சதுரகிரியில் பிரதோச வழிபாடு : நீர் வரத்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2021 02:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையினால் ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டதால் பிரதோச வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை பிரதோசம் மற்றும் அமாவாசை வழிப்பாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையினால் செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால், ஓடையில் நீர் வரத்து இருந்ததால் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காத்திருந்த பொதுமக்கள், பக்தர்கள் தாணிப்பாறை கேட்டில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மாலை சுந்தரமகாலிங்கம் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிரதோஷ வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இன்று மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் தெரிவித்தனர்.