பதிவு செய்த நாள்
15
பிப்
2021
10:02
முகலாய அரசர் அவுரங்கசீப் என்றாலே, தீவிர மதவெறி பிடித்தவர் என, எல்லோருக்கும் தெரியும். அவர், பல கோவில்களை இடித்து, அவற்றின் மீது மசூதிகளை கட்டினார். சோம்நாத்பூர், கிருஷ்ண ஜென்ம பூமி, காசி விஸ்வநாதர் கோவில், கோவிந்த் தேவ் மற்றும் பீமா தேவி கோவில்கள் போன்றவை, அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டவை என்பது, வரலாற்று வல்லுநர்களின் கருத்து. ஆனால், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்ற, என்.சி.இ.ஆர்.டி., வரலாற்று உண்மைகளை திரித்து பாடப்புத்தகங்கள் தயாரித்து, மாணவர்களை தவறாக வழி நடத்துகிறதோ, என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பின், தீம்ஸ் ஆப் இந்தியன் ஹிஸ்ட்ரி எனும், வரலாற்றுப் புத்தகத்தில், இரண்டாம் பாகத்தின், 234ம் பக்கத்தில் முகலாய சகாப்தத்தைப் பற்றி விவரிக்கும்போது, கோவில் பழுது பார்ப்பதற்காக மானியங்கள், ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப் காலத்தில் வழங்கப்பட்டன; போரில் அழிக்கப்பட்ட கோவில்களை, இருவரும் மீண்டும் கட்டி எழுப்பினர் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடநுாலில், வெளியிடப்பட்ட கருத்துக்கான
ஆதாரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரப்பட்டது.அதற்கு பதில் அளித்து, பொது தகவல் அலுவலர் பேராசிரியர் கவுரி ஸ்ரீவஸ்தவா கையெழுத்திட்ட அறிக்கையில், முகலாயப் பேரரசர்கள், குறிப்பாக ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப், போர்களில் அழிக்கப்பட்ட கோவில்களை மீண்டும் கட்டியெழுப்பினர் என்பதை நிரூபிக்க, எந்த ஆதாரமும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு திரிப்பு: கலை மற்றும் கலாசார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திர பிரசாத் கூறியதாவது:ஷாஜகான் அல்லது அவுரங்கசீப், தங்கள் ஆட்சிக் காலத்தில் கோவில்களை பழுதுபார்ப்பதற்கோ அல்லது புனரமைப்பதற்கோ மானியம் வழங்கினர் என்பதை நிரூபிக்க, ஒரு சான்று கூட இல்லை. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மேல், மசூதி கட்டப்பட்டது. இப்போது கூட, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி அருகில், ஒரு இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தைக் காண்கிறோம்.
மத பயங்கரவாதி: அவுரங்கசீப் ஒரு மத பயங்கரவாதி. கோவில்களுக்குச் செல்ல, ஹிந்துக்களுக்கு, ஜஸியா வரியை அமல்படுத்தினார். சிம்மாசனத்தை கைப்பற்றுவதற்காக, தன் தந்தையை சிறையில் அடைத்து, தன் சகோதரரின் தலையைத் துண்டித்து சுயமாகத் தன்னை, பேரரசர் என பிரகடனப்படுத்திக் கொண்டவர் அவுரங்கசீப். ஆனால், இந்த பாடப் புத்தகங்கள் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களால், உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டவை. முரளி மனோகர் ஜோஷி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், பாடப் புத்தகங்களில் பல மாற்றங்களைச் செய்தார்; தவறானவற்றைநீக்கினார். மன்மோகன் பிரதமரானபோது, பாடத்திட்டம், மீண்டும் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. மோடி தலைமையிலான அரசு, உண்மை நிலையை ஆய்வு செய்து, வரலாற்று பிழையான கருத்துக்களை மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.எதிர்கால குடிமக்களாக இருக்கும் மாணவர்களுக்கு, உண்மைகளை உள்ளபடி வழங்குவது மிகவும் முக்கியம்.
தொட்டில் பழக்கம்: எழுத்தாளரும், வரலாற்று வல்லுனருமான ராஜேஷ் கோவிந்தராஜுலு கூறியதாவது: அவுரங்கசீப் காலம் என்பது, ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை மற்றும் அராஜகத்தை அவிழ்த்துவிட்ட ஆட்சியாகவே இருந்தது.
* சிறு வயதிலேயே, அதாவது 17 வயதாக இருந்தபோதே, 1635ம் ஆண்டில் அவுரங்கசீப், கோவில் இடிப்பு செயலில் ஈடுபட்டார். தந்தை ஷாஜகான் உத்தரவின்படி, ஒரு பெரிய கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், ஒரு மசூதி அமைக்கப்பட்டது என்று, தி லாஸ்ட் ஸ்பிரிங் - தி சாகா ஆப் தி கிரேட் மொகல்ஸ்- என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* 1670ம் ஆண்டில் உஜ்ஜைனைச் சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் அழிக்கப்பட்டன.
* 10 ஆண்டுகளுக்குப் பின் ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. பல விக்கிரகங்கள், வண்டிகளில் டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜும்மா மசூதி நடைபாதைகளில்மிதிபடுமாறு பரப்பப்பட்டன.
* மஹாராஷ்டிரா மாநிலம், பந்தர்பூர் கோவிலை இடிக்கவும், அங்கு முகாமிலுள்ள கசாப்புக் கடைக்காரர்களை அழைத்துச் சென்று, கோவிலுக்குள் மாடுகளை அறுக்கவும் அவுரங்கசீப்
உத்தரவிட்டார். எனவே, அவர் ஹிந்து கோவில்களை புனரமைக்க மானியம் வழங்கினார் என்பது, உண்மைக்கு புறம்பானது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -