பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டு நாட்கள் நடக்கும், பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 102வது, ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. உத்திரபிரதேசம், பலியா மாவட்டம், நர்தரா கிராமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமார் கடந்த, 1918, டிச.,1ல், பிறந்தார். அவர், 1959ல், திருவண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நிலையில், 2001 பிப்.,20ல், முக்தி பெற்றார்.
நேற்று அவரது ஆஸ்ரமத்தில் அவரின், 102வது, ஜெயந்தி விழா தொடங்கியது. இதில், சுப்ரபாதம், அகவல், ஆரத்தி, நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், தாலாட்டு, பிரதான் மந்திர் பகுதியில் கணபதி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. பின்னர், பகவான் யோகி ராம்சுரத்குமார் சிலையை வண்ண மலர்களால் அலங்கரித்தும், சன்னதிக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. கொரோனாவால், இசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இன்று, டிச.,1ல், ஏகாதச ருத்ர பாராயணம், மகா அபிஷேகம் நடக்கிறது, மேலும், சாதுக்கள், ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம நிர்வாகிகள், டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்துள்ளனர்.