ஒருமுறை முல்லா இந்தியாவில் பயணம் செய்த போது ஒரு துறவி ஒருவரைக் கண்டார். ‘‘என் போன்ற தத்துவ அறிஞனுக்கும், உங்களைப் போன்ற துறவிக்கும் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கும்’’ என்றார் முல்லா. ‘‘நான் ஒரு துறவி. மனிதர்கள் மட்டுமே இந்த உலகின் மையம் அல்ல. பறவை, விலங்குகள் சேர்ந்தே இந்த உலகை அழகுபடுத்துகின்றன. உலகின் மீதே என் கவனம் இருக்கிறது’’ என்றார் துறவி. ‘‘இந்த மேலான பணியில் என்னையும் அனுமதியுங்கள். நம் இருவரும் ஒரே கருத்து கொண்டவர்கள். ஏனெனில் ஒருமுறை என் உயிரையே சிறிய உயிரினம் ஒன்று காப்பாற்றியது’’ என்றார் முல்லா. ‘‘எத்தனை அற்புதம்! உங்களை நண்பராக ஏற்பதில் மகிழ்ச்சி. நம் சித்தாந்தமும் விலங்குகள் ராஜ்ஜியத்தின் சித்தாந்தமும் பிணைக்கப்பட்டிருப்பதை இது உறுதிப்படுத்துகிறது’’ என்றார் துறவி. சிறிய உயிர் தங்களின் உயிரைக் காப்பாற்றிய அனுபவத்தை இன்னும் சொல்லவில்லையே’’ என்றார் துறவி. ‘‘அந்த அனுபவத்தை சரியாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை’’ என தயங்கினார். ‘‘எனது சித்தாந்தத்தை வளர்ப்பதற்கு தான் கேட்கிறேன். தயவு செய்து கூறுங்கள்’’ எனக் கெஞ்சினார் துறவி. ‘‘சரி இவ்வளவு துாரம் கெஞ்சுவதால் கூறுகிறேன். ஆனால் நீங்கள் ஏற்பீர்களா என்பது தெரியவில்லை. என் உயிரை மீன் ஒன்று காப்பாற்றியது. அதைப் பிடித்த போது கடும்பசியில் இருந்தேன். எனக்கு அந்த மூன்று நாட்கள் உணவு வழங்கி உயிரை காத்தது’’ என்றார் முல்லா. வாயடைத்து போனார் துறவி.