திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, ஏப்., 24 முதல், கடந்த மாதம் 27ம் தேதி வரை, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. தினசரி நித்ய பூஜைகள் மட்டும் தொடர்ந்து மூலவருக்கு நடந்து வந்தன.இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி முதல், நிபந்தனைகளுடன் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, அரசு அறிவித்திருந்தது. திங்கட்கிழமை முதல், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதாலும், ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளதாலும், மலைக்கோவிலில் நேற்று காலை முதல், இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது வழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சிறப்பு கட்டண தரிசனத்திலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.