மயிலாடுதுறை : திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், அதைத்தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெறுவது வழக்கம். இதனை கொண்டாடும் விதமாக இன்று 12 சிவபெருமான்கள் திருகல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனை முன்னிட்டு திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக சமேத ஸ்ரீ மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாதசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர்சுவாமி கோயிலில் எழுந்தருளினர். சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு 12 சுவாமி அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருகல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் வேதபாராயணம் திருமுறை பாராயணம், கைலாய வாத்தியங்கள்,பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.