பதிவு செய்த நாள்
01
மார்
2026
05:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மன் அழைத்து வரப்பட்டார். பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, வெங்கடாசலபதி ஏஜென்சிஸ் உரிமையாளர் கோவிந்தன் குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தாயார் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளி சப்பரத்தில், அரங்கநாத பெருமாள் திருமண கோலத்தில் எழுந்தருளினார். பின், திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. நெய்வேத்தியம், தீபாராதனை காண்பித்த பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரண்டதால், மண்டபத்தின் உள், கொடிமரம் முன், கோவில் ராஜகோபுரம் முன் என, மூன்று இடங்களில் பெரிய எல்.ஈ.டி., திரை வாயிலாக, திருக்கல்யாணம் வைபவம் காண, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு தன்னார்வ அமைப்பினர், பக்தர்களுக்கு தாலி சரடு, பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.