிரகணம் நிறைவு பெற்ற பின், ஏழுமலையான் கோவில் மதியம், 2.30 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தி, புண்ணியாக வாசனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. பின் தினசரி கைங்கரியங்கள் தொடர்ந்தது. அதனால் நேற்று முழுவதும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சூரியகிரகணத்தை முன்னிட்டு அன்னதான கூடமும் மூடப்பட்டு கிரகணத்திற்கு பின் சுத்தி செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அன்னதானம் வழங்குவது துவங்கப்பட்டது.
திருப்பதி மற்றும் இதர பகுதிகளில் உள்ள தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய கோவில்களும் சூரியகிரகணத்திற்காக மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின் திருப்பதி கோதண்டராமர் கோவிலிலும், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்வர ஸ்வாமி கோவிலிலும் மட்டும் மாலை ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது. மற்ற கோவில்களில் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.