பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
03:07
உடுமலை: பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவிலை, இந்து அறநிலையத்துறை வாயிலாக புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது. உப்பாறு படுகையில், உள்ள கோவில்களில் பழமை வாய்ந்ததும், பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவில், பல்வேறு காரணங்களால், சிதிலமடையத்துவங்கியது.
முன்கோபுரம், கருவறை விமானம், மேற்கூரை உட்பட இடங்களில், விரிசல் விட்டு, மழைக்காலத்தில், உட்புறத்தில், தண்ணீர் கசிந்து வருகிறது. நடன மண்டபம், முன் மண்டபத்தை ஒட்டிய பகுதிகளிலுள்ள துாண்கள் சிதையும் நிலையில் உள்ளது.பல்வேறு சிற்பங்கள், உடைந்துள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இந்து அறநிலையத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, கண்டியம்மன் கோவிலில், ஆய்வும் நடத்தப்பட்டது.அதன்படி, தொல்லியல் துறை வழிகாட்டுதல் பெறப்பட்டு, பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது; ஆனால், இதுவரை பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில், கோவிலின் தொன்மையை பாதுகாக்க, அப்பகுதி பக்தர்கள் ஒருங்கிணைந்து, பல்வேறு பணிகளை கோவில் வளாகத்தில் செய்து வருகின்றனர்.நடைபாதை அமைக்கப்பட்ட பிறகு, கடந்த இரு நாட்களாக, கோவிலை சுற்றிலும், கம்பிவேலி அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, தங்கள் பகுதியின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். நடப்பாண்டு, இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்திலுள்ள, 100க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இப்பட்டியலில், கண்டியம்மன் கோவிலையும் சேர்த்து, பணிகளை துவக்கும்பாபிஷேகம்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.