பதிவு செய்த நாள்
31
அக்
2021
12:10
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் 32.54 லட்சம் ரூபாய் மதிப்பு திருப்பணிகளுக்கு மறு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலைய துறையின், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது.கடந்த 1998ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 23 ஆண்டுகள் கடந்து, மீண்டும் நடைபெறவில்லை.
இதுகுறித்து நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. கோவில் நிர்வாகம், கோவிலை புதுப்பிக்க முடிவெடுத்து, இத்துறையின், கோவில்கள் புனரமைப்புக் குழுவினர், 2018ல் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, உயர் நீதிமன்ற அங்கீகார குழு அனுமதி பெறப்பட்டு, இத்துறை பொதுநல நிதி 32.54 லட்சம் ரூபாய் மதிப்பில், பெருமாள், தாயார் உள்ளிட்ட சன்னிதிகளின், மேற்புற பூச்சு நீக்கி, சுதை சிற்பங்கள், மேல்தளம் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது.
இப்பணிகள் ஒப்பந்தம், கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டு, ஒருவர் மட்டுமே பங்கேற்றதால், ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.மறு ஒப்பந்த அறிவிப்பு, ஊரக உள்ளாட்சி தேர்தலால் தாமதமாகி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதிக்குள், கோவில் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம்; 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.