போடியில் கோவிந்தா கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 01:04
போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி கோவிந்தா ... கோவிந்தா .... கோபாலா... என்ற கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். இந்த ஆண்டு சித்திரை மாதம் குரு ஆதிக்கத்தில் பிறந்துள்ளது. குருவுக்கு மஞ்சள் பட்டு உகந்ததாகும். மஞ்சள் அனைவருக்கும் சுபிட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனையொட்டி இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் 5 அடி உயரத்தில் புதிதாக செய்யப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி அரோகரா .... கோவிந்தா .... கோபாலா.... என்ற கோஷத்துடன் காலை 6 மணியளவில் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்க முன்னாள் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டி , செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, பொருளாளர் கணேசன், நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாச பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுரேஷ் செய்திருந்தார்.
* உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜப் பெருமாள் முல்லை ஆற்றில் பக்தர்கள் பரவசத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சைப்பட்டு உடுத்தி முல்லை ஆற்றில் இறங்கினார். உப்புக்கோட்டை, உப்பார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* போடி அருகே தீர்த்தத்தொட்டி சித்திர புத்திரனார் கோயிலில் சித்திர புத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சித்திர புத்திரனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.