Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம் ... விஷ்ணு புராணம் ஆறாவது அம்சம்
முதல் பக்கம் » விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம் (பகுதி-2)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
11:05

21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்

தேவகி வசுதேவர்கள் துதிப்பதைக் கண்ட கண்ணன் யாதவ சமூகத்தை மோகிப்பிக்கும் பொருட்டு தன் தாய் தந்தையரை நோக்கி அம்மா! உங்களைக் காண பலநாட்கள் ஆசைப்பட்டும் நானும் பலராமனும் கம்சனது பயத்தாலேயே காணாமலிருந்தோம். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் ஒழியும் காலம் பயனற்றது, குருவுக்கும் தேவருக்கும் பிராமணருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்பவரின் காலம்தான் பயனுள்ளது என்று சொல்லித்தன் தமையனோடு தாய் தந்தையரை வணங்கினான். இந்நிலையில் கம்சனது பத்தினிகளும் தாய்மாரும் கம்சனின் உடலைச் சூழ்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களிடம் இரக்கம் கொண்டு கண்களில் நீர் ததும்ப அவர்களைப் பலவகையாகத் தேற்றியருளினான் பிறகு புத்திரனையிழந்த உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து மதுரையில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தருளினான்.

உக்கிரசேனன் கம்சனுக்கும் மற்ற இறந்தோருக்கும் உரிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தான். அப்போது கண்ணன் உக்கிரசேனனை நோக்கி, மகாப்பிரபுவே! செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சங்கையின்றி எனக்குக் கட்டளையிடுங்கள். இந்த யதுவம்சம் யயாதியின் சாபத்தால் ராஜ்ய பரரத்துக்கு யோக்கியம் இல்லாது இருப்பினும் இப்போது நான் உமக்குச் சேவகனாயும் நீர் சகல அரசர்களுக்கும் மேலானவனாகவும் இருப்பதால், எந்த அரசரையும் நீங்கள் கட்டளையிடலாம் ஆனால் அற்ப அரசர்களுக்கு கட்டளையிட்டு என்ன பயன்? தேவர்களுக்குக் கட்டளையிடுங்கள்! என்று சொல்லி வாயுவை நினைத்தான். வாயுவும் வந்தான். மனித அவதாரம் செய்திருந்த கண்ணன் வாயுவே! நீ இந்திரனிடம் சென்று, இந்திரா! நீ கர்வப்பட்டது போதும் இனி கர்வப்படாதே உக்கிரசேன மன்னனுக்கு சுதர்மை என்ற சபா மண்டபத்தைக் கொடுத்துவிடு! என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதாக அவனிடம் சொல்வாயாக. சுதர்மை என்ற சபாமண்டபம் நமது அரசருக்கு ஏற்றது அந்தச் சபாமண்டபத்தையே நீயே எடுத்து வா! என்று கட்டளையிட்டான். வாயுதேவன் தேவேந்திரனிடம் சென்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதைச் சொன்னான். இந்திரனும் உடனே அந்தச் சபாமண்டபத்தைச் சமீரணன் வசம் ஒப்படைத்தான். வாயுதேவன் அதைக்கொண்டு வந்து, சுவாமி சன்னதியில் சமர்ப்பித்தான். அதை ஸ்ரீகிருஷ்ணன் உக்கிரசேனனுக்கு வழங்கினான்.

பிறகு ராமகிருஷ்ணர்களான புருஷ சிங்கங்கள் இருவரும் விதிப்படி உபநயனம் செய்விக்கப்பெற்றனர். அவ்விருவரும் இயல்பாகவே முற்றும் அறிந்தவராக இருந்தும் மனித அவதார முறைக்குப் பொருந்தும்படியாகவும் சிஷ்ய ஆசார முறையை உலகுக்கு அறிவிப்பதற்காகவும் காசியிற் பிறந்த சாந்தீபினி என்ற பிராமணோத்தமரிடத்தில் கல்வி கற்கச் சென்றார்கள். குருவுக்குரிய பணிவிடைகளைச் செய்து கற்கவேண்டிய ஒழுக்கங்களைக் கற்று வேதவேதாந்த சாஸ்திரங்களையும் தனுர்வேதத்தையும் கற்றுத் தேர்ந்தார்கள். அவ்விருவரும் அறுபத்து நான்கு தினங்களில் சகல சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் அத்யயனம் செய்தார்கள். சாந்தீபினி என்ற அவர்களின் ஆசிரியரும் அவர்களை சூரியர் சந்திரர்களாக நினைத்தார். இப்படியிருக்கும்போது ஒருநாள் ராமகிருஷ்ணர்கள் இருவரும் தங்கள் ஆசிரியரை நோக்கி, குருவே! தங்களுக்கு நாங்கள் குரு தக்ஷணையாக என்ன சமர்ப்பிக்கவேண்டும்? என்று கேட்டார்கள், குருமகான் யோசித்துவிட்டு முன்னொரு சமயம் பிரபாச தீர்த்தக் கட்டத்தில் கடலில் மூழ்கி இறந்துபோன தமது புத்திரனையே கொண்டு வந்து குரு தக்ஷணையாகக் கொடுக்கும்படி வேண்டினார். ராமகிருஷ்ணர்கள் இருவரும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு வில்லம்புகளுடன் கடற்கரைக்குச் சென்றார்கள். உடனே சமுத்திரராஜன் அர்க்கியத்தைக் கையில் ஏந்தி அங்கு வந்து அவர்களை வணங்கி சுவாமி! அந்தச் சாந்தீபினியின் மகனை அடியேன் கொண்டு போகவில்லை சங்கின் ரூபந்தரித்து எனது ஜலத்தில் வாசஞ் செய்கின்ற பஞ்சஜனன் என்ற அசுரனே கொண்டு போனான் என்றான். அதைக் கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன், சமுத்திர ஜலத்தினுள்ளே பிரவேசித்து, அந்த அசுரனைக் கொன்று, அவனது எலும்பினாலான உத்தம சங்கத்தை எடுத்துக்கொண்டார். பிறகு கண்ணன் எதன் ஒலியால் அசுரருக்குப் பலஹானியும் தேவதைகளுக்கு தேஜோவிருத்தியும் உண்டாகுமோ அத்தகைய பாஞ்சஜன்யத்தைப் பூரித்து யமபுரிக்குச் சென்றார். அங்கு அவர் யமனைச் சங்கரித்து, யாதனையிற் கிடந்த சாந்தீபினியின் குமாரனை, முன்பிருந்தது போன்ற தேகம் உடையவனாக ஆக்கிக்கொண்டு வந்து ஆசிரியரின் குருதக்ஷிணையாகக் கொடுத்தருளினான். பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மதுராபுரிக்குச் சென்றார்கள்.

22. ஜராசந்தனை ஜெயித்தல்

மகத மன்னனான ஜராசந்தனின் பெண்களாகிய அஸ்தி பிராஸ்தி என்பவர்களை கம்சன் மணந்து கொண்டிருந்தான். எனவே கம்சனைக் கிருஷ்ணன் கொன்றதனால், ஜராசந்தன் மிகவும் கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல வேண்டும் என்று இருபத்து மூன்று அ÷க்ஷõஹிணி சேனையோடு மதுராபுரியை நோக்கிப்படையெடுத்து வந்தான். தலைநகரை முற்றுகையிட்டான். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர்கள் அற்பமான சேனைகளைக் கொண்டே அவனை எதிர்த்தனர், இப்படிப் போர் செய்யும்போது இராமகிருஷ்ணர்கள் தங்களது பூர்வீக ஆயுதங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென திருவுள்ளம் கொண்டதால், ஆகாயத்திலிருந்து சார்ங்கம் என்ற வில்லும் அக்ஷய தூணீரங்களும் கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனிடம் வந்தன. பலராமருக்குக் கலப்பையும் பெரியதொரு உலக்கைத் தடியும் வந்தன. இப்படி வந்த திவ்ய ஆயுதங்களை இருவரும் தரித்துக்கொண்டு, பெருஞ் சேனைகொண்ட ஜராசந்தனை வென்று மதுரைக்குத் திரும்பினார்கள். ஜராசந்தனை ஜெயித்திருந்தும் அவன் உயிரோடு திரும்பியதால், தங்களையே அவன் ஜயித்ததாக நினைத்தார்கள். அவன் ஜயிக்கப்பட்டதாக நினைக்கவில்லை கண்ணன் நினைத்ததுபோலவே ஜராசந்தன் சிறிய காலங்கழித்து மீண்டும் பெருஞ்சேனையுடன் யுத்தஞ் செய்ய மதுரைக்கு வந்தான். அப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணர்களால் ஜெயிக்கப்பட்டு ஓடிவிட்டான். இவ்வாறு பதினெட்டு முறைகள் யாதவருடன் போர் செய்ய ஜராசந்தன் தொடர்ந்து வந்து, கிருஷ்ணனால் தோல்வியடைந்து ஓடிப்போனான். மகாபலசாலியும் ஏராளமான சேனைகளுடையவனுமான ஜராசந்தனே பதினெட்டு முறை படையெடுத்துத் தோற்றான் என்றால் அது ஸ்ரீமந்நாராயணனுடைய வல்லமையே தவிர யாதவருடையதன்று அவருடைய திருவாழி ஒன்றே சத்துரு நாசத்துக்குப் போதுமானதாக இருந்தும் ஸ்ரீகிருஷ்ணன் பற்பல ஆயுதங்களைப் பகைவர் மீது பிரயோகித்தானே என்றால், திருவவதாரத் திருவிளையாடலாக மனுஷ்ய அவதாரம் செய்தருளிய எம்பெருமான் மனிதத் தன்மையை அனுசரித்தே பகவான்களோடு சமாதானமும் ஈனர்களோடு யுத்தமும் செய்தருளுகிறான். இந்தக் காரணத்தாலே இடத்துக்கேற்ப சாம, தான பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களையும் அனுசரிக்கிறான். சிலவிடத்தில் ஓடிப்போவதாகவும் நடிக்கிறான். இந்தத் திருவிளையாடல்களும் இன்னின்ன காலத்தில் இப்படியென்றில்லாமல் அவன் திருவுள்ளத்தின்படியே நடக்கின்றன.

23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!

ஒருநாள் யாதவர்களின் புரோகிதரான கார்க்கியர் என்ற பிராமணரை, அவருடைய மைத்துனன், அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால், யாதவர்கள் கூட்டமாகக் கூடியிருந்த சபையில், இவர் நபும்சகர் என்று பரிகாசம் செய்தான். அதைக் கேட்ட யாதவரெல்லாம் உரக்கச் சிரித்தனர். ஆனால் கார்க்கியர் அவமானமும் கோபமுங் கொண்டு, விந்திய மலையின் தெற்கே வந்து யாதவர்களுக்குப் பகைவரான புத்திரன் ஒருவன் தமக்குப் பிறக்கவேண்டும் என்று எண்ணி இரும்புப் பொடியைத் தின்று, சிவனைக் குறித்து, தவஞ்செய்தார். சிவனார் அவர் முன்பு தோன்றி அவர் வேண்டிய வரத்தை வழங்கினார். அவர் புத்திரனுக்கான வரம் பெற்றதையறிந்த யவனதேசத்தரசன், அவரிடம் வந்து அவரை மிகவும் உபசரித்து பூசித்து, தனக்குப் பிள்ளையில்லாமையால், தன் மனைவியிடத்தில் பிள்ளையுண்டாக்கிக் கொடுக்கும்படி வேண்டினான். அவரும் அவனிடம் இரக்கம்கொண்டு, அவன் பத்தினியோடு கூடியதால், அந்த மங்கையின் வயிற்றில் வண்டு போன்ற நிறமுடைய புத்திரன் ஒருவன் உண்டானான்.

அவனுக்கு அந்த யவனதேசத்தரசன் காலயவனன் என்ற பெயரிட்டு வளர்த்துத் தக்க காலத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுப் பிறகு தவஞ்செய்யக் காட்டுக்குப் போய் விட்டான். காலயவனன் மிகவும் பலசாலியாகவும் உறுதியான மார்புடையவனாகவும் விளங்கினான். அதனால் கர்வம் கொண்டிருந்த அவன், கலகக்காரரான நாரத முனிவரிடம், நாரதரே! இந்தப் பூமியில் பலவான்களான அரசர்கள் யார்? என்று கேட்டான். அதற்கு நாரதர் விஷமச் சிரிப்புடன், இதில் என்ன சந்தேகம்? யாதவர்களின் தலைவர்களான ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமருமே பலசாலிகள்: என்றார். அதைக் கேட்டதும் காலயவனன் அநேக கோடி மிலேச்சரோடும், ரத கஜ துரகங்களோடும், யாதவர் மீது படையெடுக்க வேண்டிய முயற்சிகளைச் செய்தான். நாள்தோறும் தன் பிரயாணத்துக்குத் தடைநேரிடாதவாறு, வழிகளில் அங்கங்கே வாகனங்களை வைத்து, ஒரு வாகனம் அலுத்துப் போனவுடனே அதைவிட்டு வேறு வாகனத்தின்மேல் ஏறி, இப்படியே நெடுந்தூரத்திலிருந்து வெகு சீக்கிரமாக மதுரையை வந்தடைந்தான்.

அப்போது கண்ணன், ஓஹோ! யாதவ சேனையெல்லாம் நாசமாகும்படி நேரிட்டதே! காலயவனன் போர் செய்வானாகில் அற்பமான யாதவர்களை நாசஞ் செய்வான். இதனால் பலவீனப்படும் யாதவரை மகதராஜன் நாசஞ் செய்யக்கூடும். அல்லது மகதராஜனின் சேனை பலவீனப்பட்டிருந்தாலும் காலயவனன் அவர்களோடு சேர்ந்து யாதவரை அழித்துவிடுவான்! ஆகையால் காலயவனனாலும் ஜராசந்தனாலும் யாதவருக்குத் துன்பந்தான் நேரிடும் எனவே, யாதவர்களைக் காப்பதற்குக் கோட்டை ஒன்றை அமைப்போம். அந்தக் கோட்டையிலிருந்து பெண்களும் யுத்தஞ் செய்யத் தக்கதாக அதை அமைக்கவேண்டும் என்று நினைத்து சமுத்திர ராஜனையழைத்துப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்விடும்படிக் கேட்டான். அதன் பிரகாரம் சமுத்திர ராஜன் இடம்விட்ட அவ்வளவு பெரிய பூமியில் பெரிய மதில்கள், தடாகங்கள் உத்தியான வனங்கள் உப்பரிகைகளுமாக தேவேந்திரனின் அமராவதிப் பட்டணத்தைப்போல துவாரகை நகரை நிர்மாணித்தார். அதில் ஸ்ரீகிருஷ்ணன் தம் பிரஜைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் பகைவன் காலயவனன் நெருங்கி வரும் சமயத்தில் தாம் மதுரைக்குச் சென்றார். பகைவன் மதுரையை முற்றுகையிட்டதும் கிருஷ்ணன் யாதொரு ஆயுதமுமில்லாமல் நகரிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது, நாரதர் கூறிய அடையாளத்தால், இவன்தான் கிருஷ்ணன் என்று காலயவனன் நிச்சயித்துக்கொண்டு இவன் ஆயுதமில்லாமல் போவதால் இவனைப் பிடித்துச் சிறை செய்வது எளிது என்று நினைத்துப் பின் தொடர்ந்தான்.

மைத்ரேயரே, கவனமாகக் கேளும் யோகிகளின் இதயங்களும் பின்தொடர முடியாதவனை காலயவனன் பின்தொடர்ந்து பிடிக்க நினைத்தான். அவன் பின்தொடர்வதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன் ஒரு குகையினுள் புகுந்தார். காலயவனனும் அவரைப் பின்தொடர்ந்து, அந்தக் குகையில் ஒருபுறம் படுக்கையிற் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு அவனையே ஸ்ரீகிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டியுதைத்தான். உடனே, முசுகுந்தன் தூக்கம் தெளிந்து எழுந்து காலயவனனைப் பார்த்தான். பார்த்ததும் முசுகுந்தனின் கோபத்தால் காலயவனன் தன்னுடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பலானான் மைத்ரேயரே! அந்த முசுகுந்த மன்னன் முன்பு நடந்த தேவாசுரப் போரில், அசுரரைச் சங்கரித்துத் தேவர்களுக்கு உதவி செய்தவன் அதனால் தேவர்கள் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும்? என்று அவனைக் கேட்டனர். அப்போது அவன் தூக்கம் இன்றி வெகுநாட்களாக அலுத்துப்போயிருந்ததால், தூங்குவதற்கான வரத்தைக் கேட்டான். தேவர்களும் அந்த வரத்தைக் கொடுத்து, உன்னைத் தூக்கத்திலிருந்து எவன் எழுப்புவானோ, அவன் தனது உடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பல் ஆவான்! என்ற வரம் தந்தார்கள். அதனாலேயே முசுகுந்த மன்னனை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான். அதன் பிறகு, முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, நீ யார்? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன், அரசனே! நான் சந்திர சூலம் சார்ந்த யதுகுலத்தில் பிறந்தவன். வசுதேவரின் மகன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் முசுகுந்த மன்னன், முன்பு தனக்கு கார்க்கிய முனிவர் கூறியதை நினைத்து, தன் படுக்கையைவிட்டு எழுந்து, சர்வேசுவரனான ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி, ஓ சுவாமி! தேவரீர் ஸ்ரீமந் நாராயணருடைய அம்சாவதாரம் என்பது அடியேனுக்குத் தெரியும். முன்பு கார்க்கிய மகாமுனிவர், இருபத்தெட்டாவது யுகத்தில் துவாபரயுக முடிவில் யதுகுலத்தில் எம்பெருமான் அவதரித்தருள்வான் என்று என்னிடம் சொல்லியிருந்தார். தேவரீர்தாம் அந்த அவதார புருஷன்! மனுஷ்யரின் நலனுக்காக இவ்வாறு அவதரித்திருக்கிறீர்! அடியேன் இந்தச் சம்சாரச்சக்கரத்தில் ஓய்வில்லாமற் சுற்றிக்கொண்டு வருந்துகிறேனேயன்றி எங்கும் ஒரு சுகத்தையும் கண்டேனில்லை. கானல் நீர் என்று மூடர் அடைவதுபோல துக்கங்களையே சுகங்கள் என்று நினைத்து விட்டேன். ராஜ்யாதிகாரம். பூமி, சேனை, பொக்கிஷம், உறவினர் நண்பர், மக்கள், மனைவியர் ஏவலாட்கள் இவை யாவற்றையும் சுகமென்றே நினைத்த நான் முடிவில் அவையெல்லாம் எனக்குத்தாபத்தையே விளைவித்தன என்பதை உணர்ந்தேன். இனி தேவப்பிறவி கிடைத்தால்தான் என்ன! தேவகணங்களே அடியேனது துணையை விரும்புகின்றனர். சர்வதிபதியே! நித்யமான சுகமெங்கே இருக்கிறது? சகல உலகங்களுக்கும் காரணமான தேவரீரை ஆராதனை செய்யாமல், எவன் தான் நிரந்தரமான சுகத்தை அடையமுடியும்? அடியேன் சம்சார வழியில் திரிந்து, மிக்க தாபங்களை அடைந்து அவற்றால் மனந்தவிர்க்கப்பட்டு, ஒப்பற்ற ஒளியுடைய மோக்ஷசுகத்தில் அபிலாøக்ஷகொண்டு, எவனைக் காட்டிலும் வேறு பரமப்பிராப்பியம் இல்லையோ, அத்தகைய அபாரனாகவும் அப்ரமேயனாயுமுள்ள உன்னை அடைக்கலம் புகுந்தேன் என்று முசுகுந்த மன்னன் துதித்தான்.

24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!

முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து மோக்ஷத்தை வேண்டினான். ஸ்ரீகிருஷ்ணன் அவனை நோக்கி, அரசனே! நீ உத்தம உலகங்களை அடைந்து, என் அனுக்கிரகத்தினால் குறைவற்ற மஹா ஐசுவரியமுள்ளவனாய் திவ்விய போகங்களை அனுபவித்து மறுபடியும் உயர்ந்ததொரு குலத்தில் பூர்வ ஜன்ம ஸ்மரணையுள்ளவனாகப் பிறந்து எனது கடாக்ஷத்தால் மோக்ஷம் அடைவாயாக! என்று அருள் செய்தார். முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனது திருவடிகளை வணங்கி, குகையிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தான். அங்கே மிகவும் குள்ளமாய்த் திரியும் மனிதர்களைப் பார்த்துக் கலியுகம் வந்துவிட்டது என்பதை முசுகுந்தன் அறிந்து, தவஞ் செய்ய எண்ணம் கொண்டு ஸ்ரீநாராயண முனிவர்கள் வாசஞ் செய்யும் கந்தம தன பருவதத்துக்குப் போனான். கிருஷ்ணனே தன் பகைவனான காலயவனனைத் தந்திரத்தால் கொன்றுவிட்டு, மதுரை சென்று அதை முற்றுகை செய்திருந்த சதுரங்கச் சேனைகளைக் கைப்பற்றித் துவாரகை சென்று உக்கிரசேன மன்னனிடம் ஒப்படைத்தான். இதனால் யாதவர்கள் பகைவர் பயமின்றி வாழ்ந்தனர். போர்கள் ஓய்ந்ததால், பலராமர், தமது உறவினரைக் காண விரும்பி, கோகுலத்துக்குச் சென்றார். கோபியர்களும் கோபாலர்களும் அவரை வரவேற்றனர். கோபியர்களிற் சிலர் அன்பினால் கோபமாகவும் சிலர் பொறாமையுள்ளவர்களாகவும், பலராமரின் பேசினர். கண்ணனிடத்து அன்பு கொண்டிருந்த கோபியர்கள் நகரத்து நாகரிகப் பெண்களிடம் கண்ணன் கவர்ச்சி கொண்டதாக நினைத்து பலராமரிடம் கேள்விகள் கேட்கலானார்கள்.

ஸ்திரமற்ற அற்பப் பிரேமையுடைய அந்த கிருஷ்ணன் சுகமாக இருக்கிறானா? அந்த கிருஷ்ணன் இங்கே ஆடிப்பாடிய போது நாங்கள் அவன் பாட்டுக்கிசைய ஆடிப் பாடியதை நினைக்கிறானா? அவன் தன் தாயைப் பார்க்கவாவது இங்கு வருவானோ? இனி அவன் பேச்சு நமக்கு எதற்கு? எவனுக்கு நாம் இல்லாத பொழுது சுகமாய்க் கழிகிறதோ, அத்தகையவனின் பேச்சை விடுங்கள் நமக்கு யார் இல்லாமல் பொழுது கஷ்டமாகப்போகிறதோ, எவன் தன் தந்தை தாய், உடன் பிறந்தார் பந்துக்கள் ஆகியோரையெல்லாம் விட்டுப் போனானோ, அத்தகையவனுக்காக நாம் ஏன் தவிக்கவேண்டும்? அந்த மாயகண்ணன் நன்றியில்லாதவரில் சிறந்தவன், இருக்கட்டும் ஓ பலராமா! அந்த கிருஷ்ணன் இங்கு வருவதாக ஏதேனும் சொன்னானா? பட்டணத்துப் பாவையரிடம் மனம் பறிகொடுத்துவிட்ட அந்தமாய கண்ணன் எங்களிடம் சிறிதும் அன்பில்லாமல் இருப்பதால் அந்த வஞ்சகனைக் கண்ணால் காணவுங்கூடாதவன் என்று எங்களுக்குத் தோன்றுகிறது! என்று இவ்விதமாக ஆய்ச்சியர் அன்போடும் ஆசையோடும் வெறுப்போடும் பலராமரிடம் ஏதேதோ! பேசி, ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணையினாலேயே தாமோதரா! கோவிந்தா! என்று மூத்த நம்பியையே அழைத்துவிட்டு, உடனே தங்களுக்கு கண்ணன் மீதுள்ள மோக்ஷத்தால்தான் அப்படிப் பேசுவதாக நினைத்துக் கலகல வென்றுச் சிரித்தார்கள். அப்போது பலராமர் அன்போடும் கனிவோடும் கண்ணன் கூறியனுப்பிய வார்த்தைகளை அவர்களிடம் சொல்லி அவர்களைச் சமாதானஞ் செய்தார். பிறகு அவர் ஆயர்ப்பாடியடைந்து ஆயர் ஆய்ச்சியருடன் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தார்.

25. பலராமரின் மோகமும் கோபமும்

மனுஷ்ய தேகத்தோடு, காரிய வசத்தால் பூமியில் எழுந்தருளிப் பெரிய காரியங்களை நிறைவேற்றி, இடையரோடு வனத்தில் விளையாடிக்கொண்டிருந்த பலராமனான ஆதிசேஷனுக்குத் திருவுள்ளம் மகிழ்வதற்காக வருணன் வாருணிதேவியை அழைத்து ஓ மதிராதேவி! நீ திருவனந்தாழ்வானுக்கு மிகவும் பிரியமானவள்! ஆகையால் அவருடைய போகத்துக்காக அவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு நீ சந்தோஷமாகப் போக வேண்டும்! என்றான். வாருணியும், பலராமர் விளையாடிக் கொண்டிருந்த பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரப்பொந்தில் தங்கியிருந்தாள். அப்போது பலராமர் அந்த வனத்தில் உலாவும் போது, அந்த மதிரையின் வாசனை வீசுவதையறிந்து, அதன் மீது விருப்பம் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்று, அங்கே கடப்ப மரத்திலிருந்து தாரையாய் ஒழுகிக்கொண்டிருந்த மதிரையைக் கண்டு, மிகவும் மகிழ்ந்து, அதனை வேண்டுமளவும் பானஞ்செய்து, தம்முடனிருந்த கோப கோபிகையருக்கும் கொடுத்து, ஆடியும் பாடியும் மதம் பொருந்தி வீற்றிருந்தார்.

அப்போது தன் பக்கமாக ஓடிய யமுனை நதியை நோக்கி, யமுனா! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும் என்றார் பலராமர். யமுனையோ, அவர் மதத்தினால் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து அவர் வார்த்தையை மதித்துவரவில்லை. அதனால் கோபங்கொண்ட பலராமர், தமது ஹலாயுதத்தை எடுத்து, அதன் நுனியினால் அந்த நதியை இழுத்து, ஏ துஷ்ட நதியே! நான் அழைத்தும் நீ ஏன் வராமல் இருந்தாய்? உனக்குச் சக்தியிருந்தால் இப்போது உன் விருப்பப்படிப் போ! என்றார். அவரால் இழுக்கப்பட்ட அந்த நதி, தான் போகும் வழியை விட்டு, அந்த வனத்தில் பெருகியது. பிறகு அந்த நதி தன் கன்னியுருவோடு அவர் முன்பு வந்து வணங்கி, ஹலாயுதரே! என்மீது இரக்கங் கொண்டு என்னை விட்டுவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதற்கு அவர் யமுனா! என் பலத்தை நீ அவமதித்தால் நான் உன்னை என் கலப்பையினால் ஆயிரந் துண்டமாக்கிடுவேன்! என்றார். அதைக் கேட்ட யமுனாநதி தேவி நடுநடுங்கி அந்த வனம் முழுவதும் நனைத்தது. அவரும் அந்த நதியை விட்டுவிட்டார். அந்த நதியில் நீராடிய பலராமரிடம் ஒரு புதிய காந்தி உண்டாயிற்று. பிறகு அவர் திருமுடியில் தரிக்கத்தக்கத் தாமரை மலரும், கர்ண குண்டலங்களும் தாமரை மாலையும் நீலமான இரண்டு திருப்பரிவட்டங்களும் வருணனால் அனுப்பப்பட்டுத் திருமகளால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றையணிந்த பலராமர் மிகவும் பிரகாசமாய் இடைச்சேரியில் கிரீடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு அப்பால், பலராமர் துவாரகை சென்று ரைவத மன்னனுடைய மகளான ரேவதி என்பவளை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்

விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரியில், பீஷ்மகன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ருக்குமி என்ற மகன் ஒருவனும் ருக்குமணி என்ற மகளொருத்தியும் இருந்தார்கள். பேரழகியான அவளை கண்ணன் திருமணஞ் செய்துகொள்ளத் திருவுள்ளங்கொண்டிருந்தார். ருக்மணியும் கண்ணன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் கன்னிகையைத் தனக்கு கொடுக்கவேண்டும் என்று கிருஷ்ணன் எவ்வளவோ வேண்டியும் ருக்மணியின் சகோதரனான ருக்குமி, துவேஷத்தினால் தன் தங்கையைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்காமல் ஜராசந்தனின் ஏவுதலால் சிசுபாலனுக்குக் கொடுப்பதாகத் தந்தையைக் கொண்டு வாக்குத் தத்தம் செய்வித்தான். இப்படி அவன் நிச்சயித்து விவாகம் செய்ய ஏற்பாடு செய்யும்போது, அந்தத் திருமணத்துக்கு சிசுபாலனுக்கு நண்பர்களான ஜராசந்தன் முதலான அரசர்கள் குண்டினபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனும் யாதவ சேனையோடு குண்டினபுரத்திற்குச் சென்றார். ருக்மணிக்கு நாளைக்குக் கலியாணம் என்றிருக்கும்போது கண்ணன் பகைவருடன் போர் செய்யும் பொறுப்பை பலராமர் முதலியோரிடம் ஒப்படைத்துவிட்டு மணப்பெண்ணான ருக்மணியைக் கடத்திப் பலாத்காரமாகத் தூக்கிக்கொண்டு போனார். அதனால் மணமகன் சிசுபாலனும் அவனது தோழர்களான பவுண்டரகன், விடூரதன், தந்தவக்ரன், ஜராசந்தன், சாள்வன், சிசுபாலன் முதலான அரசர்களும் மிகவும் கோபங்கொண்டு எதிர்த்து வந்து, கண்ணனைச் சங்கரிக்கப்பெரும் யுத்தம் புரிந்தார்கள். இறுதியில் பலராமரிடம் அவர்கள் தோல்வியடைந்து தன் தன் நாடுகளுக்குச் சென்றனர். ருக்குமி மட்டுமே நான் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்து, கண்ணனைப் பின்தொடர்ந்தான். வழியில் அவன் கண்ணனை மடக்கிப் போர் செய்ய கண்ணன் அவனது சேனைகளை நாசஞ் செய்து, அவனையும் தலையெடுக்கவொட்டாமல் அடித்து உயிரோடு தரையில் வீழ்த்தினார். இவ்விதமாக கண்ணன் ருக்குமியை வென்று ருக்குமணியை ராக்ஷச விவாஹ முறையில் விவாகஞ் செய்துகொண்டார். அந்த ருக்மணியின் திருவுதிரத்தில் மன்மத அம்சமாய் மகாவீரியனான பிரத்தியும்னன் பிறந்தான். அவனைப் பூர்வஜன்ம விரோதத்தால் சம்பராசுரன் கொண்டு செல்ல, அவனை பிரத்தியும்னன் சங்காரஞ் செய்தான்.

27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி குருவே, அந்தப் பிரத்தியும்னனைச் சம்பராசுரன் எப்படித் தூக்கிச் சென்றான்? அந்த சம்பராசுரனை பிரத்தியும்னன் எப்படிச் சம்ஹாரம் செய்தான்: இதை எனக்கத் தெளிவாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டார். அதனால் பராசர மகரிஷி அந்தக் கதையைக் கூறலானார். மைத்ரேயரே கேளும். பிரத்தியும்னன் பிறந்த ஆறாவது நாளில், சம்பராசுரன் என்ற அரக்கன் இவன் நம்மைக் கொன்று விடுவான் என்று நினைத்து அவனைக் கருவுயிர்த்த அறையிலிருந்தே கொண்டு போய்விட்டான். பிறகு திமிங்கலங்களும் முதலைகளும் நிறைந்த லவண சமுத்திரத்தில் அந்தக் குழந்தையை வீசி எறிந்துவிட்டான். அந்தக் குழந்தையை மீன் ஒன்று விழுங்கியது. அந்த மீனின் வயிற்று நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அக்குழந்தை பகவானுடைய வீரியத்தால் உற்பத்தியானதால், மரணமடையாமல் இருந்தது. இது இப்படியிருக்க செம்படவர்கள் மீன் பிடிக்கும்போது அந்த மீனையும் பிடித்து அசுரர்களின் அரசனாகிய சம்பராசுரனிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். அந்த அசுரனுக்கு மாயாவதி என்பவள் பெயரால் மட்டுமே பத்தினியாக இருந்தாள். அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் சமையலுக்காக மீன்களைச் சேதிக்கும்பொழுது, ஒரு மீனினுள் அக்குழந்தை இருப்பதைக் கண்டாள். அதைக் கண்ட அவள், இந்தக் குழந்தை எரிந்துபோன மன்மதனாகிய மரத்தின் முதல் முளையைப்போல அழகாக இருக்கிறது. இது யார்? எப்படி மீன் வயிற்றில் வந்தது? என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு நாரதர் வந்தார், வந்தவர் மாயாவதியிடம் பெண்ணே இந்தக் குழந்தையைக் குறித்து யோசிக்க வேண்டாம். இவன் ஜகத் சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரங்களை நடத்துகின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குமாரன்! இவனை உன் கணவனான சம்பராசுரன் கொல்லவேண்டுமென்று நினைத்து, பிள்ளை பெற்ற அறையிலிருந்தே இக்குழந்தையைத் திருடிவந்து, சமுத்திரத்தில் எறிந்தான். அங்கே இந்த மீன் விழுங்கியது. அதன் பிறகு அவன் உன்னிடம் வந்து சேர்ந்தான். ஆகையால் இந்தப் புருஷ ரத்தினத்தை நீயே பயமின்றி பரிபாலனஞ் செய்து வருவாயாக! என்றார். அதைக் கேட்ட மாயாவதி அவர் சொன்னதிலிருந்து, பிரத்தியும்னன் என்ற அக் குழந்தையை மிகவும் அன்போடு போஷித்து வந்தாள். அவன் அழகைக் கண்டு இளமையிலிருந்தே அவன் மீது மாயாவதி காதலும் கொண்டிருந்தாள். அவன் யவுவனப் பருவமடைந்ததும் மாயாவதி அவன் மீது ஆசையுற்று அவனுக்குப் பலவிதமான மாயா வித்தைகளை கற்றுத் தந்து மனமும் கண்ணும் அவனை விட்டுப் பிரியாமல் அவன்மீது வைத்திருந்தாள். இது போல மாயாவதி தன் மீது காமமுற்றிருப்பதை கிருஷ்ண குமாரனான பிரத்தியும்னன் அறிந்ததும் நீ எனக்குத் தாயாக இருக்க அதைவிட்டு வேறு விதமாக என்னிடம் நடப்பதென்ன? என்று கேட்டான் அதற்கு மாயாவதி புருஷ ரத்தினமே கேள்! நீ என் மகன் அல்ல; ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மகன் உன் தாயின் கருவறையில் நீ இருக்கும்போதே உன்னை சம்பராசுரன் திருடிக்கொண்டுபோய்க் கடலில் வீசியெறிந்தான். அங்கு ஒரு மீன் உன்னை விழுங்கிற்று. அந்த மீன் இங்கு வந்தபோது; அதன் வயிற்றிலிருந்து உன்னை எடுத்துக் காப்பாற்றி வந்தேன். உன்னைப் பெற்றவள் உனக்காக அழுது கொண்டிருக்கிறாள். இதுவே உன் வரலாறு என்றாள். அதைக் கேட்டதும் பிரத்தியும்னன் மிகவும் கோபங் கொண்டு, சம்பராசுரனைச் சண்டைக்கு அழைத்தான். அந்த அசுரனும் சகல சேனைகளோடு திரண்டுவந்து பிரத்தியும்னனோடு போரிட்டான். பிரத்தியும்னன் அவனது சேனைகளையெல்லாம் அழித்தான். பிறகு சம்பராசுரன் ஏழு மாயைகளைப் பிரயோகித்தான். பிரத்தியும்னன் அவற்றையெல்லாம் கடந்துவந்து, எட்டாவது மாயையை அவன்மீது பிரயோகித்து அந்த சம்பராசுரனை அழித்தான். பிறகு அவன் மாயாவதியுடன் அங்கிருந்து புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்திற்கு வந்து குதித்தான்.

இவ்விதம் மாயாவதியுடன் அந்தப்புரத்தில் குதித்த அவனைப் பார்த்து, அங்கிருந்த பெண்களனைவரும் வடிவத்தால் ஒத்திருந்ததால் ஸ்ரீகிருஷ்ணன் என்றே நினைத்தார்கள். அப்பொழுது ருக்குமணி அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் ததும்ப எந்தப் புண்யவதியின் மகனோ-இவன்? நவமான யவுவனத்துடன் திகழ்கிறானோ; என் பிள்ளை பிரத்தியும்னன் பிழைத்திருந்தால் இந்த வயதுடையவனாக இருப்பானல்லவா? என்று நினைத்தாள். அவள் அவனைப் பார்த்து, மகனே! எனக்கு உன்மீது உண்டாகிற அன்பையும் உன் தேக எழிலையும் பார்த்தால் என் நாயகரான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் குமாரனாகவே நீ இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாரதர் கண்ணனையும் அழைத்துக் கொண்டு அங்கேவந்து சேர்ந்துவிட்டார். அவர் ருக்குமணிப் பிராட்டியை நோக்கி பெண்ணரசே! இவன் உன் மகன் பிரத்தியும்னன் தான் உன் சூதிகா கிருகத்திலிருந்து இவனை சம்பராசுரன் கொண்டு போனான். இப்போது இவன் அந்தப் பகைவனை அழித்துவிட்டு இங்கு வந்திருக்கிறான். இவனோடு வந்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மாயாவதி இவள் இவனுடைய பாரியை, சம்பராசுரனின் பாரியை அல்ல. இதற்கு ஒரு காரணம் உண்டு. அதைச் சொல்கிறேன் கேள். முன்பொரு சமயம் சிவபெருமானால் மன்மதன் அழித்தபோது, அவனது மனைவியான இந்த ரதி தேவி, மிகவும் பதிவிரதையாகையால் மறுபடியும் தன் நாயகனான மன்மதனின் ஜனனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரையில் காலந்தள்ளும் பொருட்டு பலவாறும் நடிக்கவேண்டியிருந்தது. இவளுடைய அழகான கண்களைக் கண்டு சம்பராசுரன் மயங்கி இவளைத் தன் பத்தினியாகத் தன் அந்தப்புரத்தில் வைத்துக்கொண்டான், அதனால் இவள் அந்த அசுரனைச் சமாளிப்பதற்காகப் பலவகையான போகங்களிலே மாயாமயமான ரூபங்களைக் காட்டித் தான் கிட்டப் போகாமலேயே, அவனது பத்தினியைப்போல், அவனை மோகங்கொள்ளச் செய்து வந்தாள். இவள் கனவிலும் நனவிலும் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருந்த மன்மதன் உனக்குப் புத்திரனாக அவதரித்தான். அந்த மன்மதனின் பத்தினியான இரதி தேவியே இவள்! இதில் சந்தேகப்படவேண்டாம் இவன் உன் மகன்; இவள் உன் மருமகள்! என்றார், அதைக் கேட்டு யாவரும் அதிசயமும் ஆனந்தமும் அடைந்தனர். நாடே அதிசயித்தது!

28. கல்யாணத்தில் சூதாட்டம்

பிரத்தியும்னனுக்குப் பின் சாருதேஷ்ணன்; சுதேஷ்ணன், சாருதேகன் கதேணன் சாருகுப்தன். பத்திரசாரு, சாருவிந்தன் சுசாரு. சாரு என்ற பிள்ளைகளும் சாருமதி என்ற ஒரு பெண்ணும் ருக்குமணிக்குப் பிறந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ருக்மணியைத் தவிர, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி ரோகிணி, சுசீலை; சத்தியபாமை, லக்ஷ்மணை என்ற ஏழு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் மித்திரவிந்தை என்பவள் காளிந்தன் என்பவனின் மகளாகையால், அவளுக்குக் களிந்தி என்று ஒரு பெயருண்டு. சத்தியை, நக்நஜித் என்பவனுடைய மகள். ஜாம்பவதி, ஜாம்பவானின் மகள். சுசீலை மத்திர ராஜனின் மகள். சத்தியபாமை சத்திராஜித்தன் மகள். ரோகிணி என்பவள் விரும்பும் ரூபத்தை எடுக்கவல்லவள். சுசீலை என்பவள் தன் பெயருக்கேற்றச் சிறந்த சீலமுடையவள். லக்ஷ்மணை சிரித்தால் மிகவும் அழகாக விளங்குபவள். அதனால் அவளுக்கு சாருஹாஸினி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஏழு மனைவியரும் தவிர, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பதினாறாயிரம் தேவிமார்களும் உண்டு. ருக்மணியின் குமாரனான பிரத்தியும்னன், சுயம்வரத்திலே தன் மீது காதல் கொண்டிருந்த மாமன் மகளான ருக்குமியின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டிருந்தான். அவளது கர்ப்பத்தில் மகா பராக்கிரமசாலியும் அளவற்ற வீரியமுடையவனுமான அநிருத்தன் என்பவன் அவதரித்தான். அவனுக்குத் திருமணஞ் செய்ய தம் மைத்துனனான ருக்குமி ராஜனின் பேத்தியையே கண்ணன் நிச்சயித்திருந்தார். ருக்குமிக்கு கண்ணன் பேரில் பகைமை இருந்தும், அவன் கண்ணன் விருப்பப்படி அவர் பேரனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருந்தான்.

மைத்ரேயரே கேளும்! அந்தக் கலியாணத்திற்கு பலராமரும் மற்ற யாதவர்களும் போஜகடம் என்ற ருக்குமியின் தலைநகருக்குப் போயிருந்தார்கள். அங்கு அநிருத்தனுக்குத் திருமணம் நடந்தவுடன் கலிங்க ராஜன் முதலியோர் ருக்குமியை நோக்கி, ருக்குமி! பலராமனுக்குச் சொக்கட்டான் ஆடத்தெரியாது, ஆயினும் அவனுக்கு அந்த ஆட்டத்தில் பிரியம் அதிகமுண்டு. ஆகையால் மகா பலசாலியான பலபத்திரனை நாம் சூதிலே வெற்றி பெறுவோம்! என்றார்கள். அதைக் கேட்ட ருக்குமியும் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தான். சபையிலே பலராமரோடு, ருக்குமியும் மற்ற அரசர்களும் சூதாட ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் பலராமர் பந்தயம் வைத்த ஆயிரம் வராகனையும் ருக்குமி ஜெயித்தான். இரண்டாவது ஆட்டத்திலும் மேலும் ஆயிரம்வராகன் ருக்குமியே ஜெயித்தான். பிறகு பலராமர், பதினாயிரம் வராகனைப் பந்தயமாக வைத்தார். அதையும் சூதில் வல்ல ருக்குமியே ஜெயித்துவிட்டான். இது போலவே மூன்று ஆட்டங்களிலும் பலராமர் தோற்றார். இதைக்கண்ட கலிங்க ராஜன் சிரித்தான். ருக்குமியும் ஐயோ பாவம்! இந்த பலராமன் சூதாடத் தெரியாதவன். வீணாக என்னோடு ஆடவந்து திரவியமெல்லாம் தோற்று அவமானப்பட்டு விட்டான். ஆனால் இவன் ஓர் அக்கிரமம் செய்து விட்டான். சூது தெரியாதவன் அந்த வித்தையில் வல்லவர்களை அவமானமாகப் பேசலாமா? என்றான்.

அதைக் கேட்டதும் பலராமர் விதர்ப்பராஜனையும் கலிங்க ராஜனையும் பற்றி இழுத்து கோபத்துடன், நல்லது! இந்தத் தடவையும் ஆடுவோம்! என்று ஒருகோடி வராகனைப் பணயமாக வைத்தார். ருக்குமியும் ஒன்றும் பேசாமல் பாசிகைகளை உருட்டினான். அந்த ஆட்டத்தில் பலராமர் ஜெயித்தார். அதனால் நான் ஜெயித்தேன்! என்று அவர் உரக்கக் கூவினார். அதை ருக்குமி மறுக்கும் விதமாக, பலனே! இந்த மட்டும் நீ சொன்ன பொய் போதும்! ஜெயித்தவன் நானே! எப்படியென்றால் நீகோடி வராகன் பந்தயம் என்று சொன்னாய்! அதைநான் ஒப்புக் கொள்ளவில்லை, இப்படியிருக்க நீ ஜெயித்ததாகச் சொல்லுவாயானால் நான் ஏன் ஜயித்தவனாகமாட்டேன்! என்று கூவினான். அப்போது ஆகாயத்தில் ஒரு வானொலி எழுந்தது அது கம்பீர நாதத்துடன் பலராமருக்குக் கோபம் ஏற்படும்படியாக, பலராமர் தருமமாகச் செய்தார். ருக்குமியோ பொய் சொன்னான். ஒரு விஷயம் வாயினால் சொல்லாமற் போனாலும் காரியத்தை நடத்தினால் அது ஒப்புக்கொண்டதே ஆகும் என்றது. அதைக் கேட்ட பலராமரின் கண்கள் சிவந்தன. அவ சூதாடும் சதுரங்கப் பலகையை எடுத்து அதனாலேயே ருக்குமியை அடித்துத் தள்ளி, அதனாலே தந்தவக்கிரனுடைய சிரிப்புடன் வெளிப்பட்ட பற்களையெல்லாம் உதிர்த்துத் தள்ளினார். அங்கிருந்த ஒரு தூணை எடுத்து, மற்ற அரசர்களனைவரையும் அடித்து விரட்டினார். மைத்ரேயரே! இவ்வாறு பலராமர் கோபமாகச் சண்டையிடுவதைக் கண்டு ராஜமண்டபத்திலிருந்த அரசர்கள் ஓடிப்பறந்தனர். இப்படி நடப்பதைப் பார்த்திருந்த ஸ்ரீகிருஷ்ணன் ருக்குமாவதத்தைக் குறித்து மூத்தவரை வெறுத்தால் அவருக்குக் கோபம் வரும் அது நல்லதுதான் என்றாலோ தன் தேவியின் திருவுள்ளம் சீறும் என்றும் நினைத்தும் எதையும் பேசாமல் மவுனமாக இருந்தார். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் விவாகமானதன் பேரனையும் மனைவியையும் மற்ற யாதவரையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றார்.

29. நரகாசுர வதம்

மைத்ரேயரே! மேலும் கேளும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையை அடைந்தபோது மூவுலகங்களுக்கும் அதிபதியான தேவேந்திரன் தன் பட்டத்து யானையான ஐராவதத்தின்மீது ஏறிக்கொண்டு, துவாரகைக்கு வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, நரகாசுரனைப் பற்றிச் சொல்லத் துவங்கினான். மதுசூதனா! நீ மானுஷ்ய அவதாரஞ் செய்திருந்தாலும், உன்னால் தேவர்களின் துன்பங்கள் போகின்றன. அரிஷ்டன், தேஜகன், கேசி முதலிய அரக்கர்களை, அழித்துத் தவமுனிவர்களைக் காத்தாய் இதனால் உன் திருத்தோள் வலிமையால் மூன்று லகங்களும் பாதுகாக்கப்படுகின்றன. தேவர்கள், யாகங்களில் தமக்குரியபங்குகளைப் பெறுகின்றனர். நான் எதற்காக உன்னை நாடி வந்தேனோ, அதைக் கேட்டு ஆவன செய்யவேண்டும். சத்துரு நாசகனே! பிராக்ஜோதிஷம் என்ற நகரில் பூமியின் புதல்வனான நரகாசுரன் என்று ஒருவன் சகல பிராணிகளுக்கும் கொடுமை செய்துவருகிறான் தேவர், சித்தர், கந்தர்வர் முதலியவர்களின் கன்னிகைகளையும் அரசர்களின் குமாரிகளையும் வலுவில் அபகரித்துச் சென்று தன்மாளிகையில் சிறை வைத்திருக்கிறான். எப்பொழுதும் மழை பொழிவதான வருணனின் குடையைக் கவர்ந்தான். மந்தர பர்வதத்தின் சிகரத்தைக் கொண்டு போனான். பகவானே! இன்னுங்கேள். என் தாயான அதிதியின் அமுதம் ததும்பும் குண்டலங்களைக் கவர்ந்து விட்டான். இத்துடன் நில்லாமல் எனது ஐராவதத்தையும் கவர்ந்து செல்லப் பார்க்கிறான். இத்தகைய நரகாசுரனின் அநியாயங்களை உன் சன்னதியில் விண்ணப்பித்துவிட்டேன். இனி ஆவன செய்வாயாக! என்றான். அதைக் கேட்ட கிருஷ்ணன், புன்னகை கொண்டு இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். பிறகு கருடனை நினைத்தார். உடனே அந்தப் பெரிய திருவடியின்மேல் தம் தேவியான சத்தியபாமையை ஏற்றுவித்து, தாமும் அமர்ந்து கொண்டு பிராக்ஜோதிஷ புரத்திற்குப் பறந்து சென்றார்.

அங்கு நரகாசுரனின் மந்திரியான முரன் என்பவன், பிராக் ஜோதிஷபுரத்தைச் சுற்றி நூறு காதச் சுற்றளவுக்குச் சிறு கத்திகள் நுனியில் இருக்கப்பெற்ற பாசங்களைப் பரப்பி, யாருமே அதனுள் நுழையாதபடி அமைந்திருந்தான். அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன், தம் திருவாழியை பிரயோகித்து அந்தப் பாசங்களையெல்லாம் அறுத்தெறிந்தார். உடனே முரன் என்பவன் அவரை எதிர்த்துச் சேனைகளோடு போருக்கு வந்தான். கண்ணன், அவனையும் அவனுடைய மக்கள் ஏழாயிரம் பேரையும் விளக்கில்படும் பூச்சிகளைப்போல் தம் சுதரிசன சக்கரத்தால் எரித்துவிட்டார். இவ்விதமாக முரன், அயக்கிரீவன், பஞ்சசனன் என்ற மந்திரிகளை நாசஞ்செய்து தலைநகரினுள்ளே பிரவேசித்தார். அங்கே ஏராளமான சேனைகளுடன் எதிர்த்து வந்த நரகாசுரனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் கடுமையான பெரும் போர் நடந்தது. அந்தப் போரிலேதான், மிகவும் கொடிய ஏராளமான அசுரர்களை கண்ணன் சங்கரித்தார். தன்படைகள் ராசி ராசியாக மடிவதைக் கண்ட நரகாசுரன் கண்ணன்பேரில் பலவகை ஆயுதங்களைப் பிரயோகித்தான் கண்ணன், அவற்றையெல்லாம் அழித்து, இறுதியில் சக்கராயுதத்தைப் பிரயோகித்து நரகாசுரனை இரு பிளவாக்கி வீழ்த்தினார். அவன் வீழ்ந்ததும் பூமிதேவி அதிதியின் குண்டலங்களை எடுத்துக்கொண்டு கண்ணன் திருவடிகளை வணங்கி, விண்ணப்பம் செய்யத் துவங்கினாள்.

நாதனே! எப்போது நீ வராஹ அவதாரஞ் செய்து, என்னை உன் கோட்டின் மேல் கொண்டாயோ அப்போதே உன் ஸ்பரிசத்தால் இந்த நரகன் எனக்குப் பிறந்தான். ஆகையால் நீயே எனக்கு இந்த மகனைத் தந்தாய் நீயே அவனை நாசஞ் செய்தாய், இதோ குண்டலங்கள்! இவற்றை ஏற்றுக் கொள். நரகனுடைய சந்ததியை பரிபாலனஞ் செய்தருள்! என் பாரத்தைக் குறைக்கவே நீ இந்த உலகில் அவதரித்து அருள்கின்றாய்! நீயே உற்பத்தி ஸ்தானம். நீயே லய ஸ்தானம் நீ என் புதல்வன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும்! பாவங்களைப் போக்கவே உன் மகனான நரகனை நீயே சங்கரித்தாய். ஆகையால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! என்றாள். கண்ணபிரான் அவளைக் கடாட்சித்தார். பிறகு நரகனது மாளிகையின் அந்தப்புரத்திலிருந்த பதினாயிரத்து ஒரு நூறு கன்னியரையும் அவனது வாகன சாலையிலிருந்த ஆறு தந்தங்களைக் கொண்ட ஆறாயிரம் சிறந்த யானைகளையும் இருபத்தோருலக்ஷம் காம்போஜக் குதிரைகளையும், அவனது சேவகரைக் கொண்டே துவாரகையில் சேர்ப்பித்தார். அன்றியும் வருணனுடைய குடையையும் மணி பருவதத்தையும் கண்டு, அவற்றைப் பெரிய திருவடியின் மேல் ஏற்றிக் கொண்டு சத்தியபாமையுடன் தாமும் ஏறி, அதிதியிடம் அமுத குண்டலங்களை ஒப்படைப்பதற்காகவே தேவலோகத்துக்கு எழுந்தருளினார்.

30. பாரிஜாத அபஹரணம்

ஸ்ரீகிருஷ்ணன் தேவலோகத்திற்குச் சென்று சுவர்க்கத்தையடைந்ததும் அதன் வாயிலில் நின்று, தமது திருச்சங்கை ஊதினார். அந்தச் சங்கநாதத்தைக் கேட்டதும் அமரர்கள் அனைவரும் அர்க்கியத்தைக் கையிலேந்தி அவரை வரவேற்று திருவடிதொழுது உபசரித்தனர். பிறகு கருடத்துவஜன் தேவ மாதாவின் திருமாளிகைக்கு விஜயம் செய்தார். இந்திரனுடன் அதிதியைத் தொழுது, நரகாசுரனை வதைத்த தகவலை ஸ்ரீகிருஷ்ணன் சொன்னார். லோக கர்த்தாவான அந்தப் பகவானை இந்திரனின் தாயான அதிதி மிகவும் பக்தியோடு துதித்தாள். தாமரைக்கண்ணா! அடியார்க்கு அபயமளிக்கும் அண்ணலே உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன் மனம் புத்தி இந்திரியம் இவற்றுக்குக் கர்த்தாவே! ஞானியரின் இதயத்தில் இருப்பவனே! சீதோஷ்ணாதி உபாதையில்லாதவனே; சொப்பனம் முதலிய அவஸ்தைகளற்றவனே! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது! அதனால்தான் மூடன் ஆன்மாவல்லாததை ஆன்மாவென்று நினைத்துப் பந்திக்கப்படுகிறான். உலகத்தார் உன்னை ஆராதித்து புத்திராதிகளான இஷ்டங்களை வேண்டுகிறார்களேயல்லாமல், தங்களுக்கு நேர்ந்துள்ள சம்சாரத்துக்கு நாசத்தை வேண்டாமல் இருக்கிறார்கள் என்றால் அது உன் மாயையேயாம்! இதற்கு ஓர் உதாரணம் பார் நான் உன்னை என் புத்திரனுக்காகவும் சத்துரு நாசத்துக்காகவுமே ஆராதித்தேனே தவிர மோட்சத்துக்காக அல்ல. இதுவும் உன் மாயைதான்! எதுவும் தரவல்ல கற்பக விருட்சத்திடம் ஒருவன் சென்று, தனக்குக் கோவணம் தரவேண்டுமென பிரார்த்தித்தான் என்றால் அது அவன் குற்றமேயாகும். கற்பக மரத்தின் குற்றமாகாது. நீயே, ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்கவேண்டும். ஓ பகவானே! நான் உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! ஸ்தூலமான உனது ரூபத்தைக்காண்கிறேனேயன்றிச் சூஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே! ஆகிலும் எனக்காக அனுக்கிரகித்து அருள்செய்ய வேண்டுகிறேன் என்றாள். அதிதியினால் துதிக்கப்பட்ட ஸ்ரீபகவான், அந்த தேவ மாதாவை நோக்கி, புன்னகையுடன் அம்மா! நீ எங்களுக்குத்தாய் ஆகையால் நீ தான் எங்களுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டும்! என்றார். அதைக்கேட்ட அதிதி உன் திருவுள்ளம் அப்படியானால், அப்படியே ஆகட்டும் நானும் வரம் தருகிறேன். நீ பூவுலகிலும் சுரராலும் அசுரராலும் வெல்லக்கூடாதவன் ஆகக்கடவாய்! என்று மங்களாசாசனம் செய்தாள்.

பிறகு சத்தியபாமையும் தேவமாதாவான அதிதியை வணங்கி, அம்மா! நின்னை அனுக்கிரகித்து அருளவேண்டும் என்றாள். ஓ பெருமாட்டியே! உனக்கு மூப்பாகிலும் ரூபமாறுதலாகிலும் உண்டாகாதிருக்கக் கடவன! இந்த இளமையே உனக்கு நிலைத்து, எப்போதும் குற்றமற்றத் திருமேனியையுடையவளாய் இருப்பாயாக! என்று மங்களாசாசனம் செய்து இந்திரனுக்கும் கட்டளையிட அவனும் கண்ணனைப் பூசித்தான். இந்திரன் மனைவியான சசிதேவி சத்தியபாமைக்குப் பலவித உபசாரங்களைச் செய்தாள். ஆயினும் பாரிஜாத மலர்களைத் தான் சூடிக்கொண்டாளேயன்றி சத்தியபாமைக்கு வழங்கவில்லை. ஏனென்றால் அவள் சத்தியபாமையை மானிடப் பெண் என்றும் தேவருக்கே உரிய பாரிஜாதம் அவளுக்குத் தகாதது என்றும் நினைத்து விட்டாள்.

இவ்விதமாகப் பூஜிக்கப்பட்ட பிறகு ஸ்ரீகிருஷ்ணன் சத்தியபாமையுடன் தேவலோகத்து நந்தவனங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தார். அங்கே பலவகையான மலர்ச் செடி கொடி வகைகள் அழகழகாக வளர்க்கப்பட்டிருந்தன. மேலும் மகா சுகந்தமுள்ள பூங்கொத்துகளாகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதாயும் மாணிக்கம் போல இளந்தளிர்களால் செழித்தும், பொன் போன்ற பட்டாடைகளால் மூடப்பட்டு எப்போதும் ஆனந்தமுண்டாக்குவதாயும், பாற்கடல் கடைந்தபோது அதிலே உண்டானதாயுமிருந்த பாரிஜாத மரத்தைக் கண்டார். அப்போது சத்தியபாமை ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, நாதா! நீங்கள் என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வீர்களே அது ஞாபகமிருக்கிறதா? அதாவது நான் தான் உங்களுக்குப் பிரியையானவள், என்று நீங்கள் அடிக்கடிச் சொல்வது மெய்யானால் இந்தப் பாரிஜாதத்தருவைத் துவாரகைக்குக் கொண்டுபோக வேண்டும். ஜாம்பவதியானாலும் ருக்குமணியானாலும் உன்னைப்போல எனக்குப் பிரியமானவர்களல்ல என்று நீங்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வதெல்லாம் வெறும் உபசார வார்த்தைகளாகச் சொல்லாமல் உண்மையாகச் சொன்னதாக இருந்தால் இந்தப் பாரிஜாத மரத்தை என் மாளிகையின் புழைக்கடைக்குப் கொண்டுபோய் வைக்க வேண்டும்! நான் இதன் மலர்களைக் கொண்டு, என் கூந்தலை அலங்கரித்து என் சக்களத்திமார் நடுவில் மிகவும் சிறந்திருக்க வேண்டும். இது என் விருப்பம்! என்றாள்.

உடனே ஸ்ரீ கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து பெரிய திருவடியான கருடனின் திருத்தோள் மீது வைத்தார். அப்போது அந்த வனத்துக் காவற்காரர்கள் ஓடி வந்து, கிருஷ்ணா! இந்திரனது பட்டத்து ராணியான சசிதேவியின் உரிமையான பாரிஜாதத்தை நீ கொண்டு போகாதது! இது உண்டான போதே யாவரும் இதை தேவராஜனுக்குக் கொடுத்துவிட்டார்கள். அவரோ, தமது காதலியான சசிக்குக் கொடுத்தார். அவளது அலங்காரத்துக்காகவே அமுதங் கடைந்தபோது தேவர்கள் இந்தப் பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மரத்தை நீ கொண்டுபோனால் ÷க்ஷமமாய் உன் ஊர் போய்ச் சேரமாட்டாய். எந்தப் பிரிய நாயகியின் முகத்தைப் பார்த்து தேவராஜன் சகல காரியங்களையும் செய்கிறானோ, அத்தகைய தேவநாயகியான சசிதேவியின் பிரியத்துக்குப் பாத்திரமான இந்தப் பாரிஜாத மரத்தை நீ மூடத்தனமாக விரும்புகிறாய். இதை அறிந்தால் இந்திரன் வஜ்ராயுதத்தால் உன்னையே எதிர்த்துப்போர் செய்வான். அவனையே சகல தேவர்களும் பின்தொடர்வார்கள். நீ இதற்காக தேவர்களனைவரோடும் போரிட வேண்டியிருக்கும். ஆகையால் புத்திசாலிகள் கேட்டை விளைவிக்கும் காரியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்! என்றார்கள்.

அதைக்கேட்டதும் சத்தியபாமைக்கு கோபம் பொங்கியது. அவள் அவர்களை நோக்கி, காவற்காரர்களே! இந்த மரத்துக்கு இந்திரன் யார்? சசி யார்? இது அமிர்தம் கடையும் போது கிடைத்தது என்றால், இது எல்லோருக்கும் பொதுவாக அல்லவோ இருக்கவேண்டும்? அப்படியிருக்க இந்திரன் ஒருவனே எப்படிக் கைகொள்ளலாம்? திருப்பாற் கடலில் பிறந்த அமுதம், சந்திரன், காமதேனு முதலியவை எப்படி யாவருக்கும் பொதுவோ அப்படியே இந்தப் பாரி நாதமும் எல்லோருக்கும் பொதுவாக வேண்டுமேயன்றி இந்திரனுக்கு மட்டுமே எப்படி உரிமையாகலாம்? ஆனால் இந்திராணி தன் கணவன் புஜபலத்தைப் பற்றிய கர்வத்தால் இதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று தடுக்கிறாள். நல்லது. இப்போது இதை சத்தியபாமை தான் எடுப்பித்தாள் என்று அவளிடம் போய்ச் சொல்லுங்கள். நீங்கள் சிக்கிரம் சென்று இந்திராணியிடம் நீ உன் புருஷனுக்குப் பிரியமானவளாக இருந்து, அவன் உனக்கு வசப்பட்டவனாக இருந்தால், என்கணவன் இதை எடுத்துக்கொண்டு போவதை நிறுத்திவிடு பார்க்கலாம்! உன் கணவன் இந்திரன் தேவர்களுக்கு அரசன் என்பதை நான் அறிவேன். அறிந்துதான் மனித மங்கையாக இருக்கும் நான் உன்னுடையது என்று சொல்லப்படும். இந்த மரத்தை எடுப்பித்தேன், என்று கண்ணன் மனைவி சத்தியபாமை கர்வத்தோடு சொன்னாள் என்று நான் சொன்னவற்றை, அப்படியே தேவராணிக்குச் சொல்லுங்கள் என்றாள். காவலர்களும் ஓடிச் சென்று அப்படியே இந்திராணி சசிதேவியிடம் சொன்னார்கள். உடனே இந்திராணி தன் கணவனான இந்திரனைத் தூண்டிவிட்டாள்.

மைத்ரேயரே! இவ்விதமாக இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட்டதும், அவன் பாரிஜாதத்திற்காகச் சகல தேவ சைன்னியங்களுடன் சாக்ஷõத் பகவானோடு போர் செய்ய வந்தான். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனின் தலைமையில், வானவர்கள் இரும்புத்தடி, கத்தி சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்தனர். இந்திரன் ஐராவதத்தின் மேலேறி வந்தான். அதைக் கண்ட கண்ணன் திசைகள் யாவும் அதிரும்படி, சங்கத்வனி செய்து ஆயிரம் ஆயிரம் பாணங்களை வர்ஷித்தார். தேவேந்திரன் ஸ்ரீகிருஷ்ணன் இரு தரப்பினரிடையில் நெடுநேரம் போர் நிகழலாயிற்று. தேவேந்திரனின் தரப்பில் வருணதேவன் தன் பாசத்தை பிரயோகித்தான். கண்ணன் தரப்பில் கருடன் சிறிய பாம்பைத் துண்டிப்பது போல தனது மூக்கினாலே துண்டித்துவிட்டார். யமன் கால தண்டத்தை எறிந்தான். மதுசூதனன் அதைத் தமது கதாயுதத்தால் கீழே தள்ளினார். குபேரன் சிபிகை என்ற ஆயுதத்தை வீச அதைத் திருவாழியினாலே கண்ணன் பொடியாக்கினார். சூரியனைத் தனது திருக்கண் ஒளியாலே ஒளியற்றவனாக்கி, அக்கினியையும் குளிர்ந்துவிடச் செய்தார். வசுக்களைச் சிதற வடித்தார். உருத்திரர்களைச் சக்ராயுதத்தால் சூலங்களை முறித்துத் தரையில் படுக்கச் செய்தார். கந்தர்வர், வசுவர், முதலியோர் இலவம் பஞ்சு போலப் பறந்தனர். மதுசூதனனும் தேவேந்திரனும் அம்புகளை மழை பொழிவது போல் பொழிந்தனர். அப்போது ஐராவதத்தோடு கருத்துமான் போரிட்டார். போரில் யாவும் ஒழிந்தன. இந்திரன் தன் வஜ்ராயுதத்தை எடுத்தான். கண்ணன் சுதர்சனத்தை கையில் எடுத்தார். இருவரையும் இந்நிலையில் எதிர் எதிராகக் கண்ட சர்வ லோகமும் நடுங்கின. இப்படியிருக்க, இந்திரன் வஜ்ராயுதத்தை எம்பெருமான் மீது பிரயோகித்தான். கண்ணனோ, அதைத் தம் கையால் பிடித்துக்கொண்டு, தம் சக்ராயுதத்தைப் பிரயோகிக்காமல், இந்திரா! நில் என்றார்.

வஜ்ராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்வுற்றதால் ஓடவும் முடியாமல் அவன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை அவனை நோக்கி, இந்திரா! நீ மூவுலகுக்கும் அதிபதி. சசியின் கணவன்! நீ ஓடுவது தகுதியற்ற செயல் உன் மனைவி பாரிஜாத மாலைகளை ஏராளமாக அணிந்து, உன்னைப் பணிவாளல்லவா? வாசவா! உன்னுடைய கர்வியான பத்தினி முன்போல் இனி பாரிஜாத மலரோடு உன்னிடம் அன்போடு பார்க்க முடியாதபோது உன்னுடைய தேவ ஆட்சி எதற்குப் பயன்படும், இந்திரா, நீ வருந்தியது போதும். வெட்கப்படாதே! பாரிஜாதத்தைக் கொண்டுபோ, இதற்காகத் தேவர்கள் வருந்த வேண்டாம். அந்த சசி, தன் கணவன் தேவர்களுக்கே அரசன் என்ற கர்வத்தால், தன் மாளிகைக்கு வந்த என்னை மதிக்கவில்லை. அது பற்றிப் பெண்மையால் ஆழ்ந்திராத சித்தமுடைய நான், என் கணவரின் மகிமையைக் கொண்டாடி, உன்னோடு போர் செய்யச் செய்தேன். பாரிஜாதத்திற்காக நான் என் கணவரைத் தூண்டவில்லை. அதற்காக போருக்குத் தூண்டவும் இல்லை. பிறர் பொருளை நான் அபகரித்தது போதும். பாரி ஜாதத்தை நீயே கொண்டுபோ! புருஷனது பெருமையைப் பற்றிக் கர்வப்படாத பெண்ணே உலகத்தில் இல்லை. ஆனால் சசியோ, அதற்காக மட்டும் கர்விக்கவில்லை. ரூபத்தாலும் மிகவும் கர்வமுடையவளாக இருக்கிறாள்! என்றாள். அதைக்கேட்டதும் இந்திரன் ஓடாமல் நின்று சத்திய பாமையை நோக்கி, கொடியவளே! இஷ்டனுக்குத் துக்கமுண்டாகும்படி ஏன் பேசுகிறாய்? எவன் எல்லாவற்றுக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார கர்த்தாவாக இருக்கிறானோ, அத்தகைய பகவானால் ஜெயிக்கப்பட்ட எனக்கு ஏன் வெட்கம் உண்டாகிறது? சூட்சுமத்துக்கும் சூட்சுமமாய், சகலவற்றிற்கும் பிறப்பிடமாய் இருக்கும் எவனுடைய சொரூபம் சகல வேத சாஸ்திரங்களையும் அறிந்தோருக்கன்றி, மற்றவர்களால் அறியப்படாமல் இருக்கிறதோ, எவன் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருவுள்ளத்தால் உலக நன்மை கருதி மனுஷ்ய அவதாரஞ் செய்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்லும் வல்லவன் யார்? ஆகையால் நான் தோல்வியடைந்தது நியாயம்தான்! என்றான்.

31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்

மைத்திரேயரே! இந்திரன் தோற்றுத் துதித்ததும் கிருஷ்ணபகவான் கருத்து ஆழ்ந்திருக்கும்படிச் சிரித்து, ஓ, லோகேசுவரனே! நீயோ தேவர்களின் அரசன் நானோ மனிதன்! ஆகையால் எங்கள் அபராதத்தை நீயே பொறுக்க வேண்டும். அந்தப்பாரிஜாத விருட்சத்தைத் தகுந்த இடத்திற்குக் கொண்டு போகலாம். இதை நான் சத்தியபாமை வார்த்தையால் எடுத்தேனேயன்றி என் விருப்பத்தாலல்ல. நீ பிரயோகித்த உன் வஜ்ராயுதத்தை நீயே வைத்துக்கொள். இது உனக்குத்தான் சத்துரு சங்காரத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறியருளினார். அதைக் கேட்டதும் இந்திரன், எம்பெருமானே! நான் மனிதன் என்று நீ சொல்லி, ஏன் என்னை மயக்குகிறாய்? உன்னை நான் அறிவேன். ஆயினும் சூஷ்மத்தை அறியேன், ஜகத் ரக்ஷிப்புக்குரியவன் எவனோ, அவனே நீ! ஓ அசுரசங்காரனே! இப்போது உலகத்துக்கு உபத்திரவம் செய்வோர்களைக் களைந்து வருகிறாய். இந்தப் பாரிஜாதத்தை துவாரகைக்கு நீயே கொண்டு போக வேண்டும். நீ பூமியை விட்டுப்போன பிறகு அது அங்கிராது. தேவ தேவா! ஜகந்நாதா! ஸ்ரீ கிருஷ்ணா! ஸ்ரீ விஷ்ணுவே! சங்கு சக்கர கதாபாணியே! அடியேனிடம் கிருபை கூர்ந்து அபராதத்தை மன்னித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து, பூலோகத்திற்குச் சென்று துவாரகைக்கு மேலே நின்று, சங்கநாதம் செய்தார். துவாரகையில் இருக்கிறவர்கள் எல்லாம் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். நகரத்தாரெல்லாம் பார்த்திருக்க, கருடன் மீதிருந்து, சத்தியபாமையோடு ஸ்ரீகிருஷ்ணன் கீழே இறங்கி, அந்தப் பாரிஜாத மரத்தை சத்தியபாமாவின் மாளிகையிலுள்ள புழைக்கடையில் நாட்டியருளினார்.

அந்தப் பாரிஜாத விருட்சத்தின் மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள். அதன் அருகே சென்ற மனிதனுக்குத் தன் பூர்வ ஜனன ஸ்மரணை உண்டாகும். அதன் மலர்களுடைய சுகந்தம் மூன்று காதமளவு வீசிக்கொண்டிருக்கும். அத்தகைய விருட்சத்தின் அருகே சென்று யாதவர்கள் அதைப் பார்த்துத் தங்களுடைய தேகங்களைத் தேவதேகங்களாகக் கண்டார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் பிராக்ஜோதிஷ நகரிலிருந்து கொண்டுவந்த யானை, குதிரை முதலான பொருட்களைச் சுற்றத்தாருக்குத் தக்கபடி பிரித்துக் கொடுத்தார். பிறகு நரகாசுரன் பல திசைகளிலிருந்தும் கொண்டு வந்து சிறைப்படுத்தியிருந்த கன்னியரையெல்லாம் நல்லதொரு நாளிலே நன் முகூர்த்தத்தில் திருமணம் புரிந்து கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். அந்தப் பதினாறாயிரத்து ஒரு நூறு மங்கையருக்கும் ஒரே நேரத்தில் தனித்தனியாய் ஒவ்வொருவராயிருக்கும்படி அத்தனை ஆயிரம் திருமேனி எடுத்து அங்கங்கே விதிப்படித் திருமணஞ் செய்து கொண்டார். அம்மங்கையரில் ஒவ்வொருத்தியும் தன் தன் கைகளைப் பிடித்திருப்பது கிருஷ்ணமூர்த்தியென்றே நினைத்திருந்தார்கள். இவ்வாறு திருக்கல்யாண மகோத்சவத்தில் மட்டுமின்றி, இதுபோல் பல ரூபங்கொண்டு, ஒவ்வொரு இரவிலும் அந்தந்த பாக்கியவதிகளின் மாளிகைகளில் தோன்றி, அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.

32. உஷையின் கனவும் காதலும்

மைத்ரேயரே! ருக்குமணிப் பிராட்டிக்கு பிரத்தியும்னன் முதலிய குமாரர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா? மற்றவர்களுக்குச் சொல்கிறேன், கேட்பீராக, சத்தியபாமைக்குப் பானு, பவுமன், இரிகன் முதலிய குமாரர்கள் அவதரித்தார்கள்- தீப்திமான், தாம்பிரபக்ஷன் முதலியவர் ரோகிணியின் பிள்ளைகள். சாம்பன் முதலியோர் ஜாம்பவதியின் பிள்ளைகள். பத்திரவிந்தாதிகள் நாக்னஜிதியின் பிள்ளைகள். சயிப்பியை என்பவளுக்கு சங்கிராமஜித்து முதலியோர் பிறந்தார்கள். விருகன் முதலியவர்கள் மந்திரியிடம் உதித்தவர்கள். காத்திரவான் முதலியோர் லஷ்மணையின் புதல்வர்கள். சுரதன் முதலியோர் காளிந்தியின் மக்கள். மற்ற தேவிமாரிடத்தில் பலர் பிறந்தனர். இவ்வாறு பல தேவிமார் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறந்த குமாரர்கள் எண்பதினாயிரத்து நூற்றுவராகும். இவர்கள் யாவருக்கும் எல்லா வகையிலும் மூத்தவன் பிரத்தியும்னன்! அவன் குமாரன் அநிருத்தன். அவன் குமாரன் வஜ்ரன் அநிரு தன் என்பவன் பலிச்சக்கர வர்த்தியின் பேர்த்தியும் பாணனுடைய மகளுமான உஷை என்பவளைத் திருமணஞ் செய்து கொண்டான். அதன் காரணமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கும் சங்கரனுக்கும் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அதில் ஸ்ரீ கிருஷ்ணன் பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துண்டித்து விட்டார்! இவ்வாறு பராசர மகரிஷி கூறிவரும்போது மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! உஷையின் காரணமாக ஹரிஹரர்களுக்கு எப்படிப்போர் உண்டாயிற்று? ஸ்ரீ ஹரி, எப்படிப் பாணனுடைய தோள்களைத் துண்டித்தார்? இவற்றை எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பராசர முனிவர் சொன்னதாவது :

கேளும் மைத்ரேயரே! பாணன் என்னும் அசுரனுக்கு உஷை என்னும் ஒரு புதல்வி இருந்தாள். ஒரு சமயம் சிவனோடு கூடி மகிழ்ந்து கொண்டிருந்த பார்வதியை உஷை பார்த்துவிட்டு, அதுபோலத் தானும் கூடிமகிழவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளது கருத்தை அறிந்த பார்வதி அவளைப் பார்த்து, பெண்ணே! நீ ஏன் இப்படித் தவிக்கிறாய்? உன் புருஷனுடன் கூடி நீயும் இப்படிக் கிரீடிப்பாய்! என்றாள். அதைக் கேட்ட உஷை, இந்தச்சுகம் எனக்கு எப்பொழுது கிட்டுமோ? என் புருஷன்தான் எவனோ? என்றாள். அதற்குப் பார்வதி, ஓ ராஜகுமாரி! வைகாசி மாதச் சுக்கில பக்ஷத் துவாதசியில், உன் கனவில் எவன் உன்னோடு ரமிப்பானோ, அவனே உனக்குக் கணவனாவான்! என்று கூறியருளினாள்.

பிறகு பார்வதி சொன்னதுபோல அந்த நாளில் ஒரு புருஷனோடு உடலுறவு கொண்டதாக உஷை கனவு கண்டு அவனிடத்திலேயே ஆசை மிகுந்தவளாய்க் கண்விழித்தாள். அந்த புருஷனைக் காணாமல் என் பிராண நாயகா! நீ எங்கே போனாய்? என்று நாணமின்றி விரகதாபத்தோடு புலம்பினாள். அதை அவளுடைய தோழியான சித்திரலேகை கேட்டு விட்டாள். உஷையின் தந்தையான பாணாசுரனுக்கு மந்திரியாக விளங்கும் பாண்டனின் மகள்தான் சித்திரலேகை. உஷையின் தோழியாக இருந்த அவள், உஷையிடம் நீ யாரைப்பற்றி இப்படிப் புலம்புகிறாய்? என்று கேட்டாள். உஷையோ வெட்கத்தால் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். சித்திரலேகை தன்மீது நம்பிக்கை ஏற்படும்படி உஷையை சமாதானம் செய்தாள். பிறகு உஷை, தான் கனவுகண்ட கனவு நிகழ்ச்சிகளையும் பூர்வத்தில் தன்னிடம் பார்வதி தேவி சொன்னதையும் சொல்லி, அடி தோழி! இவ்விதமான புருஷனை நான் அடைவதற்கு எது உபாயமோ, அதை நீயே செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு சித்திரலேகை, அடி என்னுயிரே! நீ சொன்ன சங்கதி அறிவதற்கே கஷ்டமானது. சொல்லவும் அடையவும் இயலாதது. ஆனாலும் நான் உனக்கு உபகாரம் செய்ய வேண்டும். ஆகவே நான் முயற்சி செய்கிறேன். நீ ஏழெட்டு நாட்கள் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லி, ஓர் உபாயம் செய்ய யோசித்தாள். அதன்படிச் செய்யலானாள்.

அதாவது தேவர்கள், கந்தர்வர், அசுரர், மனிதர் முதலியவர்களில் முக்கியமாயுள்ள வாலிபர்களின் உருவங்களையெல்லாம் ஓவியமாக சித்திரலேகை வரைந்து அந்த ஓவியங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக உஷையிடம் காண்பித்தாள். அவற்றை அவள் காண்பித்து இவர்களில் உன் காதலன் யார் என்று கேட்டாள். உஷையோ ஓவியத்தில் இருந்த தேவ, தானவ, கந்தர்வர்கள் அனைவரையும் விட்டுவிட்டு, மனிதர் வரிசையில் பார்த்தாள். அதில் யாதவர்களில் கண் வைத்தாள். கண் வைத்து ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு வெட்கப்பட்டவளாகிப் பிரத்தியும்னனைக் கண்டு நாணிக் கண்ணை அப்புறம் போக்கி, கடைசியில் அநிருத்தனைக் கண்டு நாணந் துறந்து இவன்தான் என் கனவில் வந்தவன்! என்னைக் கனவிலே கலந்து மகிழ்ச்சி தந்தவன்! அந்தக் கனவு நாயகன் இவனேதான் என்றாள். அதைக்கேட்டதும் சித்திரலேகை மகிழ்ந்தாள். அவள் தனது யோகவித்யா பலத்தால் வானத்திற் செல்லக்கூடிய வல்லமையுடையவள். ஆகையால் அவள், உஷையை நோக்கி, ஸ்திரீ ரத்தினமே இவன் ஸ்ரீகிருஷ்ணனுடைய பேரன் இவன் பெயர் அநிருத்தன். அழகும் வீரமும் கொண்ட புகழ் பெற்றவன். இவனையல்லவா பராசக்தி உனக்குப் பர்த்தாவாக அணுகிரகித்தாள்? நீ இவனைப் பெறுவாயானால் எல்லாச் செல்வங்களையும் நீயே பெற்றதுபோல் வாழலாம். இவன் வாசஞ்செய்யும் துவாரகையோ யாரும் பிரவேசிக்க முடியாதது. ஆயினும் என்னால் இயன்றவரை முயன்று பார்க்கிறேன். உன் கனவு நாயகனை இங்கே கொண்டு வருகிறேன். இந்த ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லிவிடாதே! நான் விரைவில் வந்துவிடுகிறேன் என்று உஷைக்குச் சமாதானம் சொல்லிவிட்டு சித்திரலேகை விண்வெளி வழியாகத் துவாரகைக்குச் சென்றாள்.

33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்

உஷையின் தந்தையான பாணாசுரன் முன்பொரு சமயம் சிவபெருமானைத் தொழுது சுவாமி! எனக்கு ஆயிரங்கைகள் இருப்பதால் எனக்கு வெறுப்பே உண்டாகிறது. அவைகளுக்குத் தக்க யுத்தம் உண்டானால் அல்லவோ பயன்? இல்லாமற்போனால் வீண் சுமையான இந்தக் கைகளால் எனக்கு ஆகவேண்டுவது என்ன? ஆகையால் இக்கைகள் எனக்குப் பயன்படும்படியான ஏதாவது யுத்தம் வருமா? என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான், அட பாணா! மயில் அடையாளமுள்ள உன் வீரக் கொடியானது எப்போது முறிந்து விழுகிறதோ, அப்போது பேய்கள் முதலானவை மகிழும்படியான மாபெரும் யுத்தம் ஒன்று மூளும்! என்றார். அவரை பாணன் தொழுதுவிட்டு, தன் அரண்மனைக்குச் சென்றான். சிறிது காலம் கழித்து, ஒருநாள் அவனது கொடிமரம் முறிந்ததைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ந்திருந்தான்.

அந்தச் சமயத்தில் உஷையின் தோழியான சித்திரலேகை, தனது யோக வித்தைச் சிறப்பினால் துவாரகை சென்று, அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து, உஷையின் அந்தப்புரத்தில் சேர்த்தாள். அநிருத்தனான அந்தக் கனவு நாயகன் தன் கைக்குக் கிடைத்ததும் உஷை மிகவும் காதல் வேகங்கொண்டு அவனோடு தான் விரும்பிய போகங்களையெல்லாம் அனுபவித்து வந்தாள். இந்தச் செய்தியை அங்கிருந்த காவலாளர்கள் அறிந்து, பாணாசுரனிடம் சென்று, அரசே! கன்னிமாடத்திலே யாரோ ஓர் அரச குமாரன் எப்படியோ பிரவேசித்து, நம்முடைய கன்னியோடு சுகித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் பாணாசுரன் மிகவும் கோபமடைந்து கிங்கர சைன்னியத்தைக் கொண்டு அநிருத்தனை எதிர்த்தான். அநிருத்தனோ அங்கிருந்த வாசலின் உழல் தடியைக்கொண்டு, பாணாசுரனின் சேனா வீரர்களை நாசஞ் செய்தான். அவர்கள் அனைவரும் அநிருத்தனோடு போரிட்டு யாதவ வீரனால் ஜயிக்கப்பட்டான். அதனால் ஏங்கிய பாணனிடம் அவன் அமைச்சன், மாயையைக் கொண்டு போர் செய்யும்படி ஆலோசனை வழங்கினான். பாணாசுரனும் அப்படியே மாயையினால் போர் செய்து அநிருத்தனை நாகாஸ்திரத்தால் கட்டிப் போட்டான்.

இந்நிலைமையில், துவாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் யாவரும் அவன் எங்கே போயிருப்பான் என்று யோசித்தார்கள். பாரிஜாத மரம் காரணமாகப் பகைகொண்ட தேவர்களே அவனை அபகரித்துச் சென்றனரோ என்று எல்லோரும் எண்ணியிருந்தார்கள். அப்பொழுது நாரத முனிவர் துவாரகை சென்று, சித்திரலேகை என்பவள் தனது யோக சக்தியினால் அநிருத்தனை பாணாசுரனின் நகரத்துக்குக் கொண்டுபோய் உஷையிடம் சேர்த்தது முதல், அநிருத்தனை பாணாசுரன் நாகாஸ்திரத்தில் கட்டிப் போட்டிருப்பது வரையிலுள்ள செய்திகளையெல்லாம் யாதவர்களிடம் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்டதும் யாதவர்கள் தேவர்கள்மீது தாம் கொண்ட சந்தேகம் நீங்கினார்கள். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் தம் பெரிய திருவடியான கருடனை நினைத்தார். உடனே வந்து நின்ற கருடனின் தோள்மீது ஸ்ரீ கிருஷ்ணன் ஏறிக் கொண்டு, பலராமர் பிரத்தியும்னர் முதலானவர்களுடன் சோணிதபுரத்திற்குச் சென்றார். அங்கு காவல் புரிந்து வந்த சிவனுடைய பிரதம கணங்கள் சிவபக்தனான பாணாசுரனுக்காக ஸ்ரீகிருஷ்ணன் முதலானவர்களை எதிர்த்தன. அவர்களையெல்லாம் துவம்சம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவான், பாணபுரத்திற்கு வந்தார். அங்கு சிவனால் ஏவப்பட்ட ஒரு ஜ்வரம் மூன்று பாதங்களும் மூன்று தலைகளும் கொண்டதாய் பாணனுக்காக சாரங்கபாணியுடன் போர் செய்தது. அந்த ஜ்வரம் மூன்று சாம்பலையே ஆயுதமாகப் பிரயோகிக்கவே, அதுபட்டு பலராமர் கண்களை மூடிக்கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் அடைந்தார். அப்போது ஸ்ரீமந் நாராயணனும் ஒரு புதிய ஜ்வரத்தை உண்டாக்கினார். அதன் சக்தியால் சிவனின் சைவ ஜ்வரமானது, உடனே ஸ்வாமியின் தேகத்திலிருந்து ஓடிப்போய் நடுங்கியது. அப்பொழுது பிருமதேவன் பொறுத்தருளவேண்டும் என்று பிரார்த்திக்க கண்ணனும் அப்படியே ஆகட்டும் என்று கூறித் தம்முடைய வைஷ்ணவ ஜ்வரத்தைத் தன்னுள்ளே லயப்படுத்திக் கொண்டார். பிறகு சைவஜ்வரம் எம்பெருமானே, அடியேனுக்கு தேவரீரோடு நேர்ந்த யுத்தத்தை நினைக்கும் மனிதருக்கு ஜ்வரத்தினாலுண்டான துன்பம் ஏற்படாமலிருக்கக் கடவது! என்று சொல்லிவிட்டுப் போயிற்று.

பிறகு ஸ்ரீகிருஷ்ணர் அக்கினித் தேவர் ஐவரையும் நாசஞ் செய்து, அவர்களுடன் வந்த அசுர சேனைகளையும் விளையாட்டாகவே சூரணமாக்கினார். இவ்விதமாகத் தன் படைகள் நாசமாவதைக் கண்ட பாணாசுரன் தன் சேனைகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு போர் செய்ய வந்தான். அவனுக்குப் பக்கபலமாகச் சிவனும் சுப்பிரமணியர் முதலானவர்களும் வந்தார்கள். இவ்வாறு ஹரிஹரர்களுக்குள் மிகக் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அஸ்திர சஸ்திர ஜ்வாலையினால் உலகம் கலங்கியது. பிரளயமே வந்ததாகத் தேவர்கள் கருதினர். இவ்விதமாகப் பெரும்போர் நடக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணன் சிரும் பணாஸ்திரத்தைச் சிவன்மீது பிரயோகம் செய்யவே, ஒன்றுமே செய்யாமல் சிவன் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்ந்து போகும்படிச் செய்தார். அதனால் தைத்தியரும் பிரதம கணங்களும் நாசமடைந்தனர். சிவன் சக்தியற்றதால் தேர்த் தட்டிலேயே சோம்பலாக இருந்தார். இதனால் சிவ குமாரனான முருகனுக்கும் ஸ்ரீகிருஷ்ணனான முகுந்தனுக்கும் போர் நிகழ்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் ஓர் ஹுங்காரம் செய்தார். உடனே அது முருகனின் வேலாயுதம் அடித்துச் சென்றது. பக்ஷிராஜனான கருடன் முருகனின் வாகனமான மயிலையடித்து வீழ்த்தினார். அப்போது பிரத்தியும்னன் அம்புகளைப் பிரயோகித்ததால், முருகன் சமர்க்களத்திலிருந்து ஓடிப்போனான். பலராமர் வீசிய ஆயுதங்களால் பாணாசுரனின் படைகள் நிலைகுலைந்து ஓடின. பாணாசுரன், கிருஷ்ணனோடு கடும்போர் புரியலானான். கிருஷ்ணனது கவசத்தை பிளக்கத்தக்க கொடிய அம்புகளைப் பாணன் பிரயோகித்தான். அவன் செலுத்திய அம்புகளாலேயே தடுத்த ஸ்ரீகிருஷ்ணன், பாணனைச் சங்கரிக்க எண்ணி, அநேக ஆயிரம் சூரிய சக்திமிக்க தம் சுதரிசனச் சக்கரத்தை எடுத்துப் பிரயோகித்தார். அப்படி அவர் பிரயோகிக்கும்போது, கோடரீ என்ற அசுரவித்தியா ரூபமான தேவதை திகம்பரியாக ஸ்ரீகிருஷ்ணனின் எதிரில் வந்து நின்றாள். அவ்விதம் அவள் நிர்வாணமாக நின்றதால் கண்ணன் தம் கண்களை மூடிக்கொண்டு, பாணாசுரனின் கரங்களைச் சேதிக்கும்படித் திருவாழியைப் பிரயோகித்தார். அந்தச் சக்கரம், பாணாசுரனின் வலிமை மிகுந்த ஆயுதங்களைச் சேதப்படுத்திவிட்டு, வன்மையுள்ள அவனுடைய ஆயிரம் தோள்களையும் முறையே சிதைத்து விட்டுச் சுவாமியின் திருக்கைக்குத் திரும்பி வந்து சேர்ந்தது. ஸ்ரீகிருஷ்ணன் மீண்டும் தமது திருவாழியை பாணாசுரனைச் சங்கரிப்பதற்காகச் செலுத்த நினைப்பதையும் பாணாசுரன் கைகளற்று தாரை தாரையாக இரத்தம் ஒழுகத் துடித்து நிற்பதையுங் கண்ட பரமசிவனார் கண்ணனிடம் வந்து விண்ணப்பஞ் செய்யலானார்.

ஸ்ரீகிருஷ்ணா! நீயே பரமேசுவரனும் பரமாத்மாவும் ஆதியந்தமில்லாதவனும், புரு÷ஷாத்தமனுமான ஸ்ரீஹரி என்பதை அறிவேன். திரியக்குகளில் ஒரு திருமேனியை எடுத்து வருவதெல்லாம் உனக்கு ஓர் திருவிளையாடல். ஆகையால் நீ மனிதனல்ல. அண்டினவரை ஆதரிப்பவனே! இந்த பாணாசுரனுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அதை நீ பொய்யாக்காமல் இருக்க வேண்டுகிறேன். நான் பக்கபலமாக இருக்கிறேன் என்ற கர்வத்தால் அவன் இப்படிச் செய்தானேயன்றி உன் திறத்தின் விரோதத்தால் அபராதஞ் செய்தவனல்ல ஆகையால், அவன் குறையை என் பொருட்டு மன்னிக்க வேண்டுகிறேன் என்றார். இவ்விதம் சூலபாணியாக நின்ற உமாபதியை நோக்கி, ஸ்ரீகிருஷ்ணன், ஓ சங்கரனே! நீ வரங் கொடுத்திருப்பதால் இந்த அரக்கன் பிழைத்திருக்கட்டும் உன் வார்த்தைக்கு மதிப்பளித்து நானும் என் சக்கரத்தைப் பிரயோகிக்காமல் இப்போதே நிறுத்திவிடுகிறேன். நீ அபயங்கொடுத்தது, நான் அபயம் கொடுத்தது போலேயாம். நீ உன்னை என்னோடு இணைந்தவனாக நினை. நீ என் ஸ்வரூபம் தேவாசுர மனுஷ்யாதி ரூபமான பிரபஞ்சம் என் ஸ்வரூபம். என்னையன்றி ஒன்றுமில்லை. இந்த உண்மையை நீ அறிந்து கொள். உலகத்தார் மாயையால் இந்தப் பிரபஞ்சத்தை என் ஸ்வரூபம் அல்லாததாக நினைத்து உன்னை என் ஸ்வரூபமின்றி வேறுபட்டவனாக நினைக்கிறார்கள். நந்திக் கொடியோனே! உன் விஷயத்தில் நான் அனுக்கிரகமுடையவனானேன். நான் துவாரகை செல்கிறேன். நீயும் உன்னிடம் செல்வாயாக! என்று சொல்லிவிட்டு ஸ்ரீகிருஷ்ணன் தம் பேரன் அநிருத்தன் கட்டப்பட்டுக் கிடக்கும் இடத்திற்கு விரைந்தார். அங்கு அநிருத்தனைக் கட்டியிருந்த சர்ப்ப பாசங்கள் எல்லாம் கருடனின் காற்றுப் பட்டதுமே நசித்தன. பிறகு ருக்குமணி வல்லபன், அநிருத்தனையும் அவன் பத்தினி உஷையையும் பெரிய திருவடியின் தோள் மேலேற்றி, பிரத்தியும்னனுடன் துவாரகைக்கு எழுந்தருளினார். மைத்ரேயரே! இவ்விதமாக எம்பெருமான் பூபாரம் தீர்க்கத் துவாரகையில் தம் தேவியரோடும் புத்திர பவுத்திரர்களுடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

34. காசி தகனம்

பராசர மகரிஷியை நோக்கி, மைத்ரேய முனிவர், குருநாதா! ஸ்ரீவிஷ்ணு மனுஷ்ய அவதாரஞ்செய்து பெருமைக்குரிய செயல்களைச் செய்தருளினார். இந்திரனையும் ருத்திரனையும் வென்றார். இவ்விதமாகத் தேவர்களின் அக்கிரமச் செயல்களைத் தடுக்க கண்ணபிரான் செய்த இதர செயல்களையும் எனக்கு கூறவேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார். பிரம்ம ரிஷியே ! பரமாத்மா இந்த மனுஷ்யாவதாரத்தில் காசி நகரத்தை எரித்த கதையைச் சொல்கிறேன், கேளும்.

புண்டரக தேசாதிபதியைச் சில அஞ்ஞானிகள், நீ சாக்ஷõத் ஸ்ரீவாசுதேவ அவதாரம் என்று சொன்னதைக் கேட்டு, அந்த மூட அரசன் இவர்கள் சொல்வது மெய்தான் நான் வாசுதேவன் தான்! என்று தன்னைப் பிரஜைகள் அப்படியே வழங்கச் செய்தான். அவன் மேலும் ஸ்ரீவிஷ்ணுவின் சின்னங்களான சங்கு சக்கராதி ஆயுதங்களையும் வனமாலை முதலியவற்றையும் அணிந்து கொண்டு, கண்ணபிரானிடம் ஒரு மூடனை அனுப்பி, அவன்மூலம், அட மூடக் கிருஷ்ணா! நீ வாசுதேவன் அல்ல; நானே வாசுதேவன். ஆகையால் இன்று முதல் என் அடையாளங்களான சங்கு சக்கரங்களை விட்டுவிட்டு, உன் பெயரையும் விட்டுவிடு. இத்தனை நாள் நீ இவ்விதமாக இருந்த அபாரத்திற்காக நான் உன்னைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்யாமல் உன் உயிரை நீ காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் என்னைச் சரணடைவாயாக! என்று சொல்வித்தான். அதைக்கேட்ட கண்ணன் புன்சிரிப்பு பூத்து, தூதா! உன் அரசனான பவுண்டரகனிடம் சென்று அவனது அபிப்பிராயத்தை நான் அறிந்தேன் என்று சொல். அவன் செய்ய வேண்டுவது எதுவோ அதைச் செய்யலாம் என்றும், நான் அவன் சொன்னதைத் தடையின்றி செய்கிறேன் என்றும், எல்லாச் சின்னங்களையும் தரித்து, காசி நகரத்துக்கு வந்து இந்த சக்கிரத்தை அவனிடமே விட்டுவிடுகிறேன் என்றும், அவன் கட்டளைப்படி நாளையே அவன் சரணத்துக்கு வருகிறேன் என்றும், அவ்வாறு நான் வந்து எனக்கு இனிமேல் எப்படிப் பயமில்லாமல் இருக்குமோ அப்படியே செய்துகொள்கிறேன் என்றும் சந்தேகம் வேண்டாம் என்றும் சொல் என்று சிலேடையாகச் சொல்லியனுப்பினார். தூதன் சென்றான். பிறகு கண்ணபிரான் பெரிய திருவடியின் மேலேறி பவுண்டரக வாசுதேவனின் பட்டணத்திற்குச் சென்றார்.

இதையறிந்த காசி மன்னன் பெரும் படையோடு போருக்கு வந்தான். அவனது நகரை நெருங்குமுன்பே கருட த்வஜமுடைய பெரிய தேரில் இருந்த வண்ணம் கைகளில் சங்கம், சக்கரம், சாரங்கம், தண்டம் முதலிய ஆயுதங்களையும் பீதாம்பர வனமாலைகளையும், கிரீட குண்டலாதி ஆபரணங்களையும் அணிந்து, மார்பிலே ஸ்ரீ வச்சம் போன்றதொரு மறுவை ஏற்படுத்திக்கொண்டு யுத்த சன்னதமாக வரும் காசி மன்னனான பவுண்டரகனை ஸ்ரீ கிருஷ்ணன் கண்டு சிரித்தார். அவனோடு போர் புரிந்து, அவனையும் அவனது சேனைகளையும் நாசமாக்கினார். படைகளும் ஆயுதங்களும் பாழாகி நிற்கும் பவுண்டரகனை கண்ணன் நோக்கி, ஓ பவுண்டரக மன்னனே! நீ தூது மூலமாக உன் சின்னங்களை விட்டுவிடு என்று எனக்குக் கட்டளையிட்டது போலவே, சக்கரத்தையும் கதையையும் உன்னிடமே எறிந்தேன். அவைகளுக்கு நீ பாத்திரமாகலாம் இந்தக் கருடனையும் அனுப்பிவிடுகிறேன். இவனை உன் துவஜத்தில் ஏற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி சக்கரம் முதலியவற்றை ஏவினார். கண்ணனின் திருக்கையிலிருந்து புறப்பட்டுச் சக்கரம், அந்தப் பொய் வாசுதேவனை அறுத்தது. கதை முறிந்தது. காசி மன்னன் கீழே விழுந்தான். அவனுடைய கொடியும் பெரிய திருவடியினால் முறிக்கப்பட்டு, அவனுடனேயே விழுந்தது. அப்போது காசி ராஜனின் நண்பன், தன் சாரங்கத்தோடு போர் செய்தான். கண்ணன் தன் சாரங்கத்தை வளைத்து அம்பு மாரிப் பொழிந்து காசி ராஜனின் சிரசையறுத்து, அந்தத் தலையை காசி நகரின் நடுத்தெருவில் விழும்படி எறிந்தார்.

அரசனின் தலை விழுந்ததைக் கண்ட ஐனங்கள் கலங்கினர் அரசன் மகன், இது ஸ்ரீ வாசுதேவன் செய்த காரியம் என்று தெரிந்து, கோபமும் சோகமுமாக அந்த மகா ÷க்ஷத்திரத்தில் தன் புரோகிதனுடன் சேர்ந்து சிவனை யாகாதிகளாலே ஆராதித்தான். அவற்றால் மகிழ்ந்த சிவன் அவனை நோக்கி, இஷ்டமான வரத்தைக் கேள் என்று சொல்ல, அரச குமாரன் சுவாமி! என் தகப்பனைச் சங்கரித்த கிருஷ்ணனை வதை செய்ய ஒரு கிருத்தியை சிருஷ்டித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். உடனே தக்ஷிணாக்கினியிலிருந்து அவனுக்கே நாசஹேதுவான ஒரு கிருத்தியை உண்டாயிற்று. அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்ட பயங்கர முகத்துடன் அந்தக் கிருத்தியை, மிகவும் கோபமாகக் கிருஷ்ணா, கிருஷ்ணா! என்று கூவிக்கொண்டே துவாரகைக்கு ஓடியது. அதைக்கண்டு பயந்த ஜனங்கள் கண்ணனைச் சரண் புகுந்தனர். அப்போது கண்ணபிரான் தம் தேவியரோடு சூதாடிக் கொண்டிருந்தார். உடனே அவர் தம் கையில் இருந்த பாசிகையை உருட்டி, அக்கினிச் சுவாலைகளாகிய ஜடாபாரமுடைய சிரசுடன் மகா உக்கிரமாய் வரும் அந்தக் கிருத்தியையை அழித்துவிடு என்று திருவாழியாழ்வானுக்கு நியமித்தார். உடனே சக்கரத்தாழ்வான் அந்தக் கிருத்தியைப் பின் தொடர்ந்து ஓட்டினார். அது காசிக்கே சென்றது. மைத்ரேயரே, இவ்விதமாக அந்தக் கிருத்தியையானது திரும்ப ஓடி வந்ததைக் கண்ட காசிராஜ குமாரன், சிவனாரின் பிரதம கணப் படைகளுடன் சேர்ந்து, தன் சைன்யங்களுடன் சக்கரத்தாழ்வானை எதிர்த்தான். சக்கரம் எதிரிகளின் ஆயுதங்களையெல்லாம் அழித்து, அந்தக் கிருத்தியையும் அரசனையும் கொன்று யானை, குதிரை முதலியவை நிறைந்த காசி நகரத்தையே எரித்துவிட்டது. இப்படியாகக் காசி நகரத்தை தகனம் செய்து சாம்பலாக்கியும் சுதரிசனாழ்வாரின் சீற்றம் தணியாமல், மேலும் ஆசிருத விரோதி நிரசன ரூப கைங்கரியத்தில் விருப்பமுடையவராய், கண்ணனின் திருக்கையை வந்தடைந்தது.

35. பலராமர் சாம்பனை மீட்ட கதை

குருநாதரே! மகானுபாவரான பலராமன் பராக்கிரமங்களை இன்னும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். என்றார் மைத்ரேயர். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! அனந்தனாயும் தரிணிதரனாயும் உள்ள ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ பலராமர் செய்தருளிய காரியங்களைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரியிலே துரியோதனனின் குமாரிக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தச் சுயம்வரத்திலே நின்ற அந்தக் கன்னிகையை ஜாம்பவதியின் மகனும் கிருஷ்ண குமாரனுமான சாம்பன் என்பவன் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று விட்டான். உடனே மகா பராக்கிரமசாலிகளான கர்ணன், துரியோதனன், முதலியோர் சாம்பனுடன் போர் செய்தனர். முடிவில் சாம்பன் தோற்றுவிட்டான். உடனே, அந்த சாம்பனைத் துரியோதனனின் போர்வீரர்கள் பிடித்துக் கட்டி, சிறையிலடைத்துக் காவலில் வைத்தனர். இந்தச் செய்தி கிருஷ்ணனுக்கு எட்டியது. யாதவர்கள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ணருடன் சேர்ந்து துரியோதனனுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லத் தயாரானார்கள். அப்போது பலராமரான பலபத்திரர் அவர்களைத் தடுத்து, உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்! நான் போய்ச் சொன்னாலே, என் பேச்சைக் கவுரவர்கள் தட்டாமல், சாம்பனை விடுதலை செய்வார்கள். ஆகையால் நான் ஒருவனே போய் வருகிறேன் என்று சொல்லி; ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார். நேராகத் தலைநகரம் செல்லாமல் வழியிலிருந்த ஒரு தோட்டத்தில் தங்கியிருந்தார். அவர் வந்திருப்பதை யறிந்த துரியோதனாதியர், அந்தத் தோட்டத்துக்கு அர்க்கியம், பாத்தியம், மதுவர்க்கம் முதலியவற்றுடன் சென்று அவரைப் பூஜித்தார்கள்.

அவற்றைத் திருவுள்ளம் பற்றிய பலபத்திரர், கவுரவரைப் பார்த்து நமது உக்கிரசேன மன்னர் ஒரு கட்டளையிட்டிருக்கிறார் அதனால்தான் நான் இங்கு வந்தேன். அதாவது சாம்பனை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் பீஷ்மர் முதலானவர்களும், கர்ண துரி யோதனாதியரும் மனங் கலங்கி மிகவும் கோபங்கொண்டு பலராமரை நோக்கி ஓய்! உலக்கை வீரரே! ஆட்சிக்குத் தகாதது யது வமிசம் என்று தெரிந்தும் நீர் எப்படி இப்படிப் பேசினீர்? குருவமிசத்தாருக்கு எந்த யாதவன் கட்டளை இடுவான்? உக்கிரசேனன் கவுரவருக்குக் கட்டளையிடுகிறான் என்றால், எங்களுக்கு ராஜயோக்கியமான சத்திர சாமரங்கள் எதற்கு? அவையெல்லாம் எங்களுடைய சார்பினாலுண்டானவையல்லவா? அவைதானே இவ்வளவு பேச ஏதுவாயின? இனி நீ போனாலும் சரி; இருந்தாலும் சரி, துஷ்ட காரியஞ் செய்த சாம்பனை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம்! இதனால் வணங்குதற்குப் பாத்திரமான எங்களுக்கு யாதவர் வணக்கஞ் செய்யாமல் இருக்கட்டும்! வேலையாள் எஜமானனுக்கு கட்டளையிடுவதா? இது கர்வத்தின் செயல்! உங்களுக்கு அந்தக் கர்வம், உங்களை எங்களுடன் உட்கார வைத்துச் சாப்பிடுதல் முதலான காரியங்களால் வந்தது. ஆகையால் உங்கள் மேல் குற்றமில்லை. பலபத்திரா! உனக்கு நாங்கள் உபசாரஞ் செய்தது அன்பினாலேயன்றி மரியாதையால் அன்று! என்று கூறிவிட்டு துரியோதனாதி கவுரவர்கள் அனைவரும் சாம்பனை விடக்கூடாது என்ற ஒரே கட்டுப்பாடாகச் சரேலென்று அஸ்தினாபுரத்திற்குச் சென்று விட்டார்கள்.

இவ்விதமாகக் குருகுலத்தார் இழிவாகப் பேசியதாலும் மதுபான மதத்தாலும் கலங்கிக் கரையில்லாத கோபங்கொண்ட பலராமர் எழுந்து நின்று பக்கத்தில் இருந்த தரையை ஓரிடி இடித்தார். உடனே, அந்தத் தரை நான்கு, பக்கமும் அதிரும்படி பிளந்தது. அவர் கண் சிவக்க, புருவம் நெறிந்து நெற்றியிலேறக் கூவினார்: ஓஹோ! பலவீனராயும் துராத்மாக்களுமாகிய இந்தக் கவுரவருக்குத்தான் எவ்வளவு கர்வம்? யாதவர்களான எங்களுக்கு ஆட்சியுரிமை இயல்பாய் வராமல் காலபலத்தால் வந்தது என்றல்லவா அந்தக் கவுரவர் ஏளனம் சொல்கிறார்கள்? இதனால் அல்லவா உக்கிரசேனரின் கட்டளையை அவமதிக்கிறார்கள்? எப்படியிருந்தாலும் சுதர்மை என்ற சபா மண்டபத்தில் உட்கார்ந்திருப்பது யார்! நமது உக்கிரசேனர் தானே? ஆகையால் அவருக்குச் சமானமான அரசர்கள் யார் இருக்கிறார்கள்? பல மனிதர்கள் அனுபவித்துக் கழித்த ராஜ பதவியைத் தானே அக்கவுரவர்கள் பெரிதாய் மதிக்கிறார்கள்? அவர்களை ஒடுக்க எங்கள் மன்னன் உக்கிரசேனன் ஏன்? இப்போதே நான் இந்தக் கவுரவப் பூண்டேயில்லாமல் செய்கிறேன்! இப்போதே கர்ணன் துரியோதனன், துரோணன், பீஷ்மன், பாஹலிகன், பூரி, பூரிச்சிரவன், சோமதத்தன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரின் சதுரங்க சேனைகளையும் நாசஞ் செய்து, வீரனான சாம்பனை மீட்டு, அவன் விரும்பிய மனைவியோடு துவாரகை சென்று, உக்கிர சேனாதிகளைக் காண்பேன். இந்த வருத்தம் கூட நமக்கு ஏன்? இந்தக் கவுரவர் வாசஞ் செய்யும் இந்த நகரத்தையே கங்கையில் கவிழ்த்து விடுவோம்! என்று சினந்து குமுறினார். மதத்தால் கண் சிவக்கத் தமது உழுப்படைக் கீழே அமைந்திருக்கும் ஆயுதத்தை எடுத்து கவுரவர்களின் கோட்டை மதில் மேல் கட்டியிருக்கும் அவகங்கத்தில் மாட்டி இழுத்தார். அவர் அவ்வாறு இழுக்கவே, அந்தப் பட்டணம் முழுவதும் அசைந்து நடுங்கியது. அதைக்கண்டு துரியோதனன் முதலான கவுரவர்கள் அனைவரும் மனங்கலங்கிப் பலராமரிடம் ஓடி வந்து, ஸ்ரீபலராமரே! பலபராக்கிரமம் உடையவரே; பொறுத்தருள்க! கோபத்தையடக்கி எங்களுக்காக இரக்கம் காட்டும்! இதோ உங்கள் சாம்பனை, அவனது பத்தினியுடன் அழைத்து வந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டோம். உமது பிரபாவம் அறியாமல் அபசாரஞ் செய்த எங்களைப் பொறுத்தருள்க என்று முறையிட்டார்கள் பலராமரும் பொறுத்தேன்; பயம் வேண்டாம்! என்று அபயம் தந்து, கலப்பையை அலகங்கத்திலிருந்து வாங்கியருளினார்.

மைத்ரேயரே! அதனால்தான் அஸ்தினாபுரம் இன்றும் கொஞ்சம் சாய்ந்து காணப்படுகிறது. இது ஸ்ரீ பலராமரின் பிரபாவம்! பிறகு கவுரவர்கள் சாம்பனை அலங்கரித்து மருமகனுக்குரிய மரியாதைகளையெல்லாம் செய்து சீதனங்களோடு, தங்கள் பெண்ணையும் அவனோடு கூட்டி பலராமர் பின்னே அனுப்பி வைத்தார்கள்.

36. குரங்கனைக் கொன்ற கதை
 
மித்திரா புத்திரரே! மேலும் கேளும். பலராமரின் மற்றொரு மகிமையைச் சொல்கிறேன். நரகாசுரன் என்று ஒரு தேவசத்துரு இருந்தானல்லவா? அவனுக்குத் துவிதன் என்று ஒரு நண்பன் இருந்தான். அவன் ஒரு வானர சிரேஷ்டன். பல பராக்கிரமங்களில் சிறந்தவன். அவன் இந்திரன் ஏவியதால் தனது சிநேகிதனைக் கிருஷ்ணன் கொன்றான் என்று கருதி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யக்கடவேன் என்று நினைத்தான். அஞ்ஞான மோகத்தால் யக்ஞங்களை அழிப்பதும் பிராணிகளையழித்து, காடுகள், நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றைத் தீக்கிரையாக்குவதும், மலைகளைத் தூக்கிப்போட்டு ஊர்களை நொறுக்குவதுமாக அந்த துஷ்டன் துவிதன் திரிந்துகொண்டிருந்தான். அவன் சாமரூபியாகையால் பெரியதொரு ரூபமெடுத்து பயிர்களில் விழுந்து புரண்டு, பயிர்களைப் பாழாக்குவதும் அவன் வழக்கம்! இதனால் உலகம் வேதாத்தியயனம், யாகம் முதலிய வைதீகச் சடங்குகள் இல்லாமல் மிகவும் துயரமுற்று இருந்தது. அக்காலத்தில் ஒருநாள் பலராமர் தம் மனைவியான ரேவதியோடும் மற்றும் சில தேவிமாரோடும் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் சென்று மத்திய பானஞ் செய்து, மங்கையர் மத்தியில் ஆட்டமும் பாட்டுமாய் உல்லாசமாக இருந்தார்.

அப்போது வானர வீரனான துவிதன் வந்தான். அவன் பலராமரது கலப்பை உலக்கைகளை எடுத்துக்கொண்டு, அவர் எதிரில் நின்று பற்களை இளிப்பதும், புருவம் நெறிப்பதும் உர்உர் என்று பரிகாசஞ் செய்வதுமாக இருந்தான். மேலும் அவன் பலராமரின் தேவிமாருக்கு எதிரே நின்று நகைப்பதும் குதிப்பதும், மதுபானப் பாத்திரங்களைக் கவிழ்ப்பதும் எறிவதுமாகப் பல வானரச் சேஷ்டைகளைச் செய்துகொண்டிருந்தான். பலராமர், அவனை ஓட்டினார். வெருட்டினார். அவன் அதை மதியாமல் மறுபடியும் கிறீச் கிறீச் சென்று கூவிக்கொண்டு துஷ்டச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். அதனால் பலராமர் புன்னகை செய்தபடியே உலக்கையை எடுத்து, அந்த வானரத்தின் மேல் எறிந்தார். உடனே அவன் ஒரு மலைக்கல்லை எடுத்து அவர்மேல் எறிந்தான். அவர் அந்தப் பெரிய கல்லைத் தமது உலக்கையால் பல துண்டுகளாக்கினார். அதனால் கோபங்கொண்ட அந்த வானர முரடன் உலக்கையைத் தாண்டி எழும்பி, தன் கையால் அவர் மார்பில் அறைந்தான். உடனே பலராமர் மிகவும் கோபங்கொண்டு தம் முஷ்டியினால் குரங்கின் தலையில் இடித்தார். அந்த இடியால், துவிதன் உதிரங்கக்கிக் கொண்டு உயிர்துறந்து வீழ்ந்தான். மைத்ரேயரே! இன்னும் ஓர் ஆச்சரியத்தைக் கேளும். அந்தக் குரங்கன் வீழ்ந்த போது அவனுடைய உடல் பூமியில் பட்டவுடன் மலையின் கொடு முடியொன்று, இந்திரனது வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்டது போல், பல பிளவுகளாய்ப் பிளந்து வீழ்ந்தது. தேவர்கள் பூ மழை பொழிந்தனர். பிறகு தேவர்கள் பல ராமரிடம் வந்து ஓ மகாவீரனே! நீர் ஒரு நற்காரியத்தைச் செய்தருளினீர்! அந்தத்தீய குரங்கன், அசுரர் சார்பில் உபகாரமும், தேவர்களுக்கு அபகாரமும் செய்து வந்ததால் உலகம் துன்புற்றது. இப்போது அவன் உம்மால் நாசமடைந்தான் என்று துதித்து, தங்கள் தேவலோகத்திற்கு மீண்டனர். இவ்விதமாக, ஞானவானாகவும் பூமியைத் தாங்கக்கூடிய ஆதிசேஷனுடைய திருவவதாரமாகவும் விளங்கும் ஸ்ரீ பலபத்திரரான பலராமரின் திவ்வியச் சரித்திரங்கள் பலவுள்ளன.

37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

மைத்திரேயரே! இவ்விதமாகக் கண்ணபிரான், பலராமருடன், உலக ரக்ஷணார்த்தமாய், அசுரர்களையும் துஷ்ட அரசர்களையும் வதைத்தருளினான். மேலும் துஷ்ட துரியோதனாதிகளால் சூதாட்டத்தில் மோசஞ் செய்யப்பட்டு, இராஜ்யம் முதலானவற்றைப் பறிகொடுத்தப் பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணனே தூதனாகி, கவுரவர்களின் சபைக்கு எழுந்தருளினார். அங்கு சமாதானத் தூது நிறைவேறாமல் சண்டை மூளவே, அந்த மகாபாரதப் போரில், அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனே சாரதியாக இருந்து, அநேக அரசர்களையும் அவர்களது அநேக அ÷க்ஷõகினி சேனைகளையும் அழித்து, பூமி பாரத்தை இறக்கினார். இவ்விதமாகச் சர்வேஸ்வரன் யாதவக் குலத்தில் அவதரித்து, துஷ்ட நிக்ரக, சிஷ்ட பரிபாலனங்களிலே உலகத்தை ரட்சித்து அருளினார். முனிவர் சாபம் என்ற வியாஜத்தால் தாம் அவதாரம் செய்த குலத்தையும் அழித்தார். பிறகு அவர் துவாரகையையும் மனுஷ்ய பாவனையையும் விட்டுத் தம் அம்சமான சங்கர்ஷணாதிகளோடு, தமது ஸ்தானமான பரமபதத்துக்குச் சென்றார். இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் குறுக்கிட்டு அவரை நோக்கி, மாமுனிவரே! அந்த ஸ்ரீபகவான், முனிவர் சாப வியாஜத்தால் தமது குலத்தையே எப்படி அழித்தார்? எப்படித் தம்முடைய மனுஷ்யத் திருமேனியை விட்டுச் சென்றார். இவற்றை எனக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். பராசரர் கூறலானார்.

மைத்ரேயரே! ஒரு சமயம் யாதவ குமாரர்கள் பிண்டாரசம் என்னும் தீர்த்தத்தில் விசுவாமித்திரர் கண்வர் நாரதர் என்னும் மாமுனிவர்களைக் கண்டார்கள். தமது யவுவனாதிகளால் யாதவ குமாரர்கள் கர்வங் கொண்டிருந்ததாலும், பின்னால் அவர்கள் விதி நடக்க வேண்டியிருந்ததாலும், புத்தி கெட்டு, ஜாம்பவதியின் பிள்ளையான சாம்பனைப் பெண்போல அலங்காரம் செய்து, அம்மாமுனிவர்களிடம் அழைத்துச் சென்று, சுவாமிகளே! இந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா என்று சொல்லுங்கள் என்று பரிகாசமாகக் கேட்டார்கள். முக்காலமும் உணர்ந்த மாமுனிவர்கள், அவர்களின் வேடிக்கையைக் கண்டு கோபங்கொண்டு, இவள் ஆண் பிள்ளையும் பெறமாட்டாள், பெண் பிள்ளையையும் பெறமாட்டாள். உங்கள் யாதவ குலத்தையே நாசஞ் செய்யும் ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவாள் என்று கூறினார்கள். இந்தச் செய்தியை யாதவர்கள் உக்கிரசேனரிடம் அறிவித்தார்கள். உடனே, சாம்பனின் வயிற்றிலிருந்து ஓர் இரும்பு உலக்கை உண்டாயிற்று. அதைக் கண்ட உக்கிரசேன மன்னன், அதைப் பொடியாக்கி கடலிற் கொட்டிவிடும்படிக் கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால் அந்த உலக்கைப் பொடிகளோ, கடற்கரையில் கோரைகளாக முளைத்தன. அராவிய இரும்புலக்கையின் மிச்சத் துண்டு ஒன்று அம்பின் முள்ளைப்போல இருந்தது. அதையும் யாதவர்கள் கடலில் எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை, மீனவர் பிடித்து அறுத்தனர். அதன்வயிற்றில் இருந்த அந்த இரும்பு முள்ளை ஒரு வேடன் எடுத்துத் தன் அம்பில் வைத்துக்கொண்டான். இவற்றை யெல்லாம் ஸ்ரீகிருஷ்ணபகவான் அறிந்திருந்தும், தமது சங்கற்பச் சித்தமான அதை மாற்றத் திருவுள்ளம் கொள்ளவில்லை. இப்படிப்பட்டச் சமயத்தில் தேவர்களால் அனுப்பப்பட்ட வாயுதேவன் ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டு, தண்டம் சமர்ப்பித்து, விண்ணப்பஞ் செய்யலானான்.

பகவானே! அடியேன் தேவர்களால் தூதுவனாக அனுப்பப் பட்டேன். வசுக்கள், மருத்துக்கள், அசுவிகள், ஆதித்தியர், ருத்திரர், சாத்தியர் முதலானவர்களுடன் தேவேந்திரன் தங்கள் சன்னதியில் விண்ணப்பஞ் செய்வதைத் திருச்செவிச் சாய்த்து கேட்க வேண்டும். அடியேங்களுடைய பிரார்த்தனையால், பூமிபாரம் தீர்ப்பதற்காகத் தேவரீர் பூமியில் அவதரித்து, தேவர்களுடன் நூறு திருநட்சத்திரங்களுக்குமேல் இங்கு எழுந்தருளியிருந்தீர்கள். மிகக் கொடிய அசுரர்களையெல்லாம் சங்கரித்து, பூபாரம் தீர்த்தீர். இனி தேவரீரை அடியேங்கள் சுவர்க்கத்திலே தினமும் சேவித்திருக்கக் கிருபை செய்யவேண்டும். தமது விருப்பம் போலவே செய்யலாம் ! என்றான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணபகவான், தேவ தூதனே! நீ சொன்னது யாவும் எனக்குத் தெரியும். என் குலத்தினரானயாதவர்களையும் நாசஞ்செய்ய ஆரம்பித்து விட்டேன். இந்த யாதவரும் மடியாமற் போனால் பூபாரம் நீங்காது. ஆகையால் ஏழு இரவுகளுக்குள் இதை முடித்துவிடுவேன். இந்தத் துவாரகைக்கான இடத்தை முன்பு சமுத்திர ராஜனிடம் அல்லவா பெற்றேன்? மீண்டும் இதைச் சமுத்திர ராஜனிடமே கொடுத்துவிட்டு யாதவர்களையும் முடித்துவிட்டு, உங்களிடம் வருவேன். இந்த மனித தேகத்தைவிட்டு, சங்கர்ஷணனோடுகூட யான் வந்துவிடுவேன் என்று இந்திரனிடம் சொல்! இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்த ஜராச்சந்தன் முதலாக யார் யார் மடிந்தார்களோ, அவர்களால் ஒரு யாதவச் சிசுக்கூட மடியவில்லை. அதுவே இந்த மண்ணுக்குப் பெரும் பாரமாகிவிட்டது. ஆகவே இவர்களையெல்லாம் மடித்துப் பிறகு உங்கள் உலகைக் காக்க நான் வருவேன் என்று இந்திராதியருக்கு அறிவிப்பாயாக! என்றார் அதனால் அவரை வாயுதேவன் வணங்கிவிட்டு, தேவர் செல்லும் வழியில் தேவருலகம் சென்றடைந்தான்.

பிறகு கண்ணபிரான் இரவும் பகலும் நாசக் குறிகளாகிய திவியம், பவுமம் அந்தரிக்ஷம் என்ற மூவகை உத்பாதங்கள் உண்டாவதைக் கண்டார். அவர் யாதவர்களை நோக்கி, பார்த்தீர்களா? இங்கே மிகவும் கொடிய உற்பாதங்கள் உண்டாகின்றன. இவற்றின் தோஷம் சாந்தமாகும் பொருட்டு, சீக்கிரமாகப் பிரபாச தீர்த்தத்துக்குப் போவோம் என்றார். அப்போது, யாதவர்களில் சிறந்த பரம பாகவதரான உத்கலர் சுவாமிக்குத் தண்டம் சமர்ப்பித்து, எம்பெருமானே! இந்த யாதவ குலத்தை முடிக்க நீங்கள் திருவுள்ளம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அடியேன் செய்ய வேண்டுவது என்னவோ, அதனை நியமிக்க வேண்டுகிறேன். இந்த உற்பாதக் குறிகள், யாதவ குலம் நாசமடையப் போவதையே குறிக்கின்றன என்று நினைக்கிறேன் என்றார். அவரை கண்ணபிரான் புன்சிரிப்புத்தவழ உற்று நோக்கி, உத்கலரே ! நீர் தேவாதமார்க்கத்தில் செல்லத் தக்கச் சக்தியை நாம் பிரசாதிக்கிறோம், அதனால் நீங்கள் கந்தமாதனப் பருவதத்திலுள்ள பதரிகாசிரமத்தை அடைவீராக. இந்தப் பூவுலகில் நரநாராயண ஸ்தானமான அதுதான் மிகவும் பரிசுத்த ÷க்ஷத்திரமாகும். அங்கே நீர் நம்மீது சித்தம் நிலைநாட்டிச் சிந்தித்து, நமது கிருபையினால் மோக்ஷப் பிராப்தியை அடைவீர். நாமோ நமது வமிசத்தை உபசங்கரித்து உத்தம ஸ்தானம் செல்ல நிச்சயித்திருக்கிறோம். நாம் நீங்கியவுடன் துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடித்துவிடும். ஆனால் நம்மிடமுள்ள பயத்தால், நம்முடையத் திருமாளிகை மட்டும் மூழ்த்தப்படமாட்டாது. நாமோ, அடியாருக்கு இதஞ்செய்ய வேண்டி, அந்த மாளிகையில் சான்னித்தியமாக இருப்போம்! என்று சொல்லி, அவருக்குத் தத்துவ ஞானத்தையும் ஆராதனாதி முறைகளையும் உபதேசித்தார். அவற்றைக் கேட்டுக்கொண்டு உத்கலர் பதரிகாசிரமம் சென்றார். யாதவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணருடன் தமது தேர்களில் ஏறிக்கொண்டு, பிரபாசத் தீர்த்தத்துக்குப் போனார்கள். அங்கு போனதும் யாதவர்கள் விசேஷமாக மதுபானஞ்செய்தார்கள். அதனால் வெளியேறியது. அந்த வெறியால் அவர்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் எதிர்த்தனர் கலகம் விளைந்தது. இவ்வாறு பராசர மகரிஷி சொல்லி வரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு, முனிவரே! தத்தமக்குள்ள அன்னபானங்களை அருந்திய அவர்களுக்குள்ளே கலகம் எப்படி மூண்டது? என்று கேட்டார். பராசரர் கூறலானார்.

கேளும் சொல்கிறேன். என்னுடைய அன்னம் நன்றாக இருக்கிறது என்று ஒருவன் சொல்ல, அதை மறுத்து மற்றொருவன் சொல்ல இப்படியே யாவரும் சொல்ல, ஒருவரையொருவர் சாதிக்க வேண்டும் என்ற நினைப்புத் தோன்றிக் கலகமும் உண்டாயிற்று. அந்தக் கலகம் ஆயுதப் போராகவும் மாறியது. தெய்வச் சங்கற்பமும் சூழ்ந்தது. எனவே ஒருவர்மீது மற்றொருவர் ஆயுதப் பிரயோகம் செய்யலாயினர். அந்தப் பெருஞ் சண்டையில் ஆயுதங்கள் அனைத்தும் அழிந்ததால், அருகாமையில் கடற்கரையில் முளைத்திருந்த கோரைகளைப் பிடுங்கிக்கொண்டனர். அவை வஜ்ராயுதத்தைப் போல இருந்ததால், அவற்றைக்கொண்டு ஒருவரையொருவர் அடித்தனர். இவ்வாறு அடித்துக் கொண்டிருந்த பிரத்தியும்னன் சாம்பன் முதலியவர்களையும் கிருதவர்மா, சாத்தியகி அநிருத்தன் முதலியவர்களையும் கண்ணன் தடுக்கப்போக அவர்கள் கண்ணனையும் தங்கள் தங்கள் எதிரிகளுக்குச் சகாயம் செய்பவராக எண்ணிக் கொண்டு அவரையும் அடிக்க வந்தார்கள். எனவே, கண்ணனும் ஒருபிடிக் கோரையைப் பிடுங்கிக்கொண்டு, இரும்பு உலக்கை போன்ற அதனாலேயே யாதவரையெல்லாம் சங்கரித்தருளினார். மற்றுமுள்ளோரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மடிந்தார்கள். பிறகு வெற்றி பொருந்திய கண்ணனது திருத்தேரானது, சாரதியான தாருகன் என்பவன் பார்த்துக் கொண்டேயிருக்கத் தானாகவேச் சமுத்திரத்தின் நடுவே குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. அதுபோலவே, சங்கு, சக்கரம், கட்கம், கதை, சார்ங்கம் என்ற பஞ்சாயுதங்களும் கண்ணனை வலம் வந்துச் சூர்யமார்க்கமாகப் போய்விட்டன. அப்போது அந்த இடத்தில் கண்ணனும் தாருகனும் தவிர, யாதவர்களில் ஒருவன்கூட அடிபட்டு விழாமல் இருக்கவில்லை. இவ்விதம் யாதவர்கள் அனைவரும் மடிந்தவுடன், சுவாமி ஸ்ரீகிருஷ்ணனும் தாருகனும் அங்கே சிறிது உலாவிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு மரத்தடியில் பலராமர் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது அவரதுத் திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஜொலித்துக் கொண்டுப் புறப்படுவதைக் கண்டார்கள். அந்த மகா நாகம் சமுத்திரத்தில் எழுந்தருளி, அங்கே சித்தர்களும் நாகர்களும் துதிக்க, சமுத்திரராஜன் அர்க்கியம் எடுத்து வரவேற்று ஆராதிக்க சமுத்திர நீரினுள்ளே புகுந்துவிட்டது.

அப்போது ஸ்ரீகிருஷ்ணபகவான் தமது சாரதியான தாருகனைப் பார்த்து தாருகா! நீ நமது தலைநகரம் சென்று, யாதவர்கள் அனைவரும் மாண்டத்தையும் பலதேவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளியதையும் வசுதேவர் உக்கிரசேனர் முதலியவர்களிடத்தில் சொல்வாயாக, நானும் யோக நிஷ்டையில் இந்த உடலைவிடப் போகிறேன். துவாரகையைச் சமுத்திரம் மூழ்கடிக்கப் போகிறது. இதை ஆகுகனுக்கும் நகரத்திலுள்ளவருக்கும் அறிவித்து விடவேண்டும். நீங்கள் அனைவரும் அர்ச்சுனனுடைய வரவை எதிர்பார்த்து அவன் வந்ததும் அவனுடன் போகவேண்டும் யாரும் துவாரகையில் இருக்கவேண்டாம் என்று சொல்! துவாரகையில் இப்படிச் சொல்லி விட்டு நீ அஸ்தினாபுரம் செல் அங்கே அர்ச்சுனனைக் கண்டு நான் சொன்னதாக அவனை சீக்கிரம் துவாரகைக்கு வந்து எனது குடும்பத்தினரை கூடுமானவரை காப்பாற்ற வேண்டும் என்று, சொல்லி அர்ச்சுனனுடன் நீயும்கூட இருந்து துவாரகையில் இருப்பவர்களையெல்லாம் அப்புறம் அலட்சியம் செய்து போவதை நாம் சகித்திருப்பதா? பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்திரதன் முதலியவர்களைச் சங்கரித்திருக்கிறோம் என்ற கர்வத்தோடு இந்த அர்ச்சுனன் இருக்கிறான். இவன் இந்தக் கிராமத்திலிருக்கும் நம்முடைய பலத்தை அறியமாட்டான். தடியுங் கையுமாக இருப்பதைக் கண்டு நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவன் நினைத்துவிட்டான் போலும்! என்று திருடர்கள் யோசித்து தடிகளையும் ஓட்டாஞ் சில்லுகளையும் ஆயுதமாகக் கொண்டு, எல்லோருமாகச் சேர்ந்து அர்ச்சுனன் கொண்டு வந்த பெண்களைப் பிடிக்க வந்தார்கள். அதைக் கண்ட அர்ச்சுனன் அவர்களை அலட்சியமாய் நோக்கி, ஓ துஷ்டர்களே! நீங்கள் பிழைத்திருக்க நினைத்தால் உடனே ஓடிப்போய்விடுங்கள் என்று சொன்னான். ஆனால் அவர்கள் அவனை லக்ஷ்யம் செய்யாமல் அங்கிருந்த பொருள்களையும் பெண்களையும் கவர்ந்து சென்றார்கள். பிறகு, அர்ச்சுனன் அந்தப் போரிலே திவ்வியமாயும் அழியாததாயுமுள்ள காண்டீபம் என்ற தனது வில்லை வளைத்து நாண்பூட்ட முயன்றான். அந்த முயற்சி பயனளிக்கவில்லை. அம்பைப் பூட்டுவதற்கே அவனுக்குத் திறனில்லை வருந்திப் பூட்டியும் அந்த நாண் திடமாயிராமல் தளர்ந்து போயிற்று. அது மட்டுமல்ல. அர்ஜுனன் தன் அஸ்திரங்களைப் பிரயோகிக்க முயன்றபோது அவற்றில் ஒன்றும் அவன் நினைப்புக்கு வரவில்லை இதனால் அர்ச்சுனன் மிகவும் கோபங்கொண்டு, பகைவர்மேல் அம்புகளை எய்தான். அந்த அம்புகளோ பகைவர் உடலில் பட்டு, மேல் தோலைப் பெயர்த்தனவேயன்றி மற்றொன்றும் செய்யவில்லை இப்படிப்பட்ட சமயத்தில் முன்பு அக்னி பகவான் கொடுத்திருந்த அக்ஷய தூணிரங்களில் அம்புகளும் ஒழிந்து போயின. இவ்விதமாக சகலவித இடையூறுகளும் சம்பவித்தன. அப்போது அர்ச்சுனன், முன்பு என் அம்புகளால் அநேக அரக்கர்களைச் சங்கரித்தேனே! அது ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய பலமேயல்லாது என்று பலமன்று! என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திருடர்களெல்லாம் கண்ணபிரான் பரிக்கிரகித்திருந்த அநேகம் மங்கையரை இழுத்துக்கொண்டு சென்றார்கள். மற்றும் அநேக மங்கையர்கள் அர்ச்சுனனுக்கு திறமையில்லை என்பதை அறிந்து கொண்டு, தாங்களாகவே அங்கங்கே ஓடிப்போனார்கள்.

கேட்டீரோ, மைத்ரேயரே! பிறகு அர்ச்சுனன் அம்புகளும் இல்லாமற் போகவே, வேறு ஆயுதம் ஒன்றும் இல்லாததால் அந்த வில்லையே தடிபோலக் கொண்டு அதன் நுனியாலேயே திருடர்களை அடிக்க முயன்றான். ஆனால் அடிகள் லேசாக விழுந்ததால் பகைவர்கள் சிரித்துக் கேலி செய்தார்கள். எப்படி முயன்றும், தன்னால் காப்பாற்ற முடியாமற் போனதால், தன் கண் எதிரிலேயே உத்தமரான அந்த யாதவ மங்கையரைத் திருடர்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட பார்த்தன், அளவற்ற துக்கங்கொண்டு, ஓஹோ! இதென்ன கஷ்டம்! ஸ்ரீகிருஷ்ண பகவான் என் சக்தியையும் கொண்டு போய் விட்டாரே! இனி நான் என் செய்வேன்? மகத்தான வில்லும் ஆயுதங்களும் ரதமும் குதிரைகளும் வேதந் தெரியாதவனுக்குக் கொடுத்த தானத்தைப் போல வீணாயினவே! தெய்வமே வலியது! அந்த மகாத்மா இல்லாமையினாலே என்னுடைய எல்லாவகை ஆற்றலும் வீணானது மட்டுமன்றி சாமார்த்தியமற்றவர்கள்கூட என்னை வெற்றி பெறலாயிற்றே? முன்பு வெற்றிகள் பல கண்ட என் கைகளே இப்போதும் இருக்கின்றன! இடமும் அதுவே. நானும் அந்த அர்ச்சுனனே! புண்ணிய சொரூபியான கண்ணன் இல்லாமையினாலே எல்லாமே அசாரமாய்ப் போய் விட்டன. நான் அர்ச்சுனனாக இருந்ததும் பீமன் பீமனாக இருந்ததும் அந்த மகானுபாவனுடைய மகிமை! அவனில்லாததால்தானே மகாரத சிரேஷ்டனான நான் இவர்களிடம் தோற்றேன் என்று சொல்லி அழுதுகொண்டே இந்திரப்பிரஸ்தம் சென்று, அங்கே வஜ்ரனை யாதவரின் அரசனாக நியமித்தான். பிறகு அர்ச்சுனன் அங்கிருந்து அஸ்தினாபுரம் போகும் போது, வழியில் ஒரு காட்டில் ஸ்ரீவேத வியாச மகா முனிவரைக் கண்டான். அம்முனிவரின் திருவடிகளை அவன்தொழுது நின்றான். அப்போது வியாச முனிவர் அர்ச்சுனனை நோக்கிக் கூறலானார்.

அர்ச்சுனா நீ ஏன் இப்போது ஒளியற்றவனாக இருக்கிறாய்? ஆடு கழுதை முதலியவைகளின் கால் தூசிகளைப் பின்தொடர்ந்தனையோ? பிரம்மஹத்தி செய்தாயோ? உறுதியான ஓராசை கெடத் துன்பம் உற்றனையோ? ஓ பார்த்தனே! சந்தானத்துக்காக கல்யாணஞ் செய்து கொள்ள முயன்றவன் முதலானவர்கள் என்னை யாசிக்க நீ அவர்களை அலக்ஷ்யம் செய்தாயோ? புணரக்கூடாத மங்கையரோடு புணர்ந்தனையோ? நல்ல அன்னத்தைப் பிராமணனுக்குக் கொடாமல் நீ ஒருவனே புசித்து விட்டாயோ? வறுமையாளரின் பொருள்களை அபகரித்தாயோ? முறத்தின் காற்றுப்பட நின்றாயோ? கொள்ளிக் கண்ணரால் பார்க்கப்பட்டாயோ? நகம்பட்ட தண்ணீரை ஸ்பரிசித்தனையோ தண்ணீர் குடம் கொண்டு போகும்போது, அதிலிருந்த தண்ணீர் தெளித்து உன்மீது விழப்பெற்றனையோ? போரில் தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயோ? நீ சாயை இழக்கக் காரணம் என்ன? என்று வியாசர் கேட்டார்.

அர்ச்சுனன் பெருமூச்செறிந்து, சுவாமி அடியேனது கதியைக் கேட்டருள வேண்டும். அடியேனுக்குப் பலம், தேஜஸ், வீரியம், பராக்கிரமம் சம்பத்து, காந்தி இவையெல்லாம் யாராக இருந்தாரோ அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் அடியேங்களை விட்டு மறைந்துபோய் விட்டார்! எவர் ஒப்பற்ற மகானாக இருந்தும் சாதாரணரைப் போல நம்மைக் கண்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தாரோ, அந்தப் பகவான் எம்மைத் துறந்ததாலே நாங்கள் எல்லாம் வைக்கோலால் செய்யப்பட்ட மனிதப் பதுமைகளானோம், அம்புகளுக்கும் ஆயுதங்களுக்கும் காண்டீவம் என்ற தனுசுக்கும் அடியேனுக்கும் மேன்மை எவரால் உண்டாகியிருந்தது. அந்தப் புரு÷ஷாத்தமன் மறைந்துவிட்டான். எவருடைய கடாட்சத்தினாலே வெற்றியும் செல்வமும் மேன்மையும் எங்களை விடாமல் இருந்தனவோ, அந்த ஸ்ரீ கோவிந்த பகவான் எங்களைக் கைவிட்டுப் போய்விட்டார். பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் முதலியவர்கள் எவருடைய பிரபாவத்தால் எரிந்து போனார்களோ, அந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்தப் பூவுலகத்தைவிட்டு மறைந்துவிட்டார். அடியேன் தனியனாய் ஒளியிழந்து காணப்படுகிறேன். அந்தக் கண்ணபிரான் இல்லாததாலே இந்தப் பூமி முழுவதும் யவ்வனம், செல்வம், ஒளி இவற்றை இழந்தது போலக் காணப்படுகிறது. மகிமை பொருந்திய காண்டீவம் எவனுடைய மகிமையினாலோ மூவுலகிலும் புகழ்பெற்று இருந்ததோ, அவனில்லாததால், அது இழிவான திருடர்களின் தடிக்குத் தோற்றுவிட்டது. என் காவலில் இருந்த அநேக ஸ்திரீகளைத் திருடர்கள் தடியுங்கையுமாக வந்து என் முயற்சியைத் தடுத்து அபகரித்துக்கொண்டு போய் விட்டார்கள். துவாரகையிலிருந்து நான் அழைத்துக் கொண்டு வந்த அந்த ஸ்ரீகிருஷ்ணருடைய தேவிமார்களைத் திருடர்கள் இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்படிப்பட்ட அடியேன் தேஜசை இழந்திருப்பது ஓர் விந்தையோ? நான் உயிரோடு இருக்கிறேனே. அதுவல்லவோ ஆச்சரியம்! பெரியோரே! நீசர்களால் நான் அவமானப்பட்ட அந்தக் களங்கத்தை ஏற்று, தங்கள் முன்பு வெட்கமின்றி நிற்கிறேனல்லவா? என்று இவ்விதம் பரிதாபப்படும்படியாகக் கூறினான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூறலானார்:

அர்ச்சுனா! நீ வெட்கப்படாதே! விசனமும் பட வேண்டாம் சகல பூதங்களுக்கும் இப்படிப்பட்ட காலகதி உண்டாகும். காலமே, பூதங்களின் உற்பத்திக்கும் நாசத்துக்கும் ஏதுவாகும். இதுபோலவே உலகம் எல்லாம் காலத்தினால் நிகழ்வதென்று நினைத்து மனக் கலக்கமின்றி இருப்பாயாக. நதிகள், கடல்கள், மலைகள், பூமி, தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், நகரும் பிராணிகள், மரங்கள் முதலிய யாவுமே காலத்தாலேயே படைக்கப்பட்டு, மீண்டும் அதே காலத்தாலேயே நாசப்படுகின்றன. இவ்விதமாக யாவும் காலத்தின் ஆதீனமாக இருப்பதையறிந்து சமாதானமடைவாயாக. கண்ணனே அந்தக் காலஸ்வரூபி. தனஞ்சயா! அந்தக் கண்ணபிரானுடைய மகிமை நீ என்னென்ன சொன்னாயோ, அத்தகையதேயாகும்! அதில் சந்தேகமில்லை. பூமிதேவியின் பிரார்த்தனைக்கேற்ப காலரூபியான அந்த ஜனார்த்தனன், அவளது பூ பாரத்தை இறக்கப் பூமியிலே அவதரித்தார். சகல அரசர்களும் சங்கரிக்கப்பட்டனர். யாதவ குலமும் அழிந்தது. அவர் அவதரித்த காரியம் பூமியில் எதுவுமில்லை. ஆகையால் அவர் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார். அந்த தேவாதிதேவன் படைப்புக் காலத்தில் படைப்பையும் ஸ்திதி காலத்தில் ஸ்திதியையும் எப்படிச் செய்தானோ, அதுபோல சங்கார காலத்திலும் சங்காரத்தையும் செய்யும் வல்லவன் அர்ச்சுனா! நீ அவமானப்பட்டதாக வருந்துகின்றாயே! பீஷ்மர், துரோணர், கர்ணன், முதலிய மகாசூரர்கள் எல்லாம் உன் ஒருவனாலேயே சங்கரிக்கப்பட்டார்களே, அது அவர்களுக்குத் தாழ்ந்தோரிடம் தோற்ற அவமானமல்லவா? அவர்களுக்கு அந்தக் காலத்தில் உன்னால் ஏற்பட்ட பரிபவமும் இந்தக் காலத்தில் திருடர்களால் உனக்கு ஏற்பட்ட பரிபவமும் அந்த ஸ்ரீ விஷ்ணுவின் பிரபாவமேயாகும். பார்த்தா நீ கவுரவரை வென்றதும் திருடருக்குத் தோற்றதும் எல்லாம் அந்த ஸ்ரீகிருஷ்ணனின் திருவிளையாடலேயன்றி வேறல்ல, சாக்ஷõத் பகவான் திருவுள்ளம் பற்றிய அந்த மங்கையரை அற்பர்கள் இழுத்துச் சென்றார்களே என்றல்லவா நீ விசனப்படுத்துகிறாய்? அதற்கும் ஒரு காரணமுண்டு. அதையுஞ் சொல்கிறேன் கேள்.

முன்பு ஒரு காலத்தில் அஷ்டாவக்கிரர் என்ற முனிவர் கழுத்தளவு தண்ணீரில் அமிழ்ந்து பல ஆண்டுக்காலம் வரை பிரமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நேரிட்ட போது, அசுரர் கூட்டம் எல்லாம் மடிந்தனர். அதன் காரணமாக மேரு மலைச்சாரலில் திருவிழா ஒன்றை நடத்தினார்கள். அந்த திருவிழாவுக்குப் போய்க்கொண்டிருந்த ஊர்வசி, ரம்பை, திலோத்தமை முதலிய அநேக தேவமங்கையர், அந்த முனிவரைக் கண்டு, வணங்கிப் புகழ்ந்து துதித்தார்கள்! தண்ணீரில் கழுத்தளவு மூழ்கிச் சடாபாரத்துடன் விளங்கிய அஷ்டாவக்கிர முனிவர், அத்தேவமங்கையர் செய்த வணக்கத்திற்கும் தோத்திரத்துக்கும் மனம் உவந்தார். அந்த மங்கையர் மேலும் மேலும் அவரைத் துதித்தார்கள். அப்போது அந்த முனிவர், பெண்களே நீங்கள் வணங்கியது கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். அதற்கு அப் பெண்களில் ரம்பையும் திலோத்தமையும் சுவாமி, தேவரீர் திருவுள்ளம் உவந்ததே போதுமானது! என்றனர். மற்றத் தேவமங்கையரோ சுவாமி! தங்கள் திருவுள்ளம் உவந்ததானால் புருஷேத்தமனே எங்களுக்கு கணவனாகும்படி வரந்தர வேண்டும்! என்றார்கள். முனிவரும் அப்படியே ஆகுக! என்று வரம் தந்துவிட்டுத் தண்ணீரிலிருந்து வெளியே வந்தார். அவர், கரையேறியபோது, உடம்பு எட்டுக் கோணல்களாகவும் அகோரமாகவும் இருந்தது. அவரது கோணலுடலைக் கண்ட அத் தேவதாஸியருக்கு சிரிப்புண்டாயிற்று. அந்தச் சிரிப்பை அவர்களால் அடக்க முடியவில்லை. யாருக்கு சிரிப்பு வெளிப்பட்டதோ, அவர்களை அந்த முனிவர் கோபத்தோடு உற்று நோக்கி, பெண்களே! நான் விகாரரூபமுள்ளவன் என்றுதானே நீங்கள் என்னைப் பார்த்துச் சிரித்து, அவமானஞ் செய்கிறீர்கள். நான் முன்பு அனுக்கிரகித்ததுபோல் நீங்கள் ஸ்ரீ புரு÷ஷாத்தமனையே கணவனாக அடைந்து வாழ்ந்து, இறுதியில் திருடர் வசமாவீர்கள்! என்று சபித்தார். அதைக் கேட்ட தேவமங்கையர் பயந்து மீண்டும், அம்முனிவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர் மனமிரங்கி, நீங்கள் திருடர்கைப் பட்டாலும் சொர்க்கமடையக் கடவீர்கள்! என்று அனுக்கிரகம் செய்தார்.

அர்ச்சுனா கேட்டாயா, இவ்விதமாக அஷ்டாவக்கிர முனிவரது அனுக்கிரகத்தினால் அந்தத் தெய்வ மங்கையர், கண்ணபிரானையே கணவனாக அடைந்தனர். அவருடன் வாழ்ந்த அவர்கள், முனிவரது சாபத்தாலேயே திருடர் கைவசப்பட்டார்கள். ஆகையால், இதற்காக நீ வருந்தவேண்டாம். எம்பெருமானாலேயே யாவும் நிச்சயிக்கப்பட்டு முடிவு பெற்றன. ஆகையால் இந்த விஷயத்தில் சிறிதும் சோகப்படவேண்டாம். உங்களுக்கும் சங்கார காலம் நெருங்கிவிட்டது. அதனால்தான் உங்களுடைய தேஜசு, பலம், வீரியம், மகிமை ஆகியவை இழுக்கப்பட்டுவிட்டன. பிறந்தவனுக்கு மரணமும், உயர்ந்தவனுக்கு தாழ்வும் வரவேண்டுவதேயாம் கூடுவது பிரிவதும் சேர்ந்ததற்குச் செலவும் நியதியாகும். இதையறிந்த அறிவாளி நன்மையில் மகிழ்ச்சியையும், தீமையில் கவலையையும் அடைவதில்லை. ஆகையால் உனது சகோதரர்களுடன் நீ வனத்திற்குச் செல்வாயாக அர்ச்சுனா! இப்போது நான் உனக்குச் சொன்னவற்றை உன்தமையனான யுதிஷ்டிரனுக்கு (தருமனுக்கு) சொல்லி நாளையே உடன் பிறந்தாருடன் வனம் போவதற்கான முயற்சியைக் கைக்கொள் என்று வியாசர் கூறியருளினார். அதன் பிறகு அர்ச்சுனன், அஸ்தினாபுரம் சென்றான், நடந்தவற்றை தன் உடன்பிறந்தாரிடம் சொன்னான். வியாசர் கூறியருளியதையும் சொன்னான். அதைக் கேட்டதும், வியாசர் வாக்குப்படி பாண்டவர்கள், பரீக்ஷித்துக்குக் குருராஜ்யப் பட்டாபிஷேகத்தைச் செய்வித்து, உடனே வனத்திற்குச் சென்றார்கள். மைத்ரேயரே! நீங்கள் கேட்டதற்கிணங்க யாதவ வமிசத்தில் அவதரித்த வாசுதேவனுடைய சரிதங்களையெல்லாம் உமக்குச் சொன்னேன். எவன் இந்த ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய சரிதங்களைக் கேட்பானோ, அவன் சகல விதமான பாவங்களும் தீர்ந்து, ஸ்ரீவைகுந்தப் பதவியை அடைவான்.

ஐந்தாவது அம்சம் முடிந்தது.

 
மேலும் விஷ்ணு புராணம் »
temple news
1. புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் ... மேலும்
 
temple news
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும் பராசரர் ... மேலும்
 
temple news
15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும் பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! ... மேலும்
 
temple news
1. பிரியவிரத வம்சம் பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ... மேலும்
 
temple news
9. சிம்சுமார சக்கரம் மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar