பதிவு செய்த நாள்
13
ஜன
2021
03:01
ஆன்மிகம் வளர அரசியல் தேவையில்லை. ஆனால் அரசியல் வளர ஆன்மிகம் அவசியம் தேவை. அரசியல் இல்லாமல் ஆன்மிகம் உண்டு. ஆனால் ஆன்மிகம் இல்லாத அரசியல் இல்லை. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். உலக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இதிகாச, புராண காலத்தில் அரசியலோடு ஆன்மிகத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது என்பதை ராமாயணம், மகாபாரதம் முதலான காவியங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம். இந்தியாவை பொறுத்த வரை வரலாற்றுச் சான்றுகள் உள்ள கி.மு. ஆறாம் நுாற்றாண்டு முதல் தற்காலம் வரை ஆன்மிகம் இல்லாத அரசியலைக் காண இயலாது. கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பவுத்த பிட்சுக்களின் வழிநடத்துதலின்படி அகிம்சையை கடைபிடித்தார் என்றும் தனது பிள்ளைகளை அந்நிய தேசங்களுக்கு அனுப்பி பவுத்த மதத்தைப் பரப்பினார் என்றும் படித்திருக்கிறோம். சந்திரகுப்த மவுரியரின் அரசியல் ஆசான் சாணக்கியர் எழுதியதே அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் நுால். அரசியல் அமைப்புச் சட்டங்களின் ஆதாரமான இது ஆன்மிகவாதியான சாணக்கியரால் இயற்றப்பட்டதே. மன்னர் என்பவர் கடவுளின் மறுவடிவம் என மக்கள் கருதத் தொடங்கிய காலம் அது.
மவுரியப் பேரரசினைத் தொடர்ந்து வந்த குஷாணர்கள் பௌத்த மதத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றனர். கனிஷ்கரின் காலத்தில்தான் புத்தருக்கு உருவ வழிபாடு உண்டானது. தென்னிந்தியாவிலும் பல்லவர்களால் பவுத்தமும், சமணமும் வலுப்பெற்றன. குப்தப் பேரரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று இன்றளவும் வர்ணிக்கப்படுகிறது. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக்கஜங்களில் ஆரியப்பட்டர், வராகமிகிரர் போன்ற வானவியல் அறிஞர்களும், காளிதாசன் போன்ற இலக்கியவாதிகளும் இடம்பிடித்தனர். வானசாஸ்திரமும், ஜோதிடமும் மன்னர்களின் வாழ்வைத் தீர்மானிப்பதாக அமைந்தது. ராஜகுரு என்பவர் அரசர்களையும் ஆட்டிப் படைப்பவர்களாக அதிகாரம் பெற்றிருந்தனர். அதன் பின் ஆறாம் நுாற்றாண்டில் சமயப்புரட்சி ஏற்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம். ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தம் பெரும்பாலான மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆன்மிகவாதிகளின் அறிவுரைகளை எல்லா மன்னர்களும் பின்பற்றினர். மன்னர்களின் ஆட்சியில்
தென் இந்திய பகுதிகளில் சேர, சோழ, பாண்டியர்களால் பல கோயில்களும், அன்ன சத்திரங்களும் எழுப்பப்பட்டன. கோயில்களுக்கு நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கூன்பாண்டியன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியது ஞானசம்பந்தரின் அருளால் என்பதும் மாணிக்கவாசகர் பாண்டிய மன்னரின் அவையில் அமைச்சராக பணியாற்றியவர் என்பதும் நாம் அறிந்ததே. பண்டைய சோழர் காலத்தைச் சேர்ந்த கரிகால் சோழன் காலத்திலேயே அரசு சார்பில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடத்தியதற்கான ஆதாரம் வரலாற்றில் குவிந்து கிடக்கிறது. பிற்கால சோழர்கள் காலத்தில் ராஜராஜன், ராஜேந்திர சோழன் கட்டிய உலகப் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி நாம் நன்கறிவோம். ராஜராஜசோழனின் தலைமை அமைச்சரான கருவூர்த்தேவர் பின்னாளில் கருவூரார் எனும் சித்தராக விளங்கினார். கோயில்களைக் கட்டுவதிலும், அதனை ஒட்டி குளங்களை வெட்டுவதிலும் சோழர்களின் நிர்வாகத் திறன் வெகுவாக வெளிப்பட்டது. பின்னாளில் வந்த ராமானுஜரால் சமயப்புரட்சி ஏற்பட்டு ஜாதி பாகுபாடு மறைந்தது. சைவ, வைணவ சண்டை இருந்தபோதிலும் ஆன்மிகத்தைத் தழுவியே மன்னர்களின் ஆட்சி அமைந்தது.
மொகலாயர் காலத்திலும் அக்பர் ‘தீன் இலாஹி’ என்னும் புதிய மதத்தைத் தோற்றுவித்தார். நாடாளும் மன்னர் புதிய மதத்தைத் தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் அரவணைத்துச் சென்றால்தான் நாட்டில் எந்த விதமான சண்டைகளும் இன்றி சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும் என்ற எண்ணத்தில் இரண்டிற்கும் பொதுவான ஒரு மதத்தைத் தோற்றுவித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவுரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் மதுரை வரை (மகாராஷ்டிரா தவிர) மொகலாய ஆட்சியின் கீழ் வந்தபோது ஹிந்துக்களின் மீது வரி விதிக்கப்பட்டது. வரி கட்ட இயலாமல் பலரும் மதம் மாறியதையும் வரலாற்றில் படிக்கிறோம். மதத்தின் மீது மன்னருக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று யோசித்துப் பாருங்கள்.
மன்னர் என்பவன் கடவுளின் மறுஅவதாரம் என்ற கருத்து மக்களின் மனதில் வேரூன்றிவிட்டது.
யூத மன்னர்கள் தங்கள் மத குருமார்களின் ஆணைக்கு இணங்கியே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சீனா, ஜப்பான், கொரியா என அனைத்து நாடுகளிலும் பவுத்த மதம் கொடி கட்டி பறப்பது எதனால்? இலங்கையில் பவுத்தமதம் கோலோச்சுவதன் காரணம் அங்கே ஆட்சி செய்த நம் பங்காளிகள் தானே.
பதினாறாம் நுாற்றாண்டு முதல் 19ம் நுாற்றாண்டின் இறுதி வரை ஐரோப்பிய நாடுகள் பலவும் ரோம் நகரத்தின் கண்ணசைவிற்காகக் காத்திருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் மூளையாக வாடிகன் நகரம் செயல்பட்டது என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். இந்த நுாற்றாண்டிலும் ஆன்மிகத் தொடர்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் இல்லை. சிலர் ஆன்மிகத்தை ஆதரிக்கிறார்கள். சிலர் ஆன்மிகத்தை எதிர்க்கிறார்கள். அரசியல்வாதிகள் பொங்கல் திருநாளில் சூரிய வழிபாடு செய்கிறார்கள். கிறிஸ்துமஸ் திருநாளில் தேவாலயப் பிரார்த்தனைகளிலும், ரம்ஜான் நோன்பின் போது இப்தார் விருந்தில் பங்கெடுக்கிறார்கள். ஆன்மிகம் என்பது மக்களின் உயிர்நாடி. எந்த காலத்திலும், எந்த நேரத்திலும் மக்களின் மனதில் இருந்து ஆன்மிக சிந்தனையை அகற்ற முடியாது. மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியலில் கால் பதிக்க முடியாது.
மக்களின் தேவையை உணர்ந்தவரே உண்மையான மன்னர். மக்களின் தேவையை நிறைவேற்றுபவனை தங்களின் தலைவராக மட்டுமல்ல, கடவுளாகவும் மக்கள் காண்பார்கள். இதுவே உண்மையான ஆன்மிக அரசியல்.