பாண்டியர் கால கல்வெட்டு மேல்மலையனுாரில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2020 10:07
செஞ்சி : மேல்மலையனுாரில் ராஜ நாராயண பெருமாள் கோவிலில் பாண்டியர் கால கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ள ராஜ நாராயண பெருமாள் கோவிலில் விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் தலைமையில், பொறியாளர் பிரகாஷ், வரலாற்று மாணவர் அசோக் ராஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இதில் பாண்டியர்கால கல்வெட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.இது குறித்துமுனைவர் ரமேஷ்கூறியதாவது. மேல்மலையனூரில் உள்ள ராஜ நாராயண பெருமாள் கோவிலில் நடத்திய ஆய்வில் கோவிலின் தென்புறஅதிட்டானத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது.இந்த கல்வெட்டு மூன்றாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 30 ஆவது ஆட்சியாண்டில் கி.பி., 1298 இல் பொறிக்கப்பட்டுள்ளது.சோழர் ஆட்சி முடிந்து பாண்டியர் ஆட்சி வந்த போது பெருமாள் கோவில் கட்டப்பட்டதையும், இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில், பல்குன்றக் கோட்டத்தில் உத்தம சோழ வளநாட்டில், சிங்கபுர நாட்டில் மலையனூர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராஜேந்திரசோழ நல்லூர் என்ற பெயரும் இவ்வூருக்கு இருந்தது கல்வெட்டின் மூலம் தெரிகிறது. மேல்மலையனுாரை சேர்ந்த மாடமுடையான் காமன் பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர் கோவிலை கட்டியதை கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். சிங்கபுரம் என்பது செஞ்சிக்கு அருகே உள்ள சிங்கவரம் என்று ஊரை குறிக்கிறது.கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோவில் கட்டப்பட்டதையும், அக்காலத்தில் இருந்த நாட்டுப் பிரிவுகள் பற்றியும் அறிய முடிகிறது. சோழர், பாண்டியர் காலம் முதல் தற்போது வரை மலையனூர் என்ற பெயர் மாறாமல் ஆயிரம் ஆண்டுகளாக அதே பெயரில் அழைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.