பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா நாளை நடக்கிறது.
ராமானுஜர் வருகை பெற்ற திருத்தலம் என பாலமலை ரங்கநாதர் கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் சித்ராபவுர்ணமி தேர் திருவிழாவை ஒட்டி பெருமாள் தாயார்களுடன் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை செங்கோதை அம்மன் அழைப்பு நடந்தது. இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டையும், திங்கட்கிழமை தெற்போற்சவமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.