பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
03:07
பொள்ளாச்சி: கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, ஏப்., மாதம் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக,கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தினமும் பூஜைகள் மட்டும் நடந்தது. மூன்று மாதங்களுக்கு பின், வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
பொள்ளாச்சியில், நேற்றுமுன்தினம் கோவில்களில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் நிற்பதற்காக சமூக இடைவெளி அடிப்படையில் கட்டங்கள் வரையப்பட்டன.இந்நிலையில், நேற்று கோவில்கள் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டன. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.கோவிலில் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின், கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி, இறைவனை வழிபாடு செய்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி, கோவிலுக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.முகக்கவசம் அணியாமல் வருவோரை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. மேலும், அர்ச்சனை மட்டுமே நடக்கிறது, பக்தர்களிடமிருந்து எவ்வித பூஜை பொருட்களும், சேலையும் பெறுவது இல்லை.
கிணத்துக்கடவு, சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நேற்று காலை சிறப்பு பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. மிகப்பழமையான ஆதீஸ்வரன்கோவில், பொன்மலை ஆண்டவர் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகைபுரிந்தனர்.* வால்பாறையில், நேற்று முதல் அனைத்து கோவில்களிலும், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், பிரசன்னவிநாயர் கோவில், மாரியம்மன் கோவில் என அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ளகோவில்கள், கிராம கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்; சானிடைசர் மற்றும் கை கழுவும் வசதி, தனிமனித இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நீண்ட நாட்களுக்குப்பின், கோவில்களில், மணியோசையும், சுவாமிகளுக்கு பூஜைகள், அர்ச்சனை என களை கட்டியது. பக்தர்கள் கொரோனா பாதுகாப்புடன் வழிமுறைகளுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.- நிருபர் குழு -