பதிவு செய்த நாள்
02
டிச
2021
03:12
பல்லடம்: பல்லடம் அருகே, கிராமத்தில், நேர்த்திக் கடனை செலுத்த வேண்டி, 36 அடி உயர அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காரியங்கள் நிறைவேறவும், பிரச்னைகள் தீரவும் வேண்டி, பக்தர்கள் தங்கள் குலதெய்வம், அல்லது இஷ்ட தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டு, கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக்கடனை செலுத்தும் வழக்கம், காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில், நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டி, பக்தர் ஒருவர், 36 அடி உயர அரிவாளை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.
இது குறித்து கோவில் பூசாரி சண்முகம் கூறுகையில், இது, கச்சேரி கருப்பராயன் கோவில். கடந்த, 40 ஆண்டுக்கு மேலாக பூஜை செய்து வருகிறேன். வேண்டுதல் நிறைவேற பலரும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்வார்கள். கோரிக்கை நிறைவேறிய பின், நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவ்வாறு, தாராபுரம் அருகே பேட்டைக்காளிபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைய வேண்டி வழிபட்ட தங்கராஜ், கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து, 36 அடி உயர அரிவாளை பிரதிஷ்டை செய்தார் என்றார். புதுக்கோட்டையில் இருந்து வந்த குழுவினர், ஒரு மாதம் தங்கியிருந்து அரிவாளை தயாரித்தனர். 2 டன் எடையுள்ள இந்த அரிவாள், எட்டு அடிக்கு அஸ்திவாரம் எடுத்து, பொக்லைன் உதவியுடன் நிறுத்தப்பட்டு, பூஜிக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில், வேண்டுதல் நிறைவேறிய மற்றொருவர், 62 அடி உயரத்தில், அரிவாள் பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளதாக, பூசாரி தெரிவித்துள்ளார்.