பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,22ல் துவங்கி ஜன.,31 வரை நடக்கிறது. ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், மலர்காவடி, மயில்காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் ரதவீதியில் புறப்பாடு நடந்தது. மணக்கோலத்தில் அருள்பாலித்தனர்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று இரவு 7:30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்தது. வெளிப்பிரகாரத்தில் பிரத்யேகமாக அலங்கரித்த மணப்பந்தலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.
இன்று தைப்பூசத்தையொட்டி மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் நான்கு ரதவீதிகளிலும் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஜன.,31 இரவு 7:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயில் அருகே தெப்போற்ஸவம் நடைபெற உள்ளது. இரவு 11:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.