மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான் என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். புராண காலத்திலேயே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தேவாரம் பாடிய சிவனடியாரான சுந்தரர். இவரைத் தன் நண்பராக சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருத்தலம் திருவெண்ணெய்நல்லுார். இங்கு வீற்றிருக்கும் கிருபாபுரீஸ்வரரை ஒருமுறை தரிசித்தால் வாழும் காலம் வரை நல்ல நண்பர்களாக நீடிக்கலாம். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது ஆலாகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தை உண்டு உலகைக் காப்பாற்றினார் சிவன். விஷத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என பார்வதி வெண்ணெய்க் கோட்டை கட்டி யாகத்தீ மூட்டி அதன் மீது தவமிருக்கத் தொடங்கினாள். வெண்ணெயால் கட்டப்பட்டதால் இத்தலம் திருவெண்ணெய்நல்லுார் எனப்பட்டது. தாருகாவனத்தில் இருந்த முனிவர்கள் தங்களின் மனைவியருடன் வசித்து வந்தனர். யாகம், தவத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றதால் ஆணவத்துடன் திரிந்தனர். அதை அடக்க விரும்பிய சிவபெருமான் வனத்திற்கு வந்தார். அவரது அழகைக் கண்ட முனிவர்களின் மனைவியர் சபல புத்தியால் சிவன் பின்னால் சென்றனர். அதிர்ந்த முனிவர்கள் சிவனை அழிக்க தீய சக்திகளை ஏவினர். அவற்றை ஆயுதங்களாக ஏற்று முனிவர்களின் ஆணவத்தை அடக்கினார். இத்தலமே அருட்டுறை (அருள்துறை) என பெயர் பெற்றது. தற்போது திருவெண்ணெய்நல்லுார் எனப்படுகிறது. முனிவர்களை மன்னித்து கிருபை செய்ததால் ‘கிருபாபுரீஸ்வரர்’ எனப்படுகிறார். சுயம்பு லிங்கமாக இருக்கிறார். மங்களாம்பிகை நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருக்கிறாள். தலவிருட்சம் மூங்கில். பெண்ணை, வைகுண்டம், வேதம், சிவகங்கை, பாண்டவ தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. சுந்தரரின் திருமண நடந்தபோது முதியவர் வேடத்தில் வந்தார் சிவன். ‘நீ எனக்கு அடிமை என்று உன் முன்னோர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்’’ என ஓலைச்சுவடியைக் காட்டினார். அது உண்மை என்பதை அறிந்த சுந்தரர் திகைத்தார். திருமணம் நின்று போனதால் சிவனை ‘பித்தன்’ என திட்டினார். அதைக் கூட பொருட்படுத்தாமல் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவெண்ணெய்நல்லுார் வந்தார் சிவன். வாசலில் பாதுகைகளை கழற்றி விட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். வந்தது சிவன் என்பதை அறிந்த சுந்தரர் பரவசப்பட்டார். அப்போது “சுந்தரா, என்னைப் பற்றி பாடு’’ என அசரீரி கேட்டது. ‘பித்தா, பிறைசூடி பெருமானே அருளாளா’ என பதிகம் பாடினார். அது முதல் இருவரும் நண்பர்களாயினர். வாழும் காலம் வரை நட்பு நீடிக்க நண்பர்கள், தோழிகள் இத்தலத்தில் வழிபடுகின்றனர். சிவனுக்கும், சுந்தரருக்கும் வாக்கு வாதம் நடந்த பஞ்சாயத்து கல் மண்டபம் கோயிலில் உள்ளது. பஞ்சாயத்தின் போது சிவன் சாய்ந்திருந்த துாண் கதகதப்பாக இருக்கிறது. அவரது பாதுகை இங்குள்ளது. எப்படி செல்வது * கடலுாரில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் வழியில் 7 கி.மீ., * விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ., விசேஷ நாள்: ஆனி மூலம் புட்டு உற்சவம், ஆடி சுவாதியில் சுந்தரர் விழா, பங்குனி