விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என்று அனைவரும் சிவபூஜை செய்து அருள்பெற்றுள்ளனர். ஆனால், சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலமே, மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். மூலவர் லிங்கவடிவத்தில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே, மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும்போது லிங்கபூஜை செய்வது மரபு. இதன் அடிப்படையில், மதுரையில் ஆட்சியில் அமர்ந்த சிவனும், தனது பட்டாபிஷேகத்தின் போது, தனக்குத்தானே பூஜை செய்து கொண்டாராம். அந்த அடிப்படையில், இவ்வாறு சந்நிதி எழுப்பப்பட்டுள்ளது. இதே போன்ற சந்நிதி வேதாரண்யத்திலும் உள்ளது.