அன்பர் ஒருவரின் மனதில் ஒரு சந்தேகம். ‘மனசுக்குள் பக்தி இருந்தால் போதாதா? வெளிவேஷம் எல்லாம் தேவையா? திருநீறு, குங்குமம் இடுவது எதற்காக?’ என எண்ணினார். காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்த போது தயக்கமுடன் கேட்டார். புன்னகைத்த சுவாமிகள், ‘‘மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கான அடையாளம் மட்டுமல்ல. அது உடல்நிலையை சோதிக்கும் கருவியும் கூட. எனவே அது கட்டாயம் தேவை. ஆனால் வழக்கறிஞர்களின் கறுப்புக் கோட்டு அப்படியல்லவே? கோட்டை அணியாவிட்டால் அவர்களால் வாதாட முடியாதா என்ன? ஆனாலும் நீதிமன்றத்தில் கறுப்புக் கோட் அணியவேண்டும் என்னும் விதி இருக்கிறது. தேசியக் கொடி, தேசிய கீதம் எல்லாம் ஒரு நாட்டின் அடையாளம்தான். அந்த அடையாளங்கள் மக்களின் மனதில் தேசபக்தியை ஏற்படுத்துகின்றன. மனிதன் வெளியே செய்யும் செயலுக்கேற்ப அதற்குரிய விளைவு மனதிற்குள் ஏற்படுகிறது என்பதை அறிந்த நம் முன்னோர்கள் அதை நுால்களில் பதிவும் செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் சீருடைகளை அணிந்தவுடன் தங்களுக்கு வீரத்தன்மையும், தேசப்பற்றும் வருவதாகத் தெரிவிக்கின்றனர். கடவுள் பக்தியும் அப்படித்தான். கடவுளைப் பற்றிய எண்ணம் வர வேண்டும், மனதில் அமைதி நிலவ வேண்டும் என்றால் புறச் சின்னங்களான திருநீறு, குங்குமம், திருமண், ஸ்ரீசூர்ணம் அதற்கு உதவி செய்கின்றன. புறச்சூழல் மனிதனை பாதிக்கவே செய்கிறது. நெற்றியில் திருநீறுடன் பளிச்சென ஒருவர் வந்தால் அவரை மதிக்கத் தோன்றுகிறது. அவரைப் பார்த்ததும் நம் மனதிலும் பக்தி எண்ணம் எழுகிறது. அதை வேஷம் என நினைத்தால் அது வேஷமாகவே போய்விடும். உண்மையில் ஒருவர் வேஷமாக பயன்படுத்தினால் அதைக் கண்டிக்க வேண்டுமே தவிர, மற்றபடி ஆன்மிகச் சின்னங்களே வேண்டாம் என தவிர்ப்பது கூடாது. வக்கீலுக்குப் படிக்காத ஒருவர், கறுப்பு கோட்டை அணிந்து தான் ஒரு வக்கீல் என ஏமாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அவரைக் கண்டிப்போமே தவிர, இனிமேல் வக்கீல்கள் யாரும் கறுப்பு கோட் அணிவது கூடாது என்போமா? ‘என் உயிர், உள்ளம், உடலைப் பரிசுத்தம் செய்வதற்காக ஆத்மார்த்தமாக சின்னங்களை அணிகிறேன்’ என்று நினைத்து திருநீறு பூசினால் நிச்சயமாக மனதிற்குள் பரிசுத்த உணர்வு தோன்றும். பக்தியுடன் வாழ வெளிச்சின்னங்கள் உதவுகின்றன என்ற உண்மையை நாம் உணர வேண்டும். சின்னங்களை புறக்கணித்தால் மனதில் பக்தி உணர்வு காணாமல் போகும். இதனால்தான் அவ்வைப்பாட்டியும் ‘நீறில்லா நெற்றி பாழ்’ எனப் பாடியுள்ளார்’’ என விளக்கினார். சுவாமிகள் கொடுத்த திருநீறு பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் பூசிக் கொண்டார்.