பதிவு செய்த நாள்
12
ஜூலை
2020
01:07
சென்னை: வேதத்தின் ஆலமரமாக விளங்கிய, பாஷ்ய ரத்னா பிரம்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள், 74, சிவலோக பதவி அடைந்தார்.
தமிழகத்தின், நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில், 1946ம் ஆண்டு பிறந்தார். காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணத்தில், தன் குருகுல வாசத்தை முடித்த இவர், யஜுர் வேதத்தில் மிகவும் கடினமான பயிற்சியான கனம், வேத பாஷ்யம் ஆகியவற்றில், பாண்டித்யம் பெற்றார். திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் சேவகம் செய்து வந்த இவர், காஞ்சி மகா பெரியவர் உத்தரவின்படி, 1984ம் ஆண்டு, ஐதராபாத்தில், வேத பவனம் என்ற, பாடசாலையை நிறுவினார். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், ஏராளமான கனபாடிகளை உருவாக்கினார். அவர்கள், உலக அளவில் வேத பாரம்பரியத்தை வளர்த்து வருகின்றனர்.
சிருங்கேரி சாரதா பீடத்திற்கும், காஞ்சி மடத்திற்கும் மிக நெருக்கமானவர் வெங்கடராம கனபாடிகள். சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குருஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், வேத பவனத்திற்கு விஜயம் செய்தார். அப்போது, அங்கு போதிக்கப்படும் முறையை பார்த்து, இந்த வேத பவனம், வேத கனபாடிகளை உருவாகும் உற்பத்தி ஸ்தலமாகத் திகழ்கிறது என, புகழாரம் சூட்டினார்.அரசின், மஹா மஹோபாத்யாயா உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானத்தில், வேத குழுவிற்கு ஆலோசகராகவும் இருந்தார். சில நாட்களுக்கு முன், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டவர், ஐதராபாத்தில் உள்ள விருஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் (ஜூலை 10) சிவலோக பதவியை அடைந்தார். அவரது மறைவு வேத விற்பன்னர்கள், ஆன்மிகவாதிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது குமாரர் ஸ்ரீ ஸ்ரீராம கனபாடிகளும் மிகச் சிறந்த வேத நிபுணராக உள்ளார். இவரின் இரு பேரன்களும் வேதம் பயின்று வருகின்றனர்.