பதிவு செய்த நாள்
19
ஆக
2020
01:08
சேலம்: அமாவாசை நாளில், சூரியன், சந்திரன் ஒரே நேர் கோட்டில் இணைவதால், முன்னோர், பூமிக்கு திரும்புவதாக நம்பிக்கை உள்ளது. இதனால், பலரும் இறந்து போன முன்னோருக்கு விரதம் இருந்து, வழிபாடு நடத்துகின்றனர். ஆவணி மாத அமாவாசையான நேற்று, சேலம், உழவர் சந்தைகளில், வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. பூசணி உள்ளிட்ட காய்கறி, வாழைப்பழம், தேங்காய், அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை, மக்கள் வாங்கினர். அதேபோல், சேலம் மற்றும் சுற்றுவட்டாரக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பூங்கா, மூக்கனேரி, குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி புது ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பலர், முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கி, வழிபாடு செய்தனர்.