ஒரே நாளில்.. தமிழ் புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சித்திரை திருவிழா.. கோயில்களில் குவியும் மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 11:04
மதுரை: ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். அதன்படி இன்று (14ம் தேதி) அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்து வருகிறது. சித்திரை திரு நாளாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து வருகின்றன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை பீளமேட்டிலுள்ள அஷ்டாம்ஸ வரத ஆஞ்சிநேயா பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குரு பெயர்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா, கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் இன்று சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் மற்றும் கனி காணும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதுரை சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சித்திரை திருவிழா நடைபெறுகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்.,5ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. ஒரே நாளில்.. தமிழ் புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சித்திரை திருவிழாவை தமிழகம் எங்கும் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.