திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 11:04
மயிலாடுதுறை: திருக்கடையூரில் இன்று நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க, அதிர்வேட்டுகள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்த போது ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 16ஆம் தேதி தீர்த்தவாரியும், 18ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.