மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை; நீதிமன்றத்திற்கு உதவும் வக்கீல்கள் குழு ஆய்வு
பதிவு செய்த நாள்
24
டிச 2025 10:12
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் நீதிமன்றத்திற்கு உதவும் வக்கீல்கள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில், 110 கோடி ரூபாய் மதிப்பில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை, கோட்டூர் கார்டனை சேர்ந்த முரளிதரன் என்பவர், ‘சிலை அமைத்தால் யானைகளின் வழித்தடம் பாதிக்கும்’ என, எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, சிலை அமைக்க உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் நீதிமன்றத்திற்கு உதவும் குழு நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சந்தானராமன் மற்றும் அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோர் அடங்கிய, அமிக்கஸ் கியூரி குழு, மருதமலை அடிவாரத்தில் சிலை அமைக்க உள்ள இடங்களில் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் அருகில், முன்பு சிலை நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், தற்போது சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இடம், பக்தர்களின் வசதிக்காக பார்க்கிங் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலை., வளாகத்தில் உள்ள இடம், யானைகள் வழித்தடம் உள்ள பகுதி என, அறநிலையத்துறை கூறிய இடம் ஆகியவற்றை, சிறப்பு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, சிலை அமைக்க உள்ள இடம் மற்றும் பார்க்கிங் அமைய உள்ள இடத்திலிருந்து, வன எல்லை எவ்வளவு துாரத்தில் உள்ளது, இப்பகுதியில் யானை நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள பள்ளவாரி ஓடைகள் குறித்து, வருவாய் துறை அதிகாரிகளிடமும், அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த இடங்களில் சிறப்பு குழுவினர்களுக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தனர். அதோடு, சிலை அமைக்கும் இடத்தை சுற்றி உள்ள இடங்கள் தொடர்பாக, வருவாய் துறை வரைபடத்தை பார்வையிட்டனர். பின், அங்கிருந்து, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். ஆய்வின்போது, வனத்துறை பிளீடர் சீனிவாசன், அறநிலையத்துறை, வருவாய், வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அனுவாவி சுப்பிரமணியர்: கோவிலில் ஆய்வு கோவை அடுத்த அனுவாவி கோவிலின் அடிவாரத்தில் இருந்து, 420 மீட்டர் உயரத்தில், 13 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் அமைக்க, 2023ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இத்திட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில், யானைகளின் வலசை பாதையில் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என, எதிர்த்தனர். இதையடுத்து, நேற்று காலை கோவை வந்த அமிக்கஸ் கியூரி குழுவினர், ரோப்கார் அமைய உள்ள இடம், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். நேற்று கோவை வடக்கு வருவாய் துறை அதிகாரிகள் குழு, ஆனைகட்டியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகளில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
|