திருப்பூர், சிறுபூலுவபட்டியில் உள்ள திருவாவினன்குடி நகரில், ஸ்ரீ ஆனந்த விநாயகர், கருமாரியம்மன் மற்றும் கருப்பராயன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் பால் குடம் மற்றும் பொங்கல் திருவிழா நடைபெறும். அவ்வகையில், நடப்பாண்டு 20வது ஆண்டு திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கி மூன்று நாள் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி, மூகாம்பிகா காலனி ஸ்ரீதுர்கா விநாயகர் கோவிலிலிருந்து பால் குட ஊர்வலம் துவங்கியது. சிறுபூலுவபட்டி வழியாக கோவிலுக்கு வந்தடைந்த பால் குடங்கள், ஆனந்த விநாயகர், கருமாரியம்மன் மற்றும் கருப்பராயன் சன்னதிகளில் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும், மகா தீபராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலமும், அம்மனுக்கு பொங்கல் வைத்தும் வழிபாடு நடந்தது. திருவிழா நிறைவாக, மூன்று கோவில்களிலும் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து மஞ்சர் நீராட்டு விழாவும் நடந்தது.