உழைப்பினால் மனிதனின் மதிப்பு அதிகமாகச் சுடர்விட்டு பிரகாசிக்கும். இதை நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்வார்கள். தங்கள் செருப்புகளைத் தாங்களே செப்பனிட்டுக் கொண்டார்கள். தங்கள் உடைகளைத் தாங்களே தைத்துக் கொண்டார்கள். தங்கள் துணைவி யருக்கு ஒத்தாசை செய்தார்கள். தங்கள் ஆடுகளிடம் தாங்களே பால் கறந்தார்கள்.வெளியிலும் அவர்கள் தங்கள் தோழர்களுடன் சேர்ந்து வேலை செய்வார்கள். மதீனா சென்றடைந்ததும், அவர்கள் கட்டத்தொடங்கிய மஸ்ஜிதுக்காக மற்றவர்களுடன் சேர்ந்து நாயகம்(ஸல்) அவர்களும் கல் சுமந்தார்கள். அப்போது அவர்களது தோழர்கள்,பெருமானே! எமது உயிர்கள் உங்களுக்கு குர்பானியாகட்டும்! நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து கடினமான பணிகளைச் செய்தார்கள்.ஒரு சமயம், அவர்கள் தங்கள் தோழர்களுடன் பயணம் செய்யும் போது, வழியில் உணவு சமைப்பதற்காக விறகு சேகரித்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது தோழர்கள், இறைyதே! இந்த வேலையை நாங்களே செய்து கொள்ள முடியும்! என்றனர்.அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், அது உண்மை தான். ஆனால், நான் உங்களை விட உயர்வான ஸ்தானத்தில் என்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தன் தோழர்களை விட தன்னை உயரிய நிலையில் வைத்திருப்பவனை அல்லாஹுத் தஆலா நேசிக்கமாட்டான், என்று பதிலளித்தார்கள்.புரிந்து கொள்ளுங்கள்! எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவரவர் கடமைகளை அவரவரே செய்ய வேண்டும். உழைப்பே உயிரென வாழ வேண்டும்.