காஞ்சி வரதர் கோவிலில் மங்களாசாசனம் செய்ய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி மற்றும் கோவில் தலைமை பட்டாச்சாரியார் கிட்டு ஆகியோர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று மாலை, சங்கரமடத்தில் சந்தித்து, கோவில் பிரசாதம் வழங்கினர். வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சங்கர மடத்தின் சார்பில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நடந்து வரும் கோவில் திருப்பணியை சுவாமிகள் பார்வையிட வேண்டும் என்றும், சுவாமிகள் கோவிலுக்கு வந்து மங்களாசாசனம் செய்வதை பக்தர்கள் பலரும் எதிர்பார்ப்பதாகவும் இருவரும் சுவாமிகளிடம் கேட்டுக் கொண்டனர்.அதை தொடர்ந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இருவருக்கும் ஆசி வழங்கி, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருவதாக உறுதியளித்தார்.