நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கரந்த மலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூப்பல்லாக்கு திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அம்மன் குளத்திலிருந்து மல்லிகை, முல்லை, ரோஜா, சம்மங்கி, துளசி, அரளி, கனகாம்பரம், செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்க சிறப்பு அலங்கார பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன், வாண வேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 20-க்கும் மேற்பட்ட மண்டகபடிகளில் மாரியம்மன் பூப்பல்லாக்கில் விடிய விடிய எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இன்று காலையில் அம்மன் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார்.அப்போது மூலவருக்கும், உற்சவருக்கும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த பூப்பல்லாக்குடன் திருவிழா நிறைவு பெற்றது.