பதிவு செய்த நாள்
03
ஆக
2020
08:08
புதுச்சேரி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம தாரக மந்திரத்தை பக்தர்கள் ஜெபிக்க வேண்டும்’ என, ஸ்ரீ ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஜெகத்குரு பதரீ சங்கராச்சாரியார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீ வித்யா பீடத்தின் ஸ்ரீகார்யம் சந்திரமவுலீச்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக பகவான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி வாழ்ந்து காட்டி உள்ளார். புண்ணிய ஷேத்திரமான அயோத்தியில் அவர் அவதரித்தார். இலங்கை போருக்கு பின் தனது தம்பி லட்சுமணனிடம் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி கூறும்போது, ‘இலங்கை தங்கத்திலான நகரமாக இருந்தாலும், எனக்கு சொர்க்க பூமியானது அயோத்தி மட்டுமே’ என்று தெரிவித்து, தான் அவதரித்த தலமான அயோத்திக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.
அத்தகைய புனித ஸ்தலமான அயோத்தியில் நாளை 5ம் தேதியன்று ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஆலய நிர்மாணப் பணிகள் பூமி பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதன் மூலம், எண்ணிலடங்காத ராம பக்தர்களின் ஆசை பூர்த்தியாகும் தருணம் துவங்கி விட்டது. இந்த முக்கிய தருணத்தில் ஸ்ரீராம பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘ஸ்ரீராம ஜயராம ஜயஜயராம’ என்கின்ற தாரக மந்திரத்தை பக்தியுடன் 108 முறை ஜெபித்து ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அனுகிரகத்தை பெறுமாறு, ஸ்ரீ ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஜெகத்குரு பதரீ சங்கராச்சாரியார் கேட்டுக் கொண்டுள்ளார். பூமி பூஜை நல்லமுறையில் நடப்பதற்கும், ஆலயம் கட்டும் பணிகள் தங்கு தடையில்லாமல் சிறப்பாக நிறைவேறுவதற்கும் நாளை 5ம் தேதியன்று ஸ்ரீ வித்யா பீடம் சார்பாக சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.