பதிவு செய்த நாள்
14
ஏப்
2022
07:04
சென்னை: கோவில்களில் தனியார் நிறுவனம் வாயிலாக உருவாக்கப்பட்ட வலைதளங்களை, ஒருவார காலத்திற்கு மூட, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், கோவில் செயல் அலுவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் நிர்வாகத்தை கணினி மயமாக்கும் வகையில், ஐ.டி.எம்.எஸ்., எனும் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை திட்டம்; என்.ஐ.சி., எனும் தேசிய தகவல் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சில கோவில்களில் தனியார் நிறுவனம் வாயிலாக வலைதளம் உருவாக்கி, அதை தற்போது வரை பராமரித்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய வலைதளங்கள் பாதுகாப்பு குறைபாடு, ஹாக்கர்ஸ் வாயிலாக தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.எனவே, அனைத்து கோவில்கள் இணைய தளமும் என்.ஐ.சி., நிறுவனம் வாயிலாக மட்டுமே உருவாக்கி பராமரிக்க வேண்டும். அதற்காக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் தொடர்பாக தகவல்கள் அனைத்தும் ஐ.டி.எம்.எஸ்., போர்ட்டல் வாயிலாக, என்.ஐ.சி., நிறுவனத்தால் உருவாக்கப்படும் இணைய தளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும்.தனியார் நிறுவனம் உருவாக்கிய கோவில் இணையதளங்களை, ஒரு வார காலத்திற்குள் மூட வேண்டும். இதை பின்பற்ற தவறினால், அதனால் ஏற்படும் இழப்புக்களை சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாவார். மேலும், சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.