பதிவு செய்த நாள்
14
ஆக
2020
09:08
ஆடி மாதம் என்றால் அம்மன்; அம்மன் என்றால் வெள்ளி என, ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பது மிகவும் சிறப்பு. எத்தனை முறை, எத்தனை அம்மனை தரிசித்தாலும், நமக்கு சலிப்பு தட்டாது; காரணம், ஆயிரம் கண்ணுடைய ஒவ்வொரு அம்மனும், ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்போம்.
சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவருக்கு, அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை, அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார்.பிற்காலத்தில், இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட இந்த மாரியம்மன் சிலையை, அப்பகுதி மக்கள் பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பி, வழிபாடு செய்தனர்.
அர்ஜுனனால் உருவானது அர்ஜுனன் ஆறு; ராமரால் உருவானது வைப்பாறு. இவ்விரு ஆறுகளும், கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோவில் என்பதை உணர்த்தும் விதமாக, இருகங்கைக்குடி எனப்பட்ட ஊர் மருவி, இருக்கன்குடி ஆனது. இருக்கன்குடி மாரியம்மன், மற்ற அம்மன்களைப் போல் இல்லாமல், வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டபடி, அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.
இவள் சாந்த முகத்துடன், கைகளில் சூலம், கபாலம், டமருகம் ஏந்தி, அக்னி ஜுவாலையுடன் அருள்பாலிப்பதால், இன்னல்கள் தீர்த்து, கேட்டதை கொடுக்கும் சக்தி வாய்ந்தவளாக அருள்பாலிக்கிறாள்.கோவில் பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர். அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், இவளுக்கு எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது, திரை போடப்பட்டு விடும்; ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம்.
கோவிலில் இருந்து சற்று துாரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது.ஆடி, தை, பங்குனி கடைசி வெள்ளிக்கிழமைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், வயனம் இருத்தல் என்ற விரதம் இருக்கின்றனர். ஒரு சிலர், நோய் தீரும் வரை இங்குள்ள மண்டபத்தில் தங்கி, விரதமிருந்து, நோய் குணமானவுடன் செல்கின்றனர்.
குழந்தை இல்லாதவர்கள், அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டி, பலனடைகின்றனர். வயிற்று வலி தீர, மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். பக்தர்கள் தங்கள் நிலங்களில் அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறிகளை காணிக்கையாக கொடுக்கின்றனர். அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்குகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனை. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன், அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், அம்பாளுக்கு உருவ காணிக்கை மற்றும் கண்மலர் சாத்தியும், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
முகவரி: இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில், இருக்கன்குடி - 626 202, விருதுநகர் மாவட்டம். மொபைல்: 73394 64328, 88258 79351. விருதுநகர் மாவட்டம் சாத்துாரிலிருந்து, 8 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.