பதிவு செய்த நாள்
26
செப்
2020
04:09
மதுரை : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஹவுஸ் கீப்பிங் பணிக்கு டெண்டர் விடுவதை ரத்து செய்து, கோயிலுக்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தடை விதித்தது.
சென்னை மயிலாப்பூர் ரமேஷ் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வளாகம் மற்றும் அதன் உபகோயில்கள், சார்பு நிறுவனங்களை பராமரிக்க (ஹவுஸ் கீப்பிங்) ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த டெண்டர் அறிவிப்பை, கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் ஆக.,20 ல் வெளியிட்டார். பக்தர்கள் தன்னார்வத்தில் உழவாரப் பணியில் ஈடுபடுகின்றனர். ஹவுஸ் கீப்பிங் பணி பக்தர்களின் உரிமையை பாதிக்கிறது. செயல் அலுவலரே தக்காராக தொடர்வதால், அவர் இம்முடிவு மேற்கொள்ள முடியாது. டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார். தனிநீதிபதி, கொள்கை மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை அறங்காவலர் குழுதான் மேற்கொள்ள முடியும். தக்கார் டெண்டர் அறிவிப்பு வெளியிட முடியாது. அதை ரத்து செய்கிறேன். பழநி கோயிலுக்கு அறங்காவலர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும், என உத்தரவிட்டார். இதை எதிர்த்து பழநி கோயில் செயல் அலுவலர், டெண்டரால் பாதிக்கப்பட்ட நபராக இருந்தால் வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளது. மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. அனைத்து நாட்களிலும் தன்னார்வலர்கள் உழவாரப் பணியில் ஈடுபட வாய்ப்பில்லை. அறங்காவலர் குழுவை ஏற்படுத்தும் வரை, அதற்குரிய பணியை தக்கார் மேற்கொள்ளலாம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும், என மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. டெண்டர் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனர், செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றனர்.