ஆண்டிபட்டி: வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. சுனையில் நீராடி வேலப்பரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கூடுவர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்களின் வசதிக்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை சிறப்பு பஸ்கள் செயல்படும் என்று அரசு போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.