பதிவு செய்த நாள்
31
மார்
2021
05:03
சைவ கோவில்களின் ஆகமத்தை காக்கவும், இறைப்பணி முழுமை பெறவும், கோவில்களில் நிரந்தரமாக ஓதுவார் பணியிடங்களை முறைப்படி நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம், கலையழகு மிக்க கோவில்களால் சிறப்பு பெற்றது. தேவார மூவரான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர், பல கோவில்களுக்குச் சென்று, இறைவனை வழிபட்டுப் போற்றினர்.அவர்கள் பாடிய பாடல்கள், திருப்பதிகங்கள் எனப்பட்டன. இதை, தேவாரம் எனவும் அழைப்பர். தேவாரம் என்றால் தெய்வத்தைக் குறித்த இசைப்பாட்டு, வழிபாடு செய்யும் இடம் என்பதும் பொருள்
.தேவாரம், இசைத் தமிழைச் சேர்ந்த, வாரம் என்ற பாடல் வகையைச் சார்ந்தது. திருஞான சம்பந்தர் அருளியது திருக்கடைக் காப்பு; திருநாவுக்கரசர் அருளியது தேவாரம்; சுந்தரர் அருளியது திருப்பாட்டு என்றும் அழைக்கின்றனர்.முதன் முதலில் தஞ்சை பெருவுடையார் கோவிலில், இறைவன் முன், நாள்தோறும் திருப்பதிகங்களை விண்ணப்பம் செய்ய, 48 ஓதுவார் மூர்த்திகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பெயர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அவர்கள், பிடாரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் சிவதீட்சை பெற்று, தீட்சா நாமமும் உடையவர்கள்.ஒவ்வொருவர் பெயரின் இறுதியில் சிவன் என, முடிகிறது. இதன் வாயிலாக, திருமுறைகளின் மீது கொண்டிருந்த பக்தியை அறிய முடிகிறது.அதேபோல, கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில், வடப்புற திருச்சுற்று மாளிகை சுவரில், 108 ஓதுவா மூர்த்திகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தேவாரம் பாட, மொழி வளம் காக்க, இசை நலம் பேண, தம்மை அர்ப்பணித்த இறைத் தொண்டர்களான ஓதுவார்களை, அக்காலத்தில், அனைத்து சைவ கோவில்களிலும் நியமித்திருந்தனர்.அவ்வளவு சிறப்பு பெற்ற ஓதுவார்களின் தொண்டு, 1925ல், ஹிந்து சமய அறநிலையத் துறை வாரியம் ஏற்படுத்தப்பட்ட பின், மழுங்கடிக்கப்பட்டது. கடந்த, 1951ல் வாரியம் கலைக்கப்பட்டு, அரசு துறையாக செயல்பட துவங்கியதும், அழிந்து போகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டது. அனைத்துலக ஓதுவார் திருமூர்த்தி சங்கத்தினர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இதில், 8,000 கோவில்கள், ஆண்டு வருமானமாக, 10 லட்சத்திற்கும் மேல் கொண்டவை.இவற்றில் வைணவ கோவில்கள் போக, 7,000 சைவ கோவில்களில், தலா இரண்டு ஓதுவார் என, குறைந்த பட்சம், 14 ஆயிரம் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தமிழகம் முழுதும் பிரசித்தி பெற்ற, 35 கோவில்களில் மட்டும், சில கோவில்கள் தவிர, தலா ஒரு ஓதுவார் மட்டுமே உள்ளனர். அவர்களும், தினக்கூலி, தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதிலும் பல கோவில்களில், ஓதுவார்கள், தரிசன சீட்டு கிழிப்பதற்கும், இதர பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தில், ஐந்து ஆண்டுகள் ஓதுவார் படிப்பு; அரசின் இசைக் கல்லுாரியில் மூன்று ஆண்டுகள் படிப்பு முடித்த ஏராளமான இளைஞர்கள், வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.சங்கம் சார்பில், பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். உரிய தீர்வு காண்பதாக கூறியதோடு, இதுவரை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. எனவே, அரசும், அறநிலையத் துறையும், இனியும் தாமதப்படுத்தாமல், தமிழக ஆகமத்தை காக்கவும், இறைப்பணி முழுமை பெறவும், கோவில்களில் நிரந்தரமாக, ஓதுவார் பணியிடங்களை முறைப்படி நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். - -நமது நிருபர் -