பதிவு செய்த நாள்
01
மார்
2026
06:03
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ஆராதனை மகோத்சவம் நேற்று நடந்தது. இதில், காஞ்சி மடாதிபதிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ஆராதனை மகோத்சவம் காஞ்சி சங்கரமடத்தில் கடந்த 27ம் தேதி துவங்கியது. இதில், தினமும் காலை வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடந்து வந்தது. ஜெயேந்திரரின் வார்ஷிக ஆராதனை மகோத்சவ தினமான நேற்றுவ காலை 7:00 மணிக்கு ருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், தொடர்ந்து சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. இதில், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 9:00 மணியில் இருந்து, பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் ; ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் எட்டாவது வார்ஷிக மகோத்சவஆராதனையையொட்டி, காஞ்சி சங்கரமடம் சார்பில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ் குமார், விவேகானந்தன் உள்ளிட்ட குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.