பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று மாதங்களுக்குள் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிவாலயம் ஆகும். சங்க கால முதல் சோழர்களால் எடுப்பிக்கப்பட்டது. கி.பி., 585ல், முதலாம் மகேந்திரனால் மண்டபம் எடுப்பிக்கப்பட்டு, தொடர்ந்து பல சிற்றரசர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுரத்திற்கு அடுத்துள்ள உட்பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதன் முகப்பில், 102 அடி உயர கோபுரம் உள்ளது. காஞ்சிபுராணம் கூறும் தல விநாயகரான "விகட சக்கர விநாயகர் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் அழகுற காட்சி தருகிறார். கோவில் பிரம்மோற்சவத்தின்போது, பங்குனி உத்திரத்தன்று, சுவாமி திருக்கல்யாணம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும்.
சீர்குலைவு: பல்வேறு சிறப்புக்களை உடைய, ஆயிரங்கால் மண்டபம், பராமரிப்பின்றி பழுதடைந்தது. மண்டபத்தில் பல இடங்களில் தூண்கள் பெயர்ந்து விழுந்துவிட்டன. தற்போது 766 தூண்கள் மட்டுமே உள்ளன. தற்போது, மனித நடமாட்டம் இன்றி, வவ்வால்களின் புகலிடமாக ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.
புனரமைப்பு: ஆயிரங்கால் மண்டபத்தை, 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறும்போது ஆயிரங்கால் மண்டபம் முழுமையாக சீரமைக்கப்படுகிறது. மேலும், பல்லவ கோபுரத்தை புதுப்பிக்கவும், 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை திருமாளிகையை சீரமைக்க, 1.25 கோடி மதிப்பிற்கு மதிப்பீடு அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அப்பணியும் துவக்கப்படும், என்றார். ஆயிரங்கால் மண்டபத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள, ஸ்தபதி நந்தகுமார் கூறும்போது,""ஆயிரங்கால் மண்டபத்தில், தரை தளத்தை சரி செய்தல், தூண்களை சுத்தப்படுத்துதல், மண்டபம் முழுவதும் மின்சார வசதி ஏற்படுத்துதல், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நுழைவு வாயில் வரை, கருங்கல் கற்களைக் கொண்டு பாதை அமைத்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மூன்று மாதத்திற்குள் பணிகள் முடியும், என்றார்.
தூண்களில் விரிசல்: ஏகாம்பரநாதர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில், சில ஆண்டுகளுக்கு மூன், இரண்டு தூண்களுக்கிடையே விரிசல் ஏற்பட்டது. அவற்றை இணைக்கும் கல் கீழே விழாமலிருக்க, இரும்பு தூண்கள் முட்டுகொடுக்கப்பட்டது. அதன்பின் பணி நடைபெறவில்லை. தற்போது விரிசல் அதிகமாகி வருகிறது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறும்போது, ""இப்பிரகாரத்தில் விரிசலை சரி செய்யும் பணி, நன்கொடையாளர்கள் உதவியுடன் அடுத்த மாதம் துவங்க உள்ளது, என்றார்.