நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த கொங்களம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை அருகே, அரியாகவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற கொங்களம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டி கொல்லிமலையில் இருந்து வரும் ஓடை செல்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு ஆடிப்பெருக்கு விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த ஓடையில் குளித்துவிட்டு கொங்களம்மன் கோவிலில் வழிபட்டு செல்வர். அதேபோல், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிறு தெய்வங்களின் ஆயுதங்களையும் இங்குள்ள ஓடையில் சுத்தம் செய்து பூஜை செய்வர். தற்போது தண்ணீர் இல்லை என்றாலும், இதை இன்றளவும் இப்பகுதி மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதனால், ஆடிப் பெருக்கு விழா அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், தற்போது ஊரடங்கு தொடர்வதால், ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விழா ரத்து செய்தது குறித்து பிளக்ஸ் அடித்து கோவிலை சுற்றிலும் கட்டியுள்ளனர்.