பதிவு செய்த நாள்
03
ஆக
2020
08:08
ஆடிப்பெருக்கு வரலாற்றில், முதல் முறையாக, காவிரி ஆற்றங்கரை பகுதிகள், பக்தர்கள் யாருமின்றி வெறிச்சோடின.
ஆண்டுதோறும் ஆடி, 18ம் தேதி, ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படும். குறிப்பாக, காவிரி பாயும் மாவட்டங்களில், இந்த நாளை விமரிசையாக கொண்டாடுவர்.சேலம், ஈரோடு, தர்மபுரி சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் மேட்டூர் வந்து, காவிரியாற்றில் புனித நீராடி வழிபடுவர்.
நடப்பாண்டு ஆடிப்பெருக்கான நேற்று, முழு ஊரடங்கு அமலில்இருந்ததால், பக்தர்கள் யாருமின்றி, காவிரி ஆற்றங்கரை பகுதி வெறிச்சோடியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மேட்டூர் வந்தவர்களை, நகர எல்லையில், போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பினர். இதேபோல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், காவிரி கரையோரங்கள் வெறிச்சோடின. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல், ஓடந்துறை படித்துறைகளில், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. படித்துறைகளுக்கு செல்லும் வழிகள் அனைத்திலும், தடுப்புகள் அமைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே, கல்லணை கால்வாய் ஆறு, கும்பகோணம் மகாமக குளம் ஆகிய இடங்களிலும், போலீசார் தடையை ஏற்படுத்தி இருந்தனர்.வாய்க்கால்காவிரி நீரால், நாகை மாவட்ட பாசன வாய்க்கால்களில், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட முடியாத கிராமப் பெண்கள், வாய்க்கால்களில் பழங்கள் மற்றும் மங்கள பொருட்களை வைத்து கொண்டாடி, பாரம்பரிய முறைப்படி மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
- நமது நிருபர் -