பதிவு செய்த நாள்
21
மார்
2022
04:03
பல்லடம்: ராகு கேது பெயர்ச்சியால், அரசியல்வாதிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என, காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகு பகவான், ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான், விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இன்று மதியம் 3.03க்கு பெயர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், நேற்று ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் பங்கேற்று சிறப்பு வேள்வி வழிபாடுகள், பரிகார பூஜைகள், மற்றும் அபிஷேக ஆராதனைகளை நடத்தி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையும் ராகு கேதுக்கள் மேஷம், மற்றும் துலாம் ராசிகளுக்கு தேர்ச்சி அடைந்தனர். ஜோதிட சாஸ்திர ரீதியாக பார்க்கையில், ராகு கேது பெயர்ச்சி மூலம் விவசாயத்துறை மேன்மை பெறும். உலகளவில், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளால் பாதிப்புகள் ஏற்படும். அரசு மூலம் விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். ஆன்மீகத் துறை வளர்ச்சி அடைந்து, அதிக திருமணங்கள் நடக்கும். வெளிநாடுகள் மூலம் இந்தியாவுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். அரசியலில் உட்கட்சி பூசல்கள் அதிகம் ஏற்படும். முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயரும். தாவரங்கள் மீது விஷ பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார்.