துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதி முடித்தார். அதற்கு ‘ராம சரித மானஸ்’ என பெயரிட்டிருந்தார். நுாலை அரங்கேற்ற காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதாமல், பேச்சு வழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதைக் காரணம் காட்டி அவர்கள், அரங்கேற்றம் செய்வதை தடுத்தனர். அதன் பின் காசி விஸ்வநாதர் கோயில் பண்டாக்களிடம் ராமாயணச் சுவடியைக் கொடுத்த துளசிதாசர், “கண் கண்ட தெய்வமான விஸ்வநாதர் முன்னிலையில் சுவடிகளை ஒப்படைக்கிறேன். அவர் சம்மதம் கிடைத்தால் ராமாயணம் அரங்கேறட்டும்’’ என்றார். அன்றிரவு ராமாயணச் சுவடி விஸ்வநாதர் முன்னிலையில் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் காலையில் நடை திறந்தபோது சுவடி மீது ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ குறிப்பு இடம் பெற்றிருந்தது. விஸ்வநாதரின் சம்மதம் கிடைத்ததை எண்ணி துளசிதாசர் மகிழ்ந்தார்.